Sunday, December 2, 2012

நளபாகம்-வெந்நீர் போடுவது எப்படி?


தமிழில் வெந்நீர்எனப்படுவது ஆங்கிலத்தில் ஹாட் வாட்டர்,’ என்றும், ஹிந்தியில் கரம் பானி,என்றும் ஜப்பானிய மொழியில் ஹை-யை-யோ என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். ஆண்களாகிய நமக்கும் அவ்வப்போது சவரம் மற்றும் குளியல் வரைக்கும் தேவைப்படுகிற இந்த வெந்நீரானது நமது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாகி விட்டது என்றால் மிகையாகாது. வெந்நீர் போடுவது எப்படியென்பதை அறிந்து கொள்வதற்குள்ளாக, வெந்நீர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அவசர அவசரமாக அடுக்களை சென்ற ஆண்கள், திரும்பி வந்து, ஆற அமர இந்தப் பதிவைப் படிப்பது வெந்நீர்குறித்த அவர்களது பொது அறிவை வளர்க்கும்.

     வெந்நீர் மனிதனின் கண்டுபிடிப்பில் மிக அரியது.என்று கி.பி.1567-ம் ஆண்டு வாழ்ந்த ஹாட்லாண்டைச் சேர்ந்த டாக்டர்.பாயில்மேன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

     இதே போல பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுக்குநீரகர் என்னும் சித்தர் இது வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத தனது சுவடியில் வெந்நீரின் சிறப்பு குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதைப் படித்தறிக:

     "ஈரமுடன் இருப்பதற்கே எருதுகளுங் குளித்திடவே
     ஊரதனில் உள்ளதன்றோ ஓர்குளமே-சாரமுறு
     சொதிக்குண்டு சுடுதோசை சோறுண்ணப்போவதன்முன்
     கொதிக்கின்ற நீரில் குளி"

(நன்றி: புரூடா பதிப்பகம்)

     தோசையோ,சொதியோ,சோறோ உண்ணுகிற பொருள் எது சூடாயிருந்தாலும் அதை உண்பதற்கு முன்னர், சுடுதண்ணியில் குளித்திட வேண்டுமென்று வலியிறுத்தியிருப்பதைக் காண முடிகிறதல்லவா? எனவே, ஆணாகப் பிறந்த நாமெல்லாம் வீணாகக் காலத்தைக் கடத்திடாமல் வெந்நீர் போடுவதைப் பற்றி அறிந்து கொள்வது நமது தன்னம்பிக்கையை வளர்த்திடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

     வெந்நீர் போடுவதற்கு முன்னர், நாம் ஏன் வெந்நீர் போடுகிறோம் என்ற குறிக்கோள் நமக்குப் புரிந்திருத்தல் மிக அவசியம். குடிப்பதற்கா குளிப்பதற்கா என்று புரியாமல் வெந்நீர் போடுவது போன்ற விரயமான செயல்களை ஆண்கள் செய்யாதிருத்தல் நலம். குடிப்பதென்றால் குண்டா; குளிப்பதற்கு அண்டா,என்ற குளித்தலை குளியாமொழியின் கூற்றை இவ்வமயத்தில் நினைவில் நிறுத்துவது நன்று.

     வெந்நீரைப் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொண்டு விட்டபடியால், அடுத்து வெந்நீர் போடுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு காகிதத்தில் பின்வருகிற பொருட்களின் பட்டியலைக் குறித்து வைத்தல் சாலச் சிறந்தது.



வெந்நீர் போடத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள்:-

1. பர்னால் அல்லது ஏதாவது ஒரு ஆயின்மென்ட் (எசகுபிசகாக காலில் வெந்நீரைக்     கொட்டிக் கொண்டு விட்டால் போட்டுக்கொள்ள)

2.டெலிபோன்டைரக்டரி-அருகிலிருக்கிற மருத்துவமனைகள் / டாக்டர்கள் / ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றின் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொண்டாலும் போதும்) தீயணைப்புத் துறை /காவல்துறை தொலைபேசி எண்களையும் வைத்திருந்தால் பாதகமில்லை.

3. பாதுகாப்பு அங்கி(கோணிப்பையையும் உபயோகிக்கலாம்)

4. ரப்பர் காலணிகள்

5.கையுறைகள் மற்றும் கால்மறைப்புகள். (மகனின் கிரிக்கெட் சமாச்சாரங்களையும் பயன்படுத்தலாம்)

6.ஹெல்மெட்(துணிச்சலானவர்கள் இதைத் தவிர்க்க விரும்பினால் அது அவர்கள் தலைவிதி!)

7. தர்மாமீட்டர்
  
* விளக்கப் படத்தைப் பார்க்கவும்

     #இது தவிர பொசுங்கலூர் வெந்தசாமி எழுதிய தீக்காயமா? என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பதும் நன்மை பயக்கும்.

     மேற்கூறிய பொருட்கள் தவிரவும், வெந்நீர் போட மேலும் சில பொருட்களும் தேவைப்படுகின்றன். அவையாவன:



1.         பாத்திரம் (தேவைக்கேற்ப அண்டா அல்லது குண்டா)
2.         தண்ணீர் (அதுவும் தேவைக்கேற்பவே!)
3.         இடுக்கி (இது இல்லாமல் வெந்நீர் போடுவது அபாயகரமானது)
4.         நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி அல்லது நல்ல லைட்டர்.


இடுக்கியொன் றிருப்பின் இன்முகங்கொண்டுதினம்
அடுக்களை போவான் ஆண்  என்ற திரிக்குறளை நினைவில் கொள்ளுக.

     மேற்கூறிய பாதுகாப்பு சங்கதிகளை அணிந்து கொண்டபின், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து விட்டு தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கவும். அல்லது அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மேல் வைத்து அப்புறமாக அதில் தண்ணீரை ஊற்றுவதாலும் பாதகமில்லை. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுக்கும் அடுப்புக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரையடியாவது இடைவெளியிருக்க வேண்டும். முதல் முறையாக வெந்நீர் போடுபவர்கள், தரையில் சரியான தூரத்தை அளந்து, சாக்பீஸால் கோடு போட்டு வைத்துக்கொள்வது நல்லது.

     சிறிது நேரத்திலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிறியதும் பெரியதுமாகக் கொப்பளங்கள் வருவதைக் கண்டு பயந்து விடக்கூடாது. பயந்த சுபாவமுள்ளவர்கள் வெந்நீர் தயாராகும் வரையில் அச்சம் என்பது மடமையடா.என்ற பழைய பாடலையோ, ’அச்சம் தவிர்,’ என்ற புதிய பாடலையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கலாம். நம்பிக்கையுள்ளவர்கள் அவரவர் இஷ்டதெய்வத்தை வணங்கிவிட்டு வெந்நீர் போட ஆரம்பிப்பதிலும் எந்தத் தவறுமில்லை.

     நிமிடத்துக்கொரு முறையாவது கொதிக்கின்ற பாத்திரத்துக்கு நேராக, சுமார் ஒண்ணேகால் அடி தூர உயரத்தில் தர்மாமீட்டரை வைத்து, வெந்நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது என்று பரிசோதித்துக்கொள்வது நலம். உங்களுக்கு எவ்வளவு சூடான வெந்நீர் வேண்டுமென்பது, உங்களுக்கு இருக்கிற தனிப்பட்ட (அ) சூடு, (ஆ) சொரணை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் தேவைக்கேற்பக் கொதிக்க வைக்கவும். ((அ) மற்றும் (ஆ) இவையிரண்டும் இல்லாதவர்கள் கட்டுரையாசிரியரைப் போல வெந்நீர் போட்டு நேரத்தை விரயம் செய்யாமல், குளிர்ந்த நீரில் குளிப்பதே சாலச் சிறந்தது.)

     உங்களுக்குத் தேவையான சூட்டோடு வெந்நீர் தயாரானதும் மறக்காமல் அடுப்பை அணைத்து விட்டு, இடுக்கியால் பாத்திரத்தை இறுக்கமாகப் பிடித்து இறக்கி வைக்கவும்.

     இதோ, சுடச்சுட வெந்நீர் தயார்!

     இம்முறைப்படி வெந்நீரை வெற்றிகரமாகத் தயாரித்தவர்களே, அடுத்து டீபோடுவது எப்படி என்று பார்க்கலாமா? அதுவரை, சூடுபட்ட உங்களது விரல்களுக்கு பர்னால் போட்டுக்கொண்டிருக்கவும்.


பின்குறிப்பு: இது 20.07.2009 அன்று நான் கூகிள் குழுமங்களில் எழுதியது. (அப்போ ஆரம்பிச்சவன் இன்னும் திருந்தலை!)

42 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சூடான பதிவு.

பயனுள்ள பதிவு.

முன்னெச்சரிக்கைகள் அபாரம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

சுடச் சுட வென்னீர்...

அட நல்ல சூடாவே இருக்கு உங்கள் பகிர்வும்....

ஒரு சின்ன டவுட். கேஸ் பத்த வைப்பது எப்படின்னு இதுக்கு முன் பதிவு போட்டிருக்கக் கூடாதா சேட்டை! :)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்...

பின்குறிப்பு : இது போல் என்றும் தொடரவும்-சிரிக்க வைக்க...

பொன் மாலை பொழுது said...

இந்நாளைய ஐ .டி . பெண்களுக்கு உதவும்.

கும்மாச்சி said...

சேட்டை, உங்களது தயவில் நான் இன்று வெந்நீர் போட கற்றுக்கொண்டேன். ஆனால் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க மறந்துவிட்டேன்.

இருந்தாலும் உங்களது சரித்திரப் புகழ்பெற்ற இந்தப்பதிவை நான் மிகவும் ரசித்தேன். குறள் அபாரம்.

Philosophy Prabhakaran said...

// இதோ, சுடச்சுட வெந்நீர் தயார்! //

மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டிய வரிகள்...

த.ம.ஓ 5

ஸ்ரீராம். said...

:))))

வெளங்காதவன்™ said...

யோவ்... ஆனாலும், உமக்கு வெகு சேட்டையா

இராஜராஜேஸ்வரி said...

கொதிக்கும் பதிவு !

ADHI VENKAT said...

அடேயப்பா!!!! வெந்நீர் போடுவது இவ்வளவு பெரிய வேலையா இருக்கே...

குறள் பிரமாதம்...:)

Ranjani Narayanan said...

'சுக்கு நீரகர்' எழுதிய சூத்திரம் வாய் விட்டு சிரிக்க வைத்தது.
யாரங்கே! சேட்டையின் நளபாகம் படித்து சிரித்து வயிற்று வலி வந்து விட்டது.
வெந்நீர் போட்டுக் கொண்டு வாருங்கள்... சேட்டையின் 'வெந்நீர் போடுவது எப்படி' யைப் படிக்காமல்!

கே. பி. ஜனா... said...

இத்தனை கடினமான ரெசிபி எல்லாம் போட்டால் எப்படி சார், கொஞ்சம் எளிதானதாக போட்டால் தானே செய்து பார்க்க முடியும்?

குட்டன்ஜி said...

வாத்தியாரே!சுட்தண்ணி எப்புடி வக்கனும்னு சொக்கா சொல்லிகிறே!கில்லாடிபா நீ!

mage said...

edhellam namakku thodhu padathupa namakku ellam sariiyana easiyana velai oru bucket vennir kodu di than

semmalai akash said...

வெந்நீர் வைக்கப் போன எனக்கு இப்ப வயிறு வலிக்குது, சிரிச்சி சிரிச்சி, புண்ணாய் போச்சி, இதுக்கும் மருந்து என்னவென்று சொல்லவும் சேட்டை அண்ணா. :-))))))))))))))))))))))))

அருணா செல்வம் said...

ஐய்ய்ய்யோ... வெந்நீர் வைக்க இவ்வளவு கஷ்டமா...? என்னால முடியாதுங்க.

பாடல்கள் படுசூப்பர் சேட்டை ஐயா.
சிரித்து மகிழ்ந்தேன்.

Unknown said...

சுடச் சுடப்பதிவு சூடான நீர்! அடடா! என்னே அருமை!இதன் காப்புரிமை தங்களுக்கு மட்டுமே உரியது சேட்டை! ~

சுபத்ரா said...

“டீ” போடுவது எப்படி?னு போஸ்ட் போட்டீங்களா இல்லையா கடைசில?

அமுதா கிருஷ்ணா said...

இந்த விஷயம் இத்தனை நாள் தெரியாமா போச்சே..

வவ்வால் said...

ஏன் சார், வெந்நீர் போடுவது எப்படின்னு பதிவு எழுதிட்டு கடைசி வரைக்கும் வெந்நீரை போடவே இல்லை, சீக்கிரம் வெந்நீரை குண்டானோடு தூக்கி கீழ போடுங்க சார் :-))

அப்போ தான் இது வெந்நீரை போட்ட பதிவு :-))

மாதேவி said...

சேட்டையும் வவ்வாலும் நன்றாகவே வெந்நீர் போட்டு :)))) வயிற்றுப் புண் வந்துவிட்டது.

வாழ்க வெந்நீர்.

நாங்கள் சுடுதண்ணீர் என்போம்.

வல்லிசிம்ஹன் said...

அதுசரி. வெந்நீர் போட்ட முறையெல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க. நாங்க ரொம்பக் கடமைப் பட்ருக்கோம்:) இடுக்கியை எப்பட்டிப் பிடிக்கிறதுனு சொல்லலியே. இடுக்கி வழுக்கிவிட்டால்????முதல்ல நல்ல இருக்கி எப்படி வாங்கறதுனு சொல்லுங்கப்பா.எப்டி எப்டி கோடுக்குப் பின்னால நின்னு அடுப்பை அணைக்கணுமா. ஆஹா ஆஹா.

ezhil said...

சுலபமாக சமைப்பது எப்படின்னு புத்தகம் போடலாம்னு இருக்கேன் உங்க பதிவுகளைக் கொடுத்து உதவுங்கள் சேட்டை. :):)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹும் ..குடிக்கிற வெந்நீர் போடறதில, கும்பகோணம் ஜில்லாவில,

என்னை விட்டா ஆள் கிடையாது என்று ஒரு காலத்துல பேர்

வாங்கினவன் நான் !
http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/12/blog-post_5.html

கலாகுமரன் said...

2009 ல் போட்ட சுடுதண்ணீர் சூடு ஆறாம அப்படியே இருக்கே !

பிரதீப் said...

பிரமாதமா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்னால குடிக்கிற வென்னிய பத்தி நான் போட்ட பதிவு... http://pradeepkt.blogspot.com/2006/12/blog-post.html

Studentsdrawings said...

hot waterla evlo matera hayo hayo

Studentsdrawings said...

hot waterla evlo matera hayo hayo

கோமதி அரசு said...

நல்லா போட்டீர்கள். வெந்நீர் .

அஜீம்பாஷா said...

பாய் சாப் சுடு தண்ணி ஆறிவிட்டது , அடுத்த பதிவு எங்கே .

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வெந்நீர போடறதுல இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு சேட்டை சார்.எப்ப கேக்கலாம்?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அசத்தல் கற்பனை.சேட்டை சாரை வீட்டில எப்படித்தான் சமாளிக்கறாங்களோ?

Sathya said...

Dear Sir,

After Dec-12, till now no posts....

Waiting for laugh.........

Thanks

Sathya

ரிஷபன் said...

வெந்நீர் போடுவதற்கு முன்னர், நாம் ஏன் வெந்நீர் போடுகிறோம் என்ற குறிக்கோள் நமக்குப் புரிந்திருத்தல் மிக அவசியம். ..

ஹா... ஹா..

கவியாழி said...

அருமை பிரமாதம்.அப்படியே தண்ணீர் போடுவதைப் பற்றி விளக்கமாய் சொல்லமுடியுமா?

James said...

பச்சத்தண்ணி போடுவதைப் பற்றி சொல்லித்தாங்க ப்ளீஸ்!!!!

cheena (சீனா) said...

அன்பின் சேட்டைக் காரன் - அருமையான வழிமுறைகள் -வெந்நீர் போடுவதெப்படி - முழுவதும் படித்து மனனம் செய்து குறிப்புகள் எடுத்து தயார செய்து கொண்டு வெந்நீர் போட்டு இறக்கி வழக்கம் போல் தேவைப்படும் போது பயன் படுத்துவதற்காக ஃப்ரிஜ்ஜில் பத்திரமாக வைத்து விட்டு அலுவலகம் சென்று வந்து முகம் கழுவலாமே என எடுத்துப் பார்த்தாலைஸ் கட்டியாக குண்டாவில் இருந்து வெளி வர மறுக்கிறது. ஏன் ? இது ஐஸ் செய்வதெப்படி என்ற கட்டுரையா - நான் வென்னீர் அல்லவா போட வேண்டும் - ஒண்ணுமே புரியல சேட்டை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

சேலம் தேவா said...

வாய்ப்பே இல்லை.சேட்டையாரைத்தவிர இது போன்று எழுத... :)

ராஜி said...

இவ்வளாவு கஷ்டமான டிஷ்லாம் எங்களுக்கு சொல்லித் தராதீங்க

Unknown said...

பயனுள்ள பகிர்வு/பதிவு!நர்சரிக்கு சென்று 'அ' எழுதக் கற்பது போல்,திருமணத்துக்கு முன் சுடுநீர்/சுடுதண்ணி வைப்பது எப்படி என்பதில் ஆரம்பித்து..................நன்றி!நன்றி!!,நன்றி!!!