Sunday, July 9, 2017

பாலாமணியும் பாகு’பல்லி’யும்

பாலாமணியும் பாகு’பல்லி’யும்


பாலாமணி அடுக்களையிலிருந்து விரைந்து வந்த அதிர்வில், கிட்டாமணியின் மூக்குக்கண்ணாடி நழுவி நாக்குக்கண்ணாடியானது.


”வீட்டைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம, ஆதித்யா டிவியைப் பார்த்து கெக்கெபிக்கேன்னு சிரிச்சிட்டிருக்கீங்களே! இது உங்களுக்கே நல்லாயிருக்கா?”


காஸ்ட்யூம் மாற்றிவந்த காஞ்சனா பேய் போல, மூச்சிரைத்தவாறு முழியை உருட்டி நின்ற மனைவியைப் பார்த்த கிட்டாமணி ஒரு கணம் வெலவெலத்தாலும் சுதாரித்துக் கொண்டான்.


”அபாண்டமாப் பேசாதே!” கிட்டாமணி வெடுக்கென்று பதிலளித்தான். “வாய்விட்டுச் சிரிச்சா ஆதித்யா டிவி பார்க்கறேன்னு அர்த்தமா? நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு!”


”போதும் உங்க தேசவிசாரம்!” பாலாமணி கோபத்துடன் இரைந்தாள். “ஒரு நிமிஷம் அடுக்களைக்கு வந்து பாருங்க அநியாயத்தை!”


”அநியாயமா?” கிட்டாமணி குழம்பினான். “அடுக்களையிலே 25 வருஷமா  நீதானே அநியாயம் பண்ணிட்டிருக்கே?”


”என் சமையலையா கிண்டல் பண்றீங்க?” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க!”


”பார்த்தியா? உன் சமையலைப் பத்திப்பேசினா, நீயே குப்பைத்தொட்டியைப் பத்திப் பேசறே!”


”நீங்களா இப்படி வாயடிக்கிறீங்க?” பாலாமணியின் குரலில் அதிர்ச்சியும் வியப்பும்  சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது.


“சரிசரி, அடுக்களையிலே என்ன அநியாயம் சொல்லித்தொலை! நான் புதுசா டாண்டெக்ஸ் ஜட்டி வாங்கினதை ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடணும்.”


”ஜட்டி வாங்கினதையெல்லாமா ஃபேஸ்புக்குல ஸ்டேடஸாப் போடுவாங்க?”


”நீ வேற, அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”


”எப்படியோ போங்க! இப்ப கிச்சனுக்கு வாங்க! இப்படியே போச்சுன்னா இனிமே நான் அடுக்களைப்பக்கமே போக மாட்டேன்.”

”அட, இன்னிக்கு நல்ல செய்தி வரும்னு ஹரிகேசவ நல்லூர் வெங்கட்ராமன் இதைத்தான் டிவியிலே சொன்னாரா?”


”முதல்லே அடுக்களைக்கு வந்து பாருங்க! உங்க பேச்சு சுத்தமா நின்னுடும்!”


‘வழக்கமா சாப்பிட்டதுக்கப்புறம்தானே பேச்சு நிக்கும்?’ குழம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கிட்டாமணி.


”ஜன்னல் கதவு திறந்திருக்கு பார்த்தீங்களா?”


”இதுவா அநியாயம்? இது திறந்திருக்கப்போய்த்தானே பக்கத்துவீட்டுல விஜிடபிள் பிரியாணியா சிக்கன் பிரியாணியான்னு கண்டுபிடிக்க முடியுது?”


”ஏன்? நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?”


“மறக்க முடியுமா?” கிட்டாமணி பெருமூச்சு விட்டான். ”அதுக்கப்புறம்தானே கோழிக்கறியையும் தடைபண்ணுங்கன்னு மோடிக்கு மகஜர் அனுப்பினேன்.”


“அன்னிக்கு விழுந்து விழுந்து சாப்பிட்டீங்க! இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க!”


“உனக்கு ஐ.பி.ஸி.கோட் தெரியலேன்னா நான் என்ன பண்ணட்டும்?”


”ஜெயலலிதா இல்லேன்னதும் ஆம்பிளைங்க ஓவராப் பேச ஆரம்பிச்சிட்டாங்க!.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க!”


”என்ன அநியாயம்?” எரிச்சலில் கூச்சலிட்டான் கிட்டாமணி.”திரும்பத் திரும்ப அநியாயம் அநியாயம்னு டீஸர் ரிலீஸ் பண்றியே தவிர மெயின் பிக்சரை ரிலீஸ் பண்ணவே மாட்டேங்கிறியே?”


”சுவத்துல என்ன இருக்கு பாருங்க!”


”சுவத்துலயா?  ஒட்டடை இருக்கு! வழக்கமா நம்ம வெடிங் ஆனிவர்சரி வரும்போதுதானே ஒட்டடையடிப்பேன்? அப்பப் பார்த்துக்கலாம்.”


”நான் சொல்ல வந்ததே வேறே!” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க?”


”என் ரேஞ்சுக்கு நான் அதைத்தானே அடிக்க முடியும்.”


”சரிசரி, முதல்ல இந்த அநியாயத்தை….”


”கடுப்பேத்தாதே பாலா!” கிட்டாமணி இடைமறித்து எட்டுக்கட்டையில் கூவினான். “மரியாதையா என்ன மேட்டர்னு சொல்றியா இல்லே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்குக் கூட்டிட்டுப் போட்டுமா?”


”சுவத்துல கருகருன்னு ஒரு பல்லி இருக்கு பாருங்க!”


அப்போதுதான் கவனித்தான். சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.


”ஆமாம்; பல்லி!”


”அப்பாடா! இப்பவாச்சும் பார்த்தீங்களே?”


”நேரடியா அடுக்களையிலே ஒரு பல்லியிருக்குன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே?”


”எனக்குப் பல்லின்னாலே ரொம்ப பயம்,” பாலாமணி கிட்டாமணியிடம் ஒண்டிக்கொண்டாள். “அதுலயும் இந்தப் பல்லியைப் பாருங்க, குண்டுகுண்டா, கொழுக்மொழுக்குன்னு பாகுபலி பிரபாஸ் மாதிரியே இருக்கு.”


”அப்ப அனேகமா அனுஷ்கா பல்லியும் இருந்தாகணுமே!”


”ரொம்ப முக்கியம்! முதல்லே அந்தப் பல்லியைத் துரத்துங்க!”


”ஒரு காப்பி போடேன்!”


”பல்லியைத் துரத்தறதுக்குக் காப்பி குடிக்கணுமா?”


”குடிக்க வேண்டாம். நீ காப்பி போட்டா அந்த வாசனைக்கே அது கூவத்தூருக்குக் குடிபோயிடும்.”


”ஒரு பல்லிக்கு முன்னாலே என்னை அவமானப்படுத்தாதீங்க! இந்தப் பல்லி இருக்கிறவரைக்கும் வீட்டுல அடுப்புப் பத்த வைக்க மாட்டேன். அப்புறம் வெளியிலேதான் சாப்பாடு.”


”எனக்கு அரை டஜன் இட்லிபோதும்; உனக்கென்ன வாங்கிட்டு வரட்டும்?”


”ஒண்ணும் வேண்டாம்! பல்லி போறவரைக்கும் நீங்க சமையல் பண்ணுங்க! ஓ.கேயா?”


”அப்ப போனவாட்டி வாங்கின ஜெலூசில் இன்னும் ஸ்டாக் இருக்கா?”


“இப்பத்தான் புரியுது,” அரசியல்வாதி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிபோலச் சிரித்தாள் பாலாமணி. “உங்களுக்குப் பல்லின்னா பயம். அதான் எதெதையோ சொல்லி ஜகா வாங்கறீங்க.”


”நான் பாம்பையே அடிச்சிருக்கேன் தெரியுமா?” இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினான் கிட்டாமணி.


”போதும் போதும்!” அங்கலாய்த்தாள் பாலாமணி. ”சென்னையிலே தண்ணிப்பஞ்சம் வருது. ஒழுங்காப் பம்பு அடிக்கக் கத்துக்குங்க. பாம்பை அடிக்கிறாராம்.”


கிட்டாமணி கிளர்ந்தெழுந்தான்.


”அனாவசியமா என் வீரத்தைக் கிளப்பிவிடாதே! இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு! இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கணும்; இல்லை இந்தப் பல்லி இருக்கணும். இரண்டில ஒண்ணு பார்த்திடறேன்.”


ஐந்து நிமிடத்தில் கிட்டாமணி வீட்டை விட்டுக் கிளம்பினான்.


”என்னங்க, வீட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வெளியே போனா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க!”


”சும்மாயிரு பாலா, இந்தக் கிட்டாமணி முன்வைச்ச காலைப் பின்வைக்க மாட்டான்.”


”ஐயோ! சொல்றதைக் கேளுங்க,” எரிச்சலுடன் கூறினாள் பாலாமணி. “ நீங்க வேஷ்டின்னு நினைச்சு பெட்ஷீட்டைக் கட்டிக்கிட்டு வெளியே கிளம்பறீங்க!”


கிட்டாமணிக்குத் தனது வரலாற்றுப்பிழை புரிந்தது. மீண்டும் அறைக்குச் சென்று, பெட்ஷீட்டை அவிழ்த்துவிட்டு, வேஷ்டியை எடுத்தவன், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று, பெட்ஷீட் இருந்த இடத்திலிருந்து ஒரு பத்து அடி தள்ளி நின்று கட்டிக்கொண்டு கிளம்பினான்.


”அடுக்களையிலே இருக்கிற பல்லியை விரட்டச்சொன்னா, இவர்பாட்டுக்கு வெளியே கிளம்பிட்டாரே, ஒருவேளை வள்ளூவர்கோட்டம் பக்கத்துல போய் போராட்டம் பண்ணுவாரோ?”


அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி. சில நிமிடங்கள் கழித்து, கிட்டாமணி கையில் சில அட்டை டப்பாக்களுடன் வீடு திரும்பினான்.


”என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?”


”சீக்ரட்!” என்று கம்பீரமாகக் கூறியவாறே அடுக்களைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் கிட்டாமணி. சிறிது நேரத்துக்கு உள்ளேயிருந்து கடமுடா கடமுடாவென்று சத்தம் கேட்டது. பிறகு, வெளியே வந்து கிட்டாமணியைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். அவனது முகத்தில், வாஷர் போன குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல பெருமை ஒழுகியது.


”இனிமேல் பல்லி மட்டுமில்லை; புழுபூச்சி கூட நம்ம வீட்டுக்குள்ளே வராது.”


பாலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சில நிமிடங்கள் கழித்து அடுக்களைக்குள் சென்றபோது, பல்லியைக் காணவில்லை. வழக்கமாக ‘சின்க்’ பக்கம் அணி அணியாய்ப் பிரிந்து ஐ.பி.எல்.விளையாடும் கரப்பான் பூச்சிகள் கூடக் காணாமல் போய்விட்டன.


இரவு வந்தது. பழைய படங்களில் வரும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிபோல, கையில் பால் டம்ளருடன் கணவரை நெருங்கினாள் பாலாமணி.


“ஆனாலும் நீங்க ரொம்ப கெட்டிக்காரர்தான்,” குக்கரில் வேகவைத்த குதிரைவால் அரிசிபோலக் குழைந்தாள் பாலாமணி. “அரை மணி நேரத்துல பல்லி, பாச்சா எல்லாத்தையும் விரட்டி அடுக்களையைச் சுத்தமாக்கிட்டீங்களே!  உங்களுக்கு உடம்பெல்லாம் ஊளைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன்; உடம்பெல்லாம் மூளைன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது.”


கிட்டாமணி ரொமாண்டிக்காக மனைவியைப் பார்க்க, ஒரு கணம் அவளுக்குக் காணாமல்போன பல்லி ஞாபகம் வந்தாலும், சமாளித்தாள்.


“சொல்லுங்க, என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க? ப்ளீஸ், சொல்லுங்க!”


“கொஞ்சம் செலவு பண்ணினேன் பாலா,” சிரித்தான் கிட்டாமணி. ”ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போயி ரெண்டு சி.சி.டிவி கேமராவும், மைக்ரோபோனும் வாங்கிக் கொண்டுவந்து சும்மா அடுக்களையிலே மறைவா வைச்சேன். அதைப் பார்த்திட்டு பல்லி பயந்து ஓடிப்போயிடுச்சு.”


“எனக்குப் புரியலியே!” பாலாமணி மீண்டும் குழம்பினாள். “சிசிடிவியும், மைக்கும் வைச்சா பல்லி ஏன் பயப்படணும்?”


“ஏன்னா, கேமிராவையும் மைக்கையும் பார்த்ததும் பல்லிக்கு, நாம அதை வைச்சு ‘பிக்-பாஸ்’ மாதிரி ரியாலிட்டி ஷோ நடத்தறோமோன்னு சந்தேகம் வந்திருச்சு. ஆயிரம் இருந்தாலும் பிராணிகள் இல்லையா? மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா? இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு!”

பி.கு: பிரபாஸ் பல்லி படம் கிடைக்காததால், தமன்னா பல்லி படம் மேலே தரப்பட்டுள்ளது என அறிக.

25 comments:

Unknown said...

#சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது#
நீண்ட இடைவெளிக்குப் பின் சன்னி லியோனின் ...அடச்சீ ....சேட்டைகாரனின் பதிவை ரசிக்க முடிந்தது :)

middleclassmadhavi said...

Very humorous story with latest naattu nadappu!!

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... சேட்டை is back with a bang!

ரசித்தேன்.

G.M Balasubramaniam said...

ஓ அதுதான் தமனா பல்லியா வெகு நாட்களுக்குப் பின் நீங்கள் பதிவில்....!

நெல்லைத் தமிழன் said...

இத்தனை நாள் பி.பி பாத்துட்டு இப்போதான் பதிவு எழுதலாம்னு தோணிச்சா? நல்லா எழுதியிருக்கீங்க (எப்போதும்போல்)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்...

தொடர்ந்து எழுதுங்க தல...

பி.பிரசாத் said...

க்ரேஸி ஸ்டைலில், வரிக்கு வரி 'ரவுசு...' - ரசித்தேன்..!

விஸ்வநாத் said...

// நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். //
// அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”//

இன்னும் பல வரிகள் அருமை.


But

// நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?” // பாலா கிட்டா வெஜிடேரியன் இல்லியா ? அய்யய்யோ .

ஸ்ரீராம். said...

வரி வரியாய் ரசித்துப் படித்தேன் ஜி. அடிக்கடி எழுதாமல் அநியாயம் .. .ஓவியாவுக்கு ஒட்டு போடும் பிக் பாஸ் ரசிகன் மாதிரி தம வாக்குப் போட்டு விட்டேன்.

settaikkaran said...

Blogger Bagawanjee KA
//நீண்ட இடைவெளிக்குப் பின் சன்னி லியோனின் ...அடச்சீ ....சேட்டைகாரனின் பதிவை ரசிக்க முடிந்தது :)//

இந்தப் பதிவால நிறைய சன்னி லியோனி ரசிகர்கள் பத்தித் தெரியவரும் போலிருக்கே! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

Blogger middleclassmadhavi said...
//Very humorous story with latest naattu nadappu!!//

romba nanri! varugaikkum karuththukkum!! :-)

settaikkaran said...

Blogger வெங்கட் நாகராஜ் said...
//ஹாஹா.... சேட்டை is back with a bang!

ரசித்தேன்.//

எல்லாம் உங்களைப் போன்ற அடாது எழுதும் பதிவர்களைப் பார்த்து வந்த உந்துதல் தான்! மிக்க நன்றி வெங்கட்ஜி!

settaikkaran said...

Blogger G.M Balasubramaniam said...
// அதுதான் தமனா பல்லியா வெகு நாட்களுக்குப் பின் நீங்கள் பதிவில்....!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

settaikkaran said...

Blogger நெல்லைத் தமிழன் said...
//இத்தனை நாள் பி.பி பாத்துட்டு இப்போதான் பதிவு எழுதலாம்னு தோணிச்சா? நல்லா எழுதியிருக்கீங்க (எப்போதும்போல்)//

இத்தனை நாள் BB இருந்ததா என்ன? :-)
ஓஹோ, ஹிந்தியில பீபின்னா வூட்டுக்காரின்னு அர்த்தம். அதைச் சொல்றீங்களா? சரி, மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
//ஹா... ஹா... ரசித்தேன்...

தொடர்ந்து எழுதுங்க தல...//

மிக்க நன்றி வலைச்சித்தரே! தங்கள் சித்தம் என் பாக்கியம்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Blogger பி.பிரசாத் said...
//க்ரேஸி ஸ்டைலில், வரிக்கு வரி 'ரவுசு...' - ரசித்தேன்..!//

கிரேஸி மாதிரியா இருக்கு? :-) கேட்டா தப்பா நினைச்சுக்கப் போறார் பாவம்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Blogger விஸ்வநாத் said...
// நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். //
// அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”//

இன்னும் பல வரிகள் அருமை.


But

// நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?” // பாலா கிட்டா வெஜிடேரியன் இல்லியா ? அய்யய்யோ .

பாலாமணி காஸ்மாபாலிடன் ஆயி ரொம்ப நாளாச்சே! இதைப் பத்தி இன்னொரு பதிவு எழுதறேன் கூடிய சீக்கிரம். :-) மிக்க நன்றி!

settaikkaran said...

Blogger ஸ்ரீராம். said...
//வரி வரியாய் ரசித்துப் படித்தேன் ஜி. அடிக்கடி எழுதாமல் அநியாயம் .. .ஓவியாவுக்கு ஒட்டு போடும் பிக் பாஸ் ரசிகன் மாதிரி தம வாக்குப் போட்டு விட்டேன்.//

அப்ப ஓவியாவுக்குப் போட்ட ஓட்டுல ஒண்ணு யாருதுன்னு தெரிஞ்சு போச்சு! :-)
இனி அடிக்கடி எழுத முயற்சி பண்ண..னும்! :-)
மிக்க நன்றி!

Thangaraj said...

Sir where I am buy your books

நெல்லைத் தமிழன் said...

சேட்டை சார்,. அது பீவி இல்லையா? Big Boss conceptல எனக்கு வாழ்க்கைக்கான மெசேஜ் இருக்கற மாதிரி தெரியுது. (எல்லா கேரக்டர்ஸும் பார்த்தீங்கன்னா, வாழ்க்கைல முக்காவாசி பிரச்சனையை கொண்டுவர்றது பெண்கள்தான் இல்லயா?). சந்தடி சாக்குல எங்க தமன்னாவைக் குறைச்சு எழுதியிருக்கற மாதிரி தெரியுது. கபர்தார் (அப்படீன்னா ஜாக்கிரதைனு அர்த்தமா?)

அப்பாதுரை said...

ரொம்ப நாளாச்சு.. சிரிக்க வைக்கும் எழுத்தைப் படிச்சு.. நன்றி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ் சேட்டைக்காரரின் சேட்டை தொடங்கிவிட்டதா!!!! ரசித்து வாசித்தோம்..

கீதா: சேட்டை அண்ணா பேக் டு ஃபார்ம்??!!!!! தொடர்ந்து எழுதுங்க...சிரிச்சு முடில...இன்னிக்கு எங்கள் ப்ளாக்ல உங்க கதை படிச்சு சிரிச்சுட்டு அப்படியே சும்மா இங்க எட்டிப் பாப்போம்னு பாத்தா உங்க பாகுபலி ஸாரி பாகு பல்லி!!!

Thulasidharan V Thillaiakathu said...

அது சரி அந்த ஓவியா பொண்ணு அப்படி என்னதான் பண்ணிச்சு...அதுக்கு இம்மாம் பெரிய ரசிகர் கூட்டம் அதுவும் ஓட்டு போடற அளவுக்கு!!! ஸ்ரீராம், சேட்டை அண்ணா உட்பட!!ஹிஹிஹிஹி

கீதா

கோமதி அரசு said...

சிரித்தேன் படித்து.

//சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.//

பாவம் டிவி சீரியல் ஹீரோ.


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலைப்புல ஆரம்பிச்சு முடியற வரை அட்டகாசம்.சேட்டையின் மற்றுமோர் நகைச்சுவை விருந்து.