Sunday, November 18, 2012

RIP பால் தாக்கரே




சாலைவழியாக மும்பைக்குள் நுழைவதாயிருந்தால், ஆர்.கே.ஸ்டூடியாவுக்கு முன்பாக, தேவ்னார் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கிற சத்ரபதி சிவாஜி சிலையைக் கடந்தே அனைவரும் சென்றாக வேண்டும். சராசரியை விடவும் உயரமான பீடத்தின் மீது, குதிரையில் சவாரி செய்யும் சிவாஜியின் உருவச்சிலையைக் கவனிக்காமல் மும்பை நகரத்துள் நுழைவது கடினம். அந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பால் தாக்கரே அப்போது சொன்னது: “நமது மும்பை நகரத்துக்குள் எவர் வந்தாலும் சரி, சத்ரபதி சிவாஜியின் காலடியைப் பாராமல் உள்ளே செல்ல முடியாது.

     மும்பை-பூனே முக்கிய சாலையில், போக்குவரத்து ஆமைவேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்க, பாலாசாஹேபின் சூளுரையைக் கேட்டு சேனாக்காரர்கள் ஆரவாரம் எழுப்பியபோது, மராட்டி புரியாதபோதிலும் அவருக்கும் மக்களுக்கும் இடையிலிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. சிவசேனாவைக் குறித்து எனக்கிருந்த அச்சத்துடன், சற்றே பிரமிப்பும் உண்டாகிய தருணம் அது.

            பால் தாக்கரேயை விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, பெரும்பாலும் வெறுக்கிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவரை ஒரு மராட்டிய சிங்கமாக உருவகித்து, அதற்கு ஆதாரமாக நேற்றுமுதல் மாதோஸ்ரீயின் முன்பு கூடிய கூட்டத்தையும், பிரபலங்களின் இரங்கல் செய்திகளையும் கலந்துகொட்டிப் பரிமாறிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகளின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மறைந்த தலைவர்களை சற்றே அதீதமாகப் புகழ்வது மரபு என்பதை ஒப்புக்கொண்டாலும், மும்பையில் சில வருடங்கள் வசித்தவன், சிவசேனா ‘மந்த்ராலயாவுக்குள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது ஆயாசத்துடனும், கொஞ்சம் அச்சத்துடனும் குழம்பியவன் என்ற முறையில், தாக்கரேயின் அரசியலும் அணுகுமுறைகளும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை.

     சிவசேனா அரசியல் கட்சியாக உருமாறும் முன்னரே, மும்பையைத் தனது கிடுக்கிப்பிடியில்தான் வைத்திருந்தது. ‘ஷாகாஎன்றழைக்கப்படுகிற கிளை அலுவலகங்களை எங்கெங்கும் காண முடிந்தது. ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்று ஒருவருக்கொருவர் வந்தனம் சொல்லும் சிவசேனைக்காரர்களை அங்கெங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம். ‘குட் மார்னிங்என்று ஆங்கிலத்தில் பேசுகிறவர்களை அவர்கள் பார்க்கிற பார்வையில் ஒரு அந்நியம் இருக்கும். இரண்டு மராட்டியர்கள் சந்தித்தால், சுற்றியிருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, தங்களது சம்பாஷணைகளை மராட்டியிலேயே தொடர்வதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இது மொழிப்பற்றா அல்லது மொழிவெறியா என்பதை அவரவரின் புரிதலுக்கு விட்டுவிடுதலே நல்லது.

            ஒரு தமிழனாக, பால்சாஹேபின் ‘லுங்கி ஹடாவோ(வேட்டியை ஒழி!)என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையும் இயல்பாகவே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.  நாளாவட்டத்தில் அவரது அசூயை மராட்டிய மண்ணின் மைந்தர்கள் தவிர்த்து அனைவரின் மீதும் பாரபட்சமின்றிப் படர்ந்திருந்தது என்பதைப் புரிந்தபோது, இப்படிப்பட்ட கண்ணோட்டம் கொண்ட ஒரு மனிதரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாரையும் போலவே எனக்கும் எழுந்ததுமுண்டு. மும்பையைத் தவிர சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதும் ஒரு பொதுப்படையான கருத்தாக முன்வைக்கப்பட்டது. கொங்கண் தவிர, கரும்பாலை முதலைகளின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மராட்வாடா, விவசாயிகளும் தொழிலாளிகளும் மிகுந்திருந்த விதர்பா ஆகிய பகுதிகளில் சிவசேனா தவழும் குழந்தையாயிருந்த சூழலில், ‘மண்ணின் மைந்தன் என்ற ஒற்றைக்கொள்கையை மட்டும் வைத்து தேசீயக் கட்சிகளுக்கு இவர் எப்படி முட்டுக்கட்டைகள் போடப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், அவரால் அது அவரால் முடிந்தது. சிவசேனா ஆட்சிக்கு வந்தது ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ‘களப்பணியை முடித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது என்றால், அது பால் தாக்கரே என்ற ஒற்றை மனிதருக்காகவே!

     இந்த மிரட்டல் அரசியல் மும்பைவாழ் மராட்டியர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸும், தொழிலாளர்களின் நலத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிலதிபர்களுடன் கைகோர்த்துவிட்டு சொகுசுவாழ்க்கையில் ஈடுபட்ட ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்ததை இப்போது நினைவுகூர பலர் தயாராக இல்லை. ஆனால், இந்தியாவிலேயே பிற மாநிலத்தவர் மிகமிக அதிகமாக வாழ்கிற மும்பையென்ற நகரத்தில், மராட்டியர்களில் பெரும்பாலானோரை ஒன்றிணைக்க ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்ற கோஷம் மட்டுமே உதவியது என்று சொன்னால், அது மூர்க்கத்தனமான வன்மத்தில் சொல்வதாகவே இருக்கும். பால்தாக்கரேயை மராட்டியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்வதற்குப் பல உளவியில்ரீதியான காரணங்கள் இருந்திருக்கலாம். அவர் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் அவரவர்க்கு எதிர்காலம் மீதிருந்த அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

     பால்தாக்கரேயை எதிர்மறையாக விமர்சிக்கக் காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், சற்று யோசித்தால் அவரது அரசியல் அணுகுமுறைகளில் பலவற்றை, பலர் பல்வேறு கட்டங்களில் தங்களால் இயன்றவரைக்கும் முலாம் பூசிப் பயன்படுத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ‘அம்ச்சி மாத்தி அம்ச்சி மாணூஸ்’ (எனது மண்; என் மக்கள்) என்ற கோட்பாடு பால்தாக்கரேவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய உதாரணங்களல்ல.

            பம்பாய் மும்பை ஆனதும் அதைத் தொடர்ந்து வேறு சில  மாநிலங்களிலும் சில நகரங்களின் பெயர்கள் மாறின. அறிவிப்புப்பலகைகள் மராட்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை, பின்னாளில் பல மாநிலங்களிலும் பின்பற்றினார்கள். எல்லாத் திரையரங்குகளிலும் மராட்டிப் படங்களுக்கென்று குறிப்பிட்ட காட்சியில் எண்ணிக்கை வரையறுத்தே ஆக வேண்டும் என்பதும் பின்னாளில் மகாராஷ்டிரம் தாண்டிப் பரவியது. இவையெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள் என்றாலும், நமக்கும் பரிச்சயமான நிகழ்வுகள்.

     பால் தாக்கரே ‘சாம்னாவில் எழுதிய தலையங்கங்களைப் போல வேறு எவரேனும் எழுதியிருந்தால் பல உரிமைப்பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள். அவர் ஒவ்வொரு விஜயதசமியன்றும் சிவாஜி பார்க்கில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களைச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சியிருப்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகளும் அரசியல்வாதிகளும் அஞ்சின. சொல்லப்போனால், அவரைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு இருந்த அச்சமே அவரது வெற்றியோ என்று எண்ண வேண்டிய துரதிருஷ்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை.

            பால் தாக்கரேயின் இறுதி யாத்திரையை, பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தனர். (கலைஞர் டிவி உட்பட!).

     அவரை விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.

32 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பால் தாக்கரே பற்றிய நடுநிலையான அலசல்

பனித்துளி சங்கர் said...

வணக்கம் நண்பரே நலம்தானே ! நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்கத் தொடக்கி இருக்கிறேன் .பால் தாக்கரே பிடிக்காதவர்களையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது தங்களின் படைப்பு .

சரவணகுமரன் said...

நல்ல கட்டுரை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவரைச் விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.

CLASSIC!

ஸ்ரீராம். said...

உண்மை. பலரும் வெளியிடத் தயங்கும் உண்மை! இனி வாரிசுகளின் ஆட்டம் எப்படி இருக்குமோ?

manuneedhi said...

பால் தாக்க்ரேவின் சிதைக்கு உத்தவ் தீ மூட்டிய போது அவர் கைகளில் தென்பட்டது ஒரு தமிழ் நாட்டுத் தீப்பெட்டி!

semmalai akash said...

அருமையான பதிவு ஐயா,
இவரைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியாது, இப்போது நிறைய செய்திகளை தெரிந்துக்கொண்டேன். நன்றி ஐயா,
4

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மொத்தத்தில் எப்போதோ... Police என்கவுண்டரில் போட்டுத்தள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு ரவுடி...
தாதாவாகி...
அரசியல் தலைவராகி...
ரஜினிக்கு கடவுளாகி...
இப்போ தியாகியாகிறாராம்..!

என்ன கொடுமை சார் இது..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மீளும் நினைவுகள்....

பாபஸ் மசூதி இடிப்புக்கு சேனையின் கொண்டாட்ட ஊர்வலம்...
பாபஸ் மசூதி இடிப்பு கண்டன ஊர்வலத்துக்கு கலாட்டா செய்து அனுமதி ரத்து....
விளைவாக மும்பை கலவரம்...
சில வாரங்களில் 900 பேர் சாவு...
தொடர்ந்து பாம்பே தொடர் குண்டு வெடிப்பு...
250 பேர் சாவு...
ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை...
சிவசேனாதான் மூல காரணம் என்று கூறி சிவசேனை எம்பி மாதுக்கர் கைது...

'பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது... வந்தாலும் மும்பையில் விளையாடக்கூடாது... விளையாடினால்... பிட்ச் பெயர்க்கப்படும்...

ஆனால், தாவூத் இப்ராஹிமின் சம்பந்தியும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான ஜாவித் மியாண்டட்டுக்கு மட்டும் தாக்கரே தன் வீட்டுக்கு ஸ்பெஷல் அழைப்பு... விருந்து உபச்சாரம்...
'ஜாவித், நான் உன் ஆட்டத்துக்கு விசிறி' என்று புகழாரம் வேறு...!

'மண்ணின் மைந்தன்' கோஷம்.... 'மற்ற மாநிலத்தவர் வெளியேறு' கோஷம்...
இறுதியில் பால் தாக்கரே ஒரு பிஹாரி..!

ஒருவர் வாழ்க்கையில் எத்தனை முரண்பாடுகள்... அழிச்சாட்டியங்கள்...
நாச வேலைகள்...

அப்பாடா..!
இனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..!
தைரியமாக உள்ளே சென்று வாழலாம்..?

Unknown said...

விரிவான தகவலுக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

@Blogger T.N.MURALIDHARAN

கருத்துக்கு மிக்க நன்றி!

@Blogger ! ❤ பனித்துளி சங்கர் ❤ !

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து கருத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி!

@Blogger சரவணகுமரன்

கருத்துக்கு மிக்க நன்றி!

@Blogger ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

கருத்துக்கு மிக்க நன்றி!

@Blogger ஸ்ரீராம்.

கருத்துக்கு மிக்க நன்றி! வாரிசுகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 

@Blogger manuneedhi

உத்தவின் கையிலிருந்த தீப்பெட்டியைக் கூட உன்னிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

@Blogger Semmalai Akash!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆகாஷ்!

settaikkaran said...

@Blogger ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//மொத்தத்தில் எப்போதோ... Police என்கவுண்டரில் போட்டுத்தள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு ரவுடி...தாதாவாகி... அரசியல் தலைவராகி...ரஜினிக்கு கடவுளாகி...இப்போ தியாகியாகிறாராம்..! என்ன கொடுமை சார் இது..!//

சகோ முஹம்மத் ஆஷிக்! இக்கட்டுரையில் அவர்குறித்த எனது கருத்துக்களைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன்-அவரது அரசியலை நான் வெறுப்பவன் என்று! ஆனால், விதிவிலக்காக அவர் தனது மொழி, தனது மக்களுக்காகக் குரல் கொடுத்த்தபோது அதை வியந்துமிருக்கிறேன் என்பது உண்மை.

//மீளும் நினைவுகள்....//

உங்களது மீளும் நினைவுகளுக்கு அப்பாலும் இன்னும் விடுபட்ட சில அராஜகங்களை சிவசேனா நிகழ்த்தியிருக்கிறது. 86 முதல் 2000 வரையில் மும்பையில் வசித்தவன் நான் என்பதால் அவற்றை அறிவேன்.

//பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது... வந்தாலும் மும்பையில் விளையாடக்கூடாது... விளையாடினால்... பிட்ச் பெயர்க்கப்படும்...//

இவ்விஷயத்தில் நான் பால் தாக்கரேயின் கருத்தை ஆமோதிக்கிறேன். வான்கெடே மைதானத்தில் ஆடுகளத்தை சிவசேனா சேதப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அந்த சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடுவது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியிருக்கும் என்பதே எனது கருத்து. இந்த கிரிக்கெட் டிப்ளமஸியில் எனக்கும் நம்பிக்கையில்லை. ஆகவே அந்த நிலைப்பாட்டை நானும் உறுதியாக அப்போதும் ஆதரித்தேன்; இனியும் ஆதரிப்பேன்.

//ஆனால், தாவூத் இப்ராஹிமின் சம்பந்தியும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான ஜாவித் மியாண்டட்டுக்கு மட்டும் தாக்கரே தன் வீட்டுக்கு ஸ்பெஷல் அழைப்பு... விருந்து உபச்சாரம்...
'ஜாவித், நான் உன் ஆட்டத்துக்கு விசிறி' என்று புகழாரம் வேறு...!//

ஜாவேத் மியாந்தாத் இந்தியாவுக்கு வந்து பால்தாக்கரே வீட்டுக்குப் போன ஆண்டு எது, மியாந்தாத் தாவூத்தின் சம்பந்தையான ஆண்டு எது என்று தயவு செய்து சரிபார்க்கவும்.

//இறுதியில் பால் தாக்கரே ஒரு பிஹாரி..!//

உத்திரப்பிரதேசம், உத்தராஞ்சல் பிரதேசங்களில் வசிக்கும் ‘பந்த்’ என்ற பிரிவினருக்கும் பூர்வாங்கமாக மகாராஷ்டிரம் இருந்திருக்கிறது. அதே போல சிந்தியா என்ற பெயரில் மத்தியப்பிரதேசத்தில் வசிக்கிறவர்களுக்கும் மராட்டியுடன் உறவு இருக்கிறது. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தபோது பாராளுமன்றத்தில் ஜோதிராதித்யா சிந்தியா மராட்டியில் வேண்டுகோள் விடுத்ததை நினைவு கூர விரும்புகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//RIP பால் தாக்கரே//---Rest in peace...?

How..?

He never allowed others to rest in peace..!

Sorry brother. Settaikkaran...

the first comment is not for here..!

By my mistake came here..!

Sivakumar said...


//அப்பாடா..!
இனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..!//

ஆஷிக்...பெருமூச்சு விட வேண்டாம். உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேக்கள் தலைவரிடமிருந்து டார்ச்சை சுமந்து செல்வார்கள். கொள்கையில் எந்த வித மாறுதலும் ஏற்படப்போவதில்லை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///ஜாவேத் மியாந்தாத் இந்தியாவுக்கு வந்து பால்தாக்கரே வீட்டுக்குப் போன ஆண்டு எது, மியாந்தாத் தாவூத்தின் சம்பந்தையான ஆண்டு எது என்று தயவு செய்து சரிபார்க்கவும். ///----ya... you are right on marriage..!

But.......................

I know in cricket world news and more particularly in sharjah, how Dawood Ibrahim's relation was with Javed Miandad well before and after 1993..!

Even after knowing this, he was invited to his house, after 11 years (30 July 2004) by Thackeray.

That means...
never mind he is pakistani,
never mind his Dawood Ibrahim's relationship..!

That is Thackeray's bloody politics..! Nothing good for people..!

This was my motive to impress here..!

unmaiyalan said...

EVIL DEAD

உதயம் said...

//அப்பாடா..!
இனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..!//


இந்த ஒற்றை வரியில் ஓராயிரம் வலிகளை சொல்லி விட்டீர்கள் ஆசிக்.

இவரது மரணம் தாங்கியிருந்த செய்திகளை உற்று நோக்கும் போது .. நாகரிகத்திற்காக அஞ்சலியும், ஆத்மா சாந்தி அடையட்டும் என்ற கருத்துக்களோடு இந்த மனிதனின் அடாவடி அராஜக அரசியலையும் வன்முறைகளையும் மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள். இனியாவது.. இந்திய நீதித்துறை எந்த கொம்பன் எவ்வளவு செல்வாக்கில் இருந்தாலும், அவன் குற்றவாளியென தெரிந்தால் தண்டிக்க துணிவு பெறட்டும்.

Unknown said...

sir, please read this...
http://storify.com/sunnysingh_nw3/inconvenient-truths

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... விளக்கங்களுக்கு நன்றி...
tm13

பொன் மாலை பொழுது said...

வழக்கம்போலா இறந்த தலைவர்களுக்கு எல்லோரும் அதீதமாக புகழுரைகள், புனைவுகள் என அள்ளி விடுவார்கள்.
எதார்த்தமாக சொல்லிய கருத்துக்கள் அழகு. அதுதான் உங்களின் தனித்துவம் சேட்டை.

வெளங்காதவன்™ said...

எது எப்புடியோ சாரே! நம்மாளு இந்திய, அதிலும் மராஷ்டிரா அரசியலில் மிகப் பேரும் மைல்கல் என்றே சொல்லவேண்டும்

Unknown said...

தாக்ரே பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்...!பின்லேடனுக்கும்,காசாப்புக்கும் வால் பிடிப்பவர்கள் அவரை குறை சொல்வது நகைப்புகுறியதாகிப் போகின்றது..!

சசிகலா said...

நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பின் லேடன் செத்துட்டான்... (என்று நினைக்கிறேன்) மிக்க மகிழ்ச்சி.

கஸாப் இன்னும் தூக்கில் தொங்க விடப்படவில்லை..! விரைவில் தொங்கவிடப்பட்டால்... மிக்க மகிழ்ச்சி.

இவர்களுக்கு சற்றும் குறைவு சொல்ல முடியாத பால் தாக்கரேவும் செத்துட்டான்..! மிக்க மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் இன் வெடிகுண்டு பயங்கரவாதகளுக்கு பகிரங்கமாக வால் பிடிப்பிவர்கள்...

பால் தாக்கரேவின் சாவுக்கு பதிவு போட்டு ஒப்பாரி வைக்க கூச்சப்படுவது நகைப்புகுறியதாகிப் போகின்றது..!

ரிஷபன் said...

விரிவான அலசல். நீங்கள் சொல்லி இருப்பது போல இது அவருக்கு மட்டுமேயான குணாதிசயங்கள் அல்ல. எல்லா அரசியல்வாதிகளும் அவ்வப்போது மிரட்ட உபயோகிக்கும் கருவிகளே...

சமீரா said...

ரொம்ப நடுநிலையாக எழுதி இருக்கீங்க சார்... உங்க தனிப்பட்ட கருத்தும் அதுல கொஞ்சம் இருக்கு!!

ஏனோ எனக்கு அவரை கண்டாலே ஒரு இன வெறி கொண்ட ...... போல தான் தோன்றும்!!! இந்தியாவிலேயே மாநில அடிப்படையில் எதிரியாக பார்க்க வாய்த்த மனிதர் அவர்!!!

ஏதோ அவரும் மறைந்து விட்டார்.. இனி அவர் போல பெரும் சக்தி(?) கொண்டு இனவெறி தொடராமல் இருந்தால் நலம்...

அருணா செல்வம் said...

எப்போடா இவன் அழிவான்“... என்று நினைக்க வைத்த மனிதனும் அழிந்தான்....

இருக்கும் பொழுது மற்றவருக்கு நல்லவராக வாழவேண்டும் என்ற கருத்தை நமக்கு கற்பித்து்த் தான் இருக்கிறார்!!

G.M Balasubramaniam said...


விருப்பு வெறுப்பு என்று காட்டாமல் ஒரு நடுநிலை அலசல். பாராட்டுக்கள். இந்த மண்ணின் மைந்தர் கோஷம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. திரவிடர்கள் என்றால் தமிழர் மட்டுமே என ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டதால் தமிழ் நாட்டில் அந்தப் பருப்பு அவ்வளவாக வேகவில்லை. கர்நாடகத்தில் இந்த மண்ணின் மைந்தர் கோஷம் வேர்பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் தீதி துவக்குகிறார். மற்றபடி இனம் மொழி மதம் போன்ற விஷ்யங்களில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் திறமை படைத்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள். சிவசேனாவில் தாக்கரேயின் இடத்துக்கு குடும்பத்தினர்களியையே போட்டி நிலவுகிறது. ( தமிழ் நாட்டைப் போல.) மீண்டும் பாராட்டுக்கள் சேட்டை.

ராஜ நடராஜன் said...

இந்து,முஸ்லீம் இனக்கலவரங்களுக்கும்,சமீபத்திய பீகாரிகள் வெளியேற வேண்டும் என்ற அபத்தங்களுக்கும்,ஏனைய மாநிலத்தவர்கள் விசா வாங்கிட்டுத்தான் மும்பாய்க்கு வரவேண்டும் போன்ற அதீதங்களுக்கெல்லாம் முன்பு பால் தாக்கரேயை அடையாளம் காட்டிய நிகழ்வு என்றால் மதராசியே வெளியே போ என்ற கலவர காலங்கள்தான்.தாராவி தமிழர்களும்,சேட்டன்களும் கைகோர்த்து நின்று மராட்டிய தீவிரவாதத்தை முறியடித்தார்கள்.ஒருவேளை மதராசிகள் வெளியே போ வெற்றியடைந்திருந்தால் தாராவி பகுதி இன்று ஸ்லம்டாக் மில்லினர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பில்லாமல் நகரின் முக்கிய பகுதியாக கூட மாறியிருக்கும் வாய்ப்பிருந்திருக்கும் என்ற மாற்று பார்வையையும் வைக்கிறேன்.

நாயகன் படமெடுத்த மணிரத்னம் வேலுநாயக்கர் கதாபாத்திரத்தில் இதனை புகுத்தியிருந்திருக்கலாம்.ஆனால் பம்பாய் படத்தில் பால் தாக்கரேயை கோடிட்டு காட்டியதற்கே பிரச்சினை எழுந்ததாக செய்திகள் வந்தன.துப்பாக்கி காலங்கள் இப்பொழுது.

பால் தாக்கரேயின் வலிமையையும் மீறிய இஸ்லாமிய தீவிரவாத குண்டுவெடிப்புக்கள் பம்பாயிலும்,மும்பாயிலும் நிகழ்ந்தன.கம்யூனிசமும்,மில் தொழிலாளர் நலனுக்காக உழைத்த தொழிற்சங்க தலைவர்களை பின் தள்ளியதில் ஜெய் மஹாராஷ்ட்ரா கோசத்திற்கு முக்கிய பங்குண்டு.

நீதிமன்ற உத்தரவையெல்லாம் புறக்கணிக்கும் மராட்டிய நீர் முதலையே தாக்கரே.

இந்தி திரைப்படம் மிகவும் காம்ப்ளாக்ஸான ஒன்று என்ற போதிலும் தாக்கரேயின் ஆதிக்கமும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

தாக்கரேக்கு எதிரான விமர்சனங்கள் பல இருந்தும் மராட்டிய மக்களின் உணர்வு பயமாகவோ அல்லது பக்தியாகவோ வியக்க வைக்கிறது.

கலாகுமரன் said...

நடுநிலமையான அனுகுமுறையோடு கூடிய பதிவு !. தன் இன மக்களை உயர்வாக பேசுவதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. மற்ற மொழிகாரர்களை இளப்பமாக பார்க்கும் மனோபாவத்தை ஜீரணிக்க இயலாது. இது ஒன்றே உறுத்தல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விரிவான அலசல் பதிவு.
எவ்வளவு விஷயங்கள் அரசியலோடு பின்னிப்பிணைத்துள்ளன!

Unknown said...

தாக்ரே பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்...!பின்லேடனுக்கும்,காசாப்புக்கும் வால் பிடிப்பவர்கள் அவரை குறை சொல்வது நகைப்புகுறியதாகிப் போகின்றது..!