Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.

18 comments:

நெல்லைத் தமிழன் said...

எப்போதும்போல் மூன்று அதிரடிச் செய்திகளோடு வந்திருக்கிறீர்கள். ஆனாலும் மெதுவாகத்தான் பதிவு வெளியிடுறீங்க. அடிக்கடி வெளியிட்டால் என்னவாம்.

என் தனிப்பட்ட கருத்து, சிவாஜிக்கு மணி மண்டபம் நிறுவி ஒன்றும் ஆகப்போவதில்லை. சிலை நிறுவினாலும் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் மறக்கப்போவதில்லை. அரசு செலவில், யாருக்குமே சிலை, மணி மண்டபம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. குள்ளமாக இருக்கிறவர்களைத்தானே தூக்கிப்பிடிக்கவேண்டும்? 1971ல் சிறந்த நடிகரைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த வருடம் அவருக்குத்தான் என்று சிவாஜி பெயரை மனதில் வைத்துச் சொல்ல, யாரு, எம்ஜியாரா என்று ஒருவர் வெளிப்படையாகக் கேட்க, வேறு வழியில்லாமல் எம்ஜியார் பெயரை தேசிய விருதுக்கு மொழிந்தார்கள் என்று படித்திருக்கிறேன். சிவாஜிக்கு, தான் சார்ந்த அரசியல் காரணமாக விருது எதுவும் கிடைத்ததேயில்லை.(காமராஜினா, மத்தியவிருதும், தமிழக அரசியலினிலால் எந்த விருதும் கிடைக்கவேயில்லை. அவருடைய நடிப்புக் காலம் முடிந்தபின் ie Peak காங்கிரசில் சேர்ந்ததினால் ஒன்றுமே கிடைக்கவில்லை) ஆனாலும், மக்கள் மனதில் அவருக்கு உள்ள இடத்தை யாரால் பறிக்கமுடியும்? அதுக்கு மேலா இந்த சிலை, மணிமண்டபம் எல்லாம்?

'பொருளாதாரச் சீர்திருத்தம்' - நல்லது என்றுதான் நம்பிக் காத்திருக்கிறோம். 'காத்திருந்து காத்திருந்து' என்ற பாடல்போல் ஆகாமல் இருந்தால் சரிதான்.

தமிழ் மண வாக்கு/ரேங்க் - இது மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. 18 பேர் வாக்களித்தால் அது முதல் ரேங்க் வந்துவிடுகிறது. இதில் எந்த அர்த்தமோ பெருமையோ இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் இதனை எல்லோரும் Recognition என்று நம்புகின்றனர் (தெரிந்தோ தெரியாமலோ)

ஸ்ரீராம். said...

சிவாஜி கணேசன் பற்றிய கருத்துகளில் உங்களுடன் உடன்பாடு.

பொருளாதார விஷயங்கள் ஒன்றும் புரிவதில்லை. மக்கு நான்.

தமிழ்மணம் தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகி விடுகிறது. நாம் வாக்களித்தோமா என்பது சிலருக்கு சந்தேகம் ஆகிவிடுகிற சமயங்களில் முதலாம், இரண்டாம் சொல்ல வேண்டி வருகிறது. மற்றபடி, நாங்களும் அதைப் பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. மொபைல் மூலம் வாக்களிப்பவர்கள் வசதிக்காக அந்த வசதியயையும் அதிரா புண்ணியத்தில் அளிக்கிறோம்!

middleclassmadhavi said...

சிவாஜி கணேசன் மணிமண்டபம் குறித்து உங்கள் ஆதங்கத்தை நானும் வழிமொழிகிறேன். வாழும்போது கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது குறை தான்.
சிவாஜி படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது - பட முடிவில் 500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, கறுப்புப் பணம் அழிந்தது என்று வரிகள் ஓடின!! எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்ப்பது தான் தங்கள் வேலை என்று இருப்பவர்களைத் தள்ளுங்கள்!!

Unknown said...

மரியாதை செய்வதற்கு மணி மண்டபம் அல்ல ,ஒரு கோடி ஒதுக்கினால் நமக்கு எவ்வளவு ஒதுங்கும் என்பதற்குத்தான் :)

சொந்தக் கட்சியினரே திட்டம் படுதோல்வி என்ற பிறகு கேள்வியே கிடையாதே :)

காலையில் 'இன்றைய வலையுலகம் 'படித்து விட்டீர்கள் போலிருக்கே :)

Thulasidharan V Thillaiakathu said...

சிவாஜி கணேசன் மணிமண்டபம் தேவையற்றது என்பது எங்கள் தனிப்பட்டக் கருத்து. உங்கள் ஆதங்கத்துடன் தான்...

தமிழ்மணம் நாங்கள் அத்தனைப் பெரிதாகக் கருதவில்லை. ஆனால் ஒரு சிலருக்கு நாம் என்ன வாக்களித்தோம் என்று சொல்லத் தேவையாக இருப்பதால் சொல்ல வேண்டியுள்ளது. நாங்கள் பல இடங்களில் வாக்களிக்காமல் சென்றதுண்டு. சமீபத்தில்தான் வாக்களிக்கிறோம்...

கீதா: நம்புவோம் பொருளாதாரம் நல்லது நடக்கும் என்பதை...ஒரு சில விஷ்யங்களில் சரியான பாதையா என்றும் தோன்றுகிறது. நலல்து நடந்தால் சரி..

துளசிதரன், கீதா

settaikkaran said...

//ஆனாலும் மெதுவாகத்தான் பதிவு வெளியிடுறீங்க. அடிக்கடி வெளியிட்டால் என்னவாம்.//

இனி அடிக்கடி எழுதுவேன். நம்புங்கள். :-)

//ஆனாலும், மக்கள் மனதில் அவருக்கு உள்ள இடத்தை யாரால் பறிக்கமுடியும்? அதுக்கு மேலா இந்த சிலை, மணிமண்டபம் எல்லாம்?//

நானும் அதைத்தான் சொல்கிறேன் சார். I have only highlighted the hypocrisy of some people. Thats all.


//'பொருளாதாரச் சீர்திருத்தம்' - நல்லது என்றுதான் நம்பிக் காத்திருக்கிறோம். 'காத்திருந்து காத்திருந்து' என்ற பாடல்போல் ஆகாமல் இருந்தால் சரிதான்.//

கண்டிப்பாகத் தீமை நடக்காது என்று நம்புகிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் கண்கூடாகவே தெரிகிறது.

//தமிழ் மண வாக்கு/ரேங்க் - இது மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது.//

சுருக்கமாக, நாகரீகமாக ஆனால் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//சிவாஜி கணேசன் பற்றிய கருத்துகளில் உங்களுடன் உடன்பாடு.// மகிழ்ச்சி சார்! நன்றி. :-)

//பொருளாதார விஷயங்கள் ஒன்றும் புரிவதில்லை. மக்கு நான்.//

அது ஒண்ணுமில்லை சார். கூடிய விரைவில் நான் ஒரு நகைச்சுவைத் தொடர்வழியாக பொருளாதாரம் பற்றி எழுதலாமென்று யோசனையாய் இருக்கிறேன். பார்க்கலாம். :-)

//தமிழ்மணம் தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகி விடுகிறது. நாம் வாக்களித்தோமா என்பது சிலருக்கு சந்தேகம் ஆகிவிடுகிற சமயங்களில் முதலாம், இரண்டாம் சொல்ல வேண்டி வருகிறது.//


தமிழ்மண ஓட்டுக்களுக்காக சிலர் செய்கிற தகிடுதத்தங்களும்,கூட்டம் போட்டுக் கும்மியடிக்கிற டகால்டி வேலைகளும்தான் எனது ஆட்சேபத்துக்குரியவை. mutual admiration என்பதையெல்லாம் தாண்டி ஒரு தினுசான கோஷ்டி சேர்த்துக்கொண்டு, என்ன கண்றாவி எழுதினாலும் ஓட்டு வாங்கிவிட்டு ‘ நான் நம்பர் ஒன், நம்பர் டூ’ என்று கூவுவதுதான் அசிங்கம். அதைச் செய்கிறவர்களைத்தான் நானும், புதிதாக எழுத வருகிறவர்களும் அருவருப்பாய்ப் பார்க்கிறோம். அவ்வளவே!

எழுத்துக்களின் தரத்தின்மீது நம்பிக்கையில்லாமல் வெறும் ஓட்டைவைத்து பதிவுகளைத் திணிப்பதும் ஒருவிதமான அடக்குமுறை என்பது என் கருத்து. அதைச் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மிது எனக்கு மதிப்பு கிடையாது. இதைத்தான் நான் பதிவு செய்ய விரும்பினேன். அவ்வளவே.

வருகைக்கு மீண்டும் நன்றி. எனது ஆதங்கங்களின் ஆழத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியெம்ன்று நான் அறிவேன். அதற்கு இன்னொரு நன்றி.

settaikkaran said...

//வாழும்போது கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது குறை தான்.//

அதற்குப் பிராயச்சித்தம் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் சொதப்பியது இன்னொரு வருத்தம். :-(

//சிவாஜி படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது - பட முடிவில் 500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, கறுப்புப் பணம் அழிந்தது என்று வரிகள் ஓடின!! எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்ப்பது தான் தங்கள் வேலை என்று இருப்பவர்களைத் தள்ளுங்கள்!!//

நெகடிவிஸ்டுகளைப் பற்றி நானும் கவலைப்படுவதில்லை. ஆனால், அதிகமாக மிகைப்படுத்தி மக்களைப் பயமுறுத்துகிறவர்களுக்குக் குறைந்தபட்ச பொருளாதார அறிவு இருக்க வேண்டியது அவசியமென்றுதான் இதைப் பதிவு செய்தேன். மிக்க நன்றி. தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துகிறீர்கள். நன்றிகள் பற்பல.

settaikkaran said...

//மரியாதை செய்வதற்கு மணி மண்டபம் அல்ல ,ஒரு கோடி ஒதுக்கினால் நமக்கு எவ்வளவு ஒதுங்கும் என்பதற்குத்தான் :)//

அதெல்லாம் பெரிய விஷயமல்ல. மொத்தத்தில் காரியம் உரிய நேரத்தில் நடக்கவில்லை. அம்புட்டுத்தேன். :-)

//சொந்தக் கட்சியினரே திட்டம் படுதோல்வி என்ற பிறகு கேள்வியே கிடையாதே :)//

ஹாஹா! மன்மோகன்சிங் கொண்டுவந்த அரசாணையை ராகுல்காந்தி பொதுவெளியில் கிழித்துப்போட்டார். அவரைத்தான் நிறைய பேர் பொருளாதார மேதை என்று புகழ்கிறார்கள். கட்சி வேறு;ஆட்சி வேறு. :-)

//காலையில் 'இன்றைய வலையுலகம் 'படித்து விட்டீர்கள் போலிருக்கே :)??

ஆமா சார், நான் ”படித்ததை” நீங்களும் “படித்து” விட்டீர்கள் போலிருக்கிறதே?

திருநெல்வேலிக்கே அல்வாயா? சேட்டைக்காரனிடமே சேட்டையா? :-))))))))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார். :_)

settaikkaran said...

//சிவாஜி கணேசன் மணிமண்டபம் தேவையற்றது என்பது எங்கள் தனிப்பட்டக் கருத்து. உங்கள் ஆதங்கத்துடன் தான்...//

எனது கருத்தும் அதுதான். எனது ஆதங்கம் இதுவிஷயத்தில் பலர் கடைபிடிக்கிற இரட்டை நிலைப்பாடு குறித்ததுதான்.

//தமிழ்மணம் நாங்கள் அத்தனைப் பெரிதாகக் கருதவில்லை. //

தெரியும் சார், நான் குறிப்பிடுவது தமிழ்மண ஓட்டுக்காக, தரம்தாழ்ந்து கோஷ்டி சேர்த்து, ‘உன் முதுகை நான் சொறிகிறேன்; என் முதுகை நீ சொறி’ என்று அலைகிற சில பதிவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். இவர்களால் புதிதாக எழுத வருகிறவர்கள் முன்னுக்கு வர முடிவதில்லை. இது அராஜகம்.


//கீதா: நம்புவோம் பொருளாதாரம் நல்லது நடக்கும் என்பதை...ஒரு சில விஷ்யங்களில் சரியான பாதையா என்றும் தோன்றுகிறது. நலல்து நடந்தால் சரி..//

you can be rest assured. this government has more conviction and courage than any other government to deliver results. keep watching. thanks.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜி.எஸ்.டி பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.ஆனால் கட்டுமானப் பணிகளில் மொத்த மதிப்பீட்டிற்கு 12% வரி செலுத்த வேண்டும். முந்தைய வரி வீதம் 4.5%.முன்பு சேவை வரி 15% ஆனால் மொத்த மதிப்பீட்டில் 30% தொகைக்கு 15% செலுத்தினால் போதுமானது. அதாவது 15%*30%=4.5%. நான் கூடுதலாக 5 லட்சம் செலுத்த வேண்டிய சூழலில் உள்ளேன். கூடுதல் கடன் பெற வேண்டி இருப்பதால் மேலும் சில ஆண்டுகள் கடனாளியாக திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தற்போதைய அரசியல் நிலைப்பாட்டால் மணல் விலை தாறுமாறாக ஏறி ஏன்தான் வீடு கட்ட ஆரம்பித்தோமோ என்று நாள்தோறும் அவதியுறுகிறேன்.
சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருது நிச்சயம் வழங்கப் பட்டிருக்க வேண்டும். சிவாஜியை தலையில்ம தூக்கி வைத்துய்க்ணி கொண்டாடும் ரஜினி, கமல் இருவரும் நினைத்தால் மணி மண்டபம் கட்டிவிட முடியும் இதற்கு அரசை வற்புறுத்தியது தேவையற்றது. தமிழ் மனத்தின் த.ம.வழக்கம் குறைந்துள்ளது. சில் நேரங்களில் கம்மென்ட் என்ன போடுவது என்று தெரியாது . அதற்கு த.ம. உதவுகிறது

KILLERGEE Devakottai said...

சிவாஜி கணேசனால் மட்டுமல்ல எந்த ஒரு நடிகனாலும் மக்களுக்கு பிரயோசனம் இல்லை அவர்கள் நடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்தார்கள். அவர் நல்ல நடிகர் இது உலகறிந்த விடயம் அவர் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

ஜி.எஸ்.டி. இன்னும் எனக்கு புடிபடாத விடயம்

தமிழ் மணம் வந்தால் வரவு வராவிட்டால் வரவில்லை இதைப்பற்றி யோசிக்கும் நேரத்தை பதிவு எழுத செலவு செய்வோம் எழுதுவது நமது கடமையாக நினைப்போம் எழுதுவோம்
நன்றி நண்பரே

G.M Balasubramaniam said...

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் தேவை இல்லாதது அதிலு அவர் சிலையின் அடியில் இருந்த வாக்கியங்களை ந்நிக்கி ஒரு விவகார மாக்குவது இன்னு தேவை இல்லாதது நீங்கள் கேள்விப்பட்டிர்களா மோடிக்கு கோவில்கட்டப் போகிறார்களாம்

settaikkaran said...

//டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று//

//ஜி.எஸ்.டி பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.//

எனக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால், வரிவிதிப்பு சதவிகிதங்கள் அனைத்து மாநிலங்களின் பெரும்பான்மையான ஒப்புதலுடன் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு, சொத்து, வாகனங்கள் போன்ற விஷயங்களில் சற்று அதிகப்படியாக விதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

//சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருது நிச்சயம் வழங்கப் பட்டிருக்க வேண்டும். //

அதுகூட பிரச்சினையில்லை. அவர் இறந்தபிறகு, அவரது சிலையை வைத்தும், நினைவுமண்டபத்தை வைத்தும் அரசியல் செய்ததுதான் வெட்கத்துக்குரியது.

//தமிழ் மனத்தின் த.ம.வழக்கம் குறைந்துள்ளது. சில் நேரங்களில் கம்மென்ட் என்ன போடுவது என்று தெரியாது . //

எனக்கு வேறுமாதிரியான தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வந்துகொண்டிருக்கின்றன. அதை ஊர்ஜிதம் செய்வதுபோல சில விரும்பத்தகாத நிகழ்வுகளை இன்றளவிலும் நான் பார்க்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி சார்! :-)

settaikkaran said...

//Blogger KILLERGEE Devakottai//

//எந்த ஒரு நடிகனாலும் மக்களுக்கு பிரயோசனம் இல்லை அவர்கள் நடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்தார்கள்.//

ஒட்டுமொத்தமாக ஒரே தராசில் அனைவரையும் எடைபோடுகிறீர்கள். நன்று. அது உங்கள்து கருத்து.

//ஜி.எஸ்.டி. இன்னும் எனக்கு புடிபடாத விடயம்//

புரிபடுவதற்கு அதில் ஒன்றுமில்லை. இணையத்தில் எளிதில் புரிந்துகொள்வதற்கான கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துவிட்டன.

//தமிழ் மணம் வந்தால் வரவு வராவிட்டால் வரவில்லை இதைப்பற்றி யோசிக்கும் நேரத்தை பதிவு எழுத செலவு செய்வோம் எழுதுவது நமது கடமையாக நினைப்போம் எழுதுவோம் நன்றி நண்பரே//

தமிழ்மணம் தளம் மீது எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நான் ஒரு சுண்டைக்காய். ஆனால், தமிழ்மணம் ஓட்டுக்களுக்காக நிகழ்கிற சில சங்கதிகள் எனக்கு மட்டுமல்ல; பல பதிவர்களுக்கு ஒரு விதமான அசூயையை ஏற்படுத்தியிருப்பதை நான் நீண்ட காலமாகவே அறிவேன். என்னைப் பொறுத்தவரை, எழுதுகிற மூட் ரொம்ப முக்கியம். தமிழ்மணம் ஓட்டே போட வேண்டாம் என்று கருத்து எழுதுகிற இடத்தில் கோரிக்கையே வைத்திருக்கிறேன். I am not in this rat race.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

settaikkaran said...

//சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் தேவை இல்லாதது அதிலு அவர் சிலையின் அடியில் இருந்த வாக்கியங்களை ந்நிக்கி ஒரு விவகார மாக்குவது இன்னு தேவை இல்லாதது நீங்கள் கேள்விப்பட்டிர்களா மோடிக்கு கோவில்கட்டப் போகிறார்களாம்//

டெல்லியில் வரிசையாக இருக்கிற தலைவர்கள் சமாதிகள் மிக முக்கியமோ சார்? சென்னை மெரீனாவில் இருக்கிற சமாதிகள்? வரிசையாக வைத்திருக்கிற சிலைகள்? உங்களது தனிப்பட்ட கருத்தை நான் மதிக்கிறேன் சார். ஆனால், சிவாஜியை அவமதிக்கிற செயலாவது செய்யாமல் இருக்கலாம். அவ்வளவுதான் எனது வாதம்.

மோடிக்குக் கோவில் கட்டுகிறவர்கள் அவர்கள் விருப்பப்படி கட்டுகிறார்கள். நாம் யார் தடுக்க?

வருகைக்கு நன்றி ஐயா.

Unknown said...

பதிவு நன்று! எல்லாமே அரசியல் ஆகி விட்டது

Musta said...

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழ் ஆபாச வீடியோ