Tuesday, September 27, 2011

அன்னை காளிகாம்பாள்


ஆழியலை சூழ்ந்த அவனிதனை உருவாக்கி
      அண்டிவருவோரை அன்னையென ஆதரித்து
ஊழின்வலி போக்கி உவகைபெறச்செய்பவளே
      உள்ளந்தனில் நிறைந்த மாகாளிகாம்பிகையே!
வேழின் உருக்கொண்ட வினைநீக்கும் கணநாதன்
      வெற்றிவடிவேலன் கதிர்காம முருகனுடன்
தோழியென நிற்கும் வைணவியும் புடைசூழ
      தோன்றி அருள்புரியும் மாகாளிகாம்பிகையே!

அண்டந் தனையாக்கி அகிலமதைக் காத்தருளி
      அல்லல் அளித்தகொடும் அரக்கர்தமையழிக்கக்
கொண்டாய் காளியெனும் கோலமதை அம்பிகையே
      கோவிலுற்ற அடியோரின் குறைதீர்க்கும் மாகாளி
விண்ணோர் வேந்தன்முதல் வியாசபராசரரும்
      விசுவகருமருடன் வேதமுனி அகத்தியனும்
மண்ணில் மழைபொழியும் வருணனுமே வணங்கினரே
      மாயை நீக்குமெங்கள் மாகாளி அம்பிகையே!

சென்னை எனும்பெயரை இந்நகர்க்கு ஈந்தவளே!
      செம்மை அருள்பவளே சென்னம்மா மாகாளி
மின்னும் பொற்தாலி மூக்குத்தி கங்கணமும்
      மிஞ்சியுடன் சிலம்புணிந்தே உவந்திருக்கும் மாகாளி!
கன்மம் மாயையுடன் ஆணவமாம் மும்மலத்தை
      கண்ணால் அழிப்பவளே கமடேசுவரி தாயே!
தொன்மை மிக்கதொரு திருக்கோவில் தனிலுறைந்தே
      தொழுவோர் குறைதீர்க்கும் தூயவளே மாகாளி!

செல்வந் தனையருளும் மலைமகளே ஓர்கண்ணாம்
      செம்மைக் கல்விதரும் அலைமகளும் ஓர்கண்ணாம்
கல்வி செல்வமுடன் வீரமென மூன்றுமிகக்
      கருணையுடனருளும் மாகாளிகாம்பிகையே!
பல்கி அருளவெனப் பாங்குடனே உறையீசர்
      பாகமுறைந்தவொரு பார்வதியே மாகாளி!
சொல்வர் பரதபுரி சொர்ணபுரி எனபலவாய்
      சோர்வு பிணிநீக்கும் மாகாளிகாம்பிகையே!

தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!
      தரணியைக் காப்பவளே தாயே மாகாளி
நெஞ்சம் தனிலுனையே நிதமும் நினைப்பவர்க்கு
      நெற்றிச் சக்கரத்துள் நின்றுலவும் மாகாளி
பஞ்சம்பசியின்றிப் பாரெங்கும் செழித்திடவுன்
      பார்வைத் திருவருளைப் பாலிக்கும் மாகாளி
அஞ்சும் அடியார்க்குன் அபயக்கரங்காட்டி
      அன்னை எனவிளங்கும் அம்பிகையே மாகாளி!

26 comments:

உணவு உலகம் said...

//பஞ்சம்பசியின்றிப் பாரெங்கும் செழித்திடவுன்
பார்வைத் திருவருளைப் பாலிக்கும் மாகாளி//
பக்தி மணம் கமழும் பாடல்.

உணவு உலகம் said...

ஆஹா, நான்தான் முதல் ஆளா? தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.

Unknown said...

கலக்கல் பக்திப்பாடல்யா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!

பால கணேஷ் said...

அன்னையின் அருள் அட்டியின்றி உங்களுக்குக் கிட்டட்டும். வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

பயங்கர ஆன்மீக வாதி போல.. அந்த அளவு நான் ஒர்த் இல்லைண்ணே..

சேலம் தேவா said...

இன்னும் 5 பாட்டு எழுதுங்க...அம்மன் ஆல்பம் போட்ரலாம். :)

துளசி கோபால் said...

கோவில் வரை வந்து உள்ளே போயும்கூட அம்மன் தரிசனம் கிடைக்கலை. சந்நிதி மூடி இருந்துச்சு. எனக்காகப் போனால் போகட்டுமுன்னு வலது கையை மட்டும் திரை ஒதுக்கலில் காமிச்சாள்!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோதரம்,

என்னய்யா கவிதையே புரியாதென்று சொல்லிட்டு,
விருத்தக் கவிதை எல்லாம் எழுதி ஆச்சரியப்பட வைக்கிறீங்க.

அம்மனின் பெருமைகளைக் கூறும் அருமையான கவிதையினூடே நானும் அன்னையைத் தரிசித்தேன்.

kaialavuman said...

நவராத்திரிக்கு இன்றே முன்னோட்டமா? ம்ம்ம் நடக்கட்டும். நன்றி.

ரிஷபன் said...

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?

rajamelaiyur said...

//
தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!
தரணியைக் காப்பவளே தாயே மாகாளி
//
நல்ல வரி

rajamelaiyur said...

//
September 27, 2011 10:58 AM
Blogger ரிஷபன் said...

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?
//
எனக்கும் அதான் டவுட்

Unknown said...

சேட்டைக்காரரே! காளிகாம்பாள்
பேட்டைக்காரரே-கவிதையில்
கோட்டைக் கட்டிவிட்டீர்-விருத்த
பாட்டைப் பாடிவிட்டீர்!

நன்று! நன்றி!





புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

வெகுநாட்களாகி விட்டது இப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த பதிவைப்படித்து. நன்றி சேட்டைக்காரரே!

duraian said...

சேட்டையின் புதிய அவதாரம் ........
மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது ....

வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சேட்டையின் சேட்டைகளுக்கு நடுவே நமக்கு இன்று நல்ல வேட்டை.

அழகான ஆன்மீகப்பாடல் பதிவு.

சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் மேலே போய்ப் பார்த்தேன்.

”உட்கார்ந்து யோசிப்போமில்லே”
என்று எழுதியிருந்தார். கரெக்ட்
உட்கார்ந்து யோசித்திருக்கிறார் போல!

ADHI VENKAT said...

நவராத்திரிக்காக காளிகாம்பாள் பற்றிய நல்ல பாடல்.

பகிர்வுக்கு நன்றி.

மாதேவி said...

காளிகாம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நவாரத்திரி விழா வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய பகிர்வு சேட்டை.... காளிகாம்பாளின் பூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....

Anonymous said...

வலை மாறி வந்ததுபோல் அதிர்ச்சி...இன்ப அதிர்ச்சி...சேட்டைக்கவி சோடை போகவில்லை...

நிறைய பிடித்திருந்தது...

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. அசத்தல் பக்திப்பாடல். ரொம்ப நல்லாருக்கு

settaikkaran said...

//FOOD said...

பக்தி மணம் கமழும் பாடல்.//

மிக்க மகிழ்ச்சி! :-)

//ஆஹா, நான்தான் முதல் ஆளா? தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.//

இரட்டிப்பு மகிழ்ச்சி; இரட்டிப்பு நன்றிகளை ஏற்றுக்கொள்ளவும்! :-)

//விக்கியுலகம் said...

கலக்கல் பக்திப்பாடல்யா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//கணேஷ் said...

அன்னையின் அருள் அட்டியின்றி உங்களுக்குக் கிட்டட்டும். வாழ்த்துக்கள்!//

எனக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் கிடைக்கட்டும் அன்னையின் அருள்! மிக்க நன்றி! :-)]

//சி.பி.செந்தில்குமார் said...

பயங்கர ஆன்மீக வாதி போல.. அந்த அளவு நான் ஒர்த் இல்லைண்ணே..//

நானும் பெரிய ஆன்மீகவாதியில்லை. அன்னையை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றவன். அவ்வளவே! :-)

மிக்க நன்றி தல..!

//சேலம் தேவா said...

இன்னும் 5 பாட்டு எழுதுங்க...அம்மன் ஆல்பம் போட்ரலாம். :)//

அம்மாவின் ஆசியிருந்தால், அதுவும் நிறைவேறலாம். :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//துளசி கோபால் said...

கோவில் வரை வந்து உள்ளே போயும்கூட அம்மன் தரிசனம் கிடைக்கலை. சந்நிதி மூடி இருந்துச்சு. எனக்காகப் போனால் போகட்டுமுன்னு வலது கையை மட்டும் திரை ஒதுக்கலில் காமிச்சாள்!//

அன்னை காளிகாம்பாளின் அருள் கிடைக்க அவளது அபயஹஸ்தம் போதுமே! உங்களுக்கு அது அன்றே கிடைத்திருக்கும் என்று கருதுகிறேன். மிக்க நன்றி! :-)

//நிரூபன் said...

//என்னய்யா கவிதையே புரியாதென்று சொல்லிட்டு, விருத்தக் கவிதை எல்லாம் எழுதி ஆச்சரியப்பட வைக்கிறீங்க.//

சகோ! எப்படி எழுத முடிந்தது என்று என்னாலேயே நம்ப முடியவில்லையே! :-)

//அம்மனின் பெருமைகளைக் கூறும் அருமையான கவிதையினூடே நானும் அன்னையைத் தரிசித்தேன்.//

அன்னையின் அருள் முழுமையாகக் கிடைக்கட்டும் சகோ! மிக்க நன்றி!

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நவராத்திரிக்கு இன்றே முன்னோட்டமா? ம்ம்ம் நடக்கட்டும். நன்றி.//

அப்படி அமைந்து விட்டது. மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?//

என் கைகளையே என்னால் நம்ப முடியவில்லை. மிக்க நன்றி! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல வரி//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

சேட்டைக்காரரே! காளிகாம்பாள்
பேட்டைக்காரரே-கவிதையில்
கோட்டைக் கட்டிவிட்டீர்-விருத்த
பாட்டைப் பாடிவிட்டீர்!
நன்று! நன்றி!//

புலவரின் ஆசியால் பூரிப்படைந்தேன் ஐயா!
உங்களது கருத்து தந்த உற்சாகத்தில், இனியும் எழுத முயல்வேன்.
மிக்க நன்றி ஐயா!

//! சிவகுமார் ! said...

வெகுநாட்களாகி விட்டது இப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த பதிவைப்படித்து. நன்றி சேட்டைக்காரரே!//

அனேகமாக இது அன்னையின் கட்டளையோ என்னவோ? :-)
மிக்க நன்றி நண்பரே!

//துரை. ந. உ 9443337783 said...

சேட்டையின் புதிய அவதாரம் ........மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது ....
வாழ்த்துகள்//

இந்த நார் உங்களைப் போன்ற பூவோடு சேர்ந்து மணம் பெறுகிறது.
உங்கள் வருகை எனக்குப் பெருமை. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கோபாலகிருஷ்ணன் said...

சேட்டையின் சேட்டைகளுக்கு நடுவே நமக்கு இன்று நல்ல வேட்டை.
அழகான ஆன்மீகப்பாடல் பதிவு. சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் மேலே போய்ப் பார்த்தேன்.

”உட்கார்ந்து யோசிப்போமில்லே” என்று எழுதியிருந்தார். கரெக்ட்
உட்கார்ந்து யோசித்திருக்கிறார் போல!//

எல்லாம் அவள் செயல் ஐயா! ஆரம்பித்தேன்; அவள் முடித்து வைத்தாள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)

//கோவை2தில்லி said...

நவராத்திரிக்காக காளிகாம்பாள் பற்றிய நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.//

அன்னையின் அருள்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மாதேவி said...

காளிகாம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.நவாரத்திரி விழா வாழ்த்துக்கள்.//

அவ்வண்ணமே நானும் வேண்டுகிறேன்.
நவராத்திரி நாயகியர் அருள் கிடைக்கட்டும்!
மிக்க நன்றி சகோதரி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

இனிய பகிர்வு சேட்டை.... காளிகாம்பாளின் பூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....//

அன்னையிடம் நான் வேண்டுவதும் அதுவே; எனக்குச் சொல்லித்தரப்பட்ட வேண்டுதல் - ’ஸர்வே ஜனா சுகினோ பவந்து..!’
மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//ரெவெரி said...

வலை மாறி வந்ததுபோல் அதிர்ச்சி...இன்ப அதிர்ச்சி...சேட்டைக்கவி சோடை போகவில்லை...நிறைய பிடித்திருந்தது...//

இன்னும் கொஞ்ச நாள் கழித்து வாசித்தால் எனக்கும் கூட அதிர்ச்சி தரலாம். :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

//அமைதிச்சாரல் said...

ஆஹா.. அசத்தல் பக்திப்பாடல். ரொம்ப நல்லாருக்கு//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க! தளத்துல இணைச்சுகிடுங்க! உங்க கருத்த சொல்லுங்க! நல்லா பழகுவோம்!...//

எல்லாத்தையும் பண்ணிட்டேன். பழகலாமா? :-)