Friday, September 23, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

முந்தைய ஆட்சியில் பக்கத்து வீட்டுக் குழந்தையிடமிருந்து குச்சிமிட்டாயை அபகரித்ததால், தற்போது ’அரெஸ்டோபோபியா(Arrestophobia)’ என்ற விபரீதநோயால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிப் பிரமுகருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் பிரபல மனநல மருத்துவர் ஊளம்பாறை உலகப்பன். அப்போது......!

"டாக்டர்! ஒரு அர்ஜண்ட் கேஸ்!" என்று நர்ஸ் நாகம்மா பரபரக்க ஓடிவந்தார். "பார்த்தா மொழி படத்துலே வர்ற எம்.எஸ்.பாஸ்கர் மாதிரி கேஸ் போலிருக்கு. உடனே வாங்க டாக்டர்!"

எதிர்க்கட்சிப் பிரமுகரை, அவரது கட்சித்தலைவரைப் போலவே ’அம்போ’வென்று விட்டு விட்டு, டாக்டர் உலகப்பன் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தார். நோயாளி கிட்டாமணி படுக்கையில் படுத்திருக்க, பக்கத்தில் அவரது மனைவி பாலாமணி மதியத்தில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் அம்மாவைப்போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

"அதோ அந்த பேஷியன்ட் தான் டாக்டர்! திடீர்னு எல்லாத்தையும் மறந்திட்டாராம். பழசைப் பத்தி மட்டுமே பேசிட்டிருக்காராம் டாக்டர்."

"என்னாச்சுங்க?" டாக்டர் உலகப்பன் கிட்டாமணியின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தவாறே கேட்டார்.

"தெரியலே டாக்டர்!" பாலாமணி விசும்பினார். "டிவியிலே நியூஸ் பார்த்திட்டு டிபன் சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு! திடீர்னு சம்பந்தா சம்பந்தமில்லாம பேசறாரு!"

"என்ன டிபன் சாப்பிட்டாரு?"

"ஜாம்ஷெட்பூர் ஜவ்வரிசி உப்புமா!"

"ஐ ஸீ! அனேகமா அதுதான் காரணமாயிருக்கும்னு நினைக்கிறேன். பேரு என்ன?"

"அவர் பேரு கிட்டாமணி; என் பேரு பாலாமணி!"

’நல்லவேளை, ரெண்டுபேருகிட்டேயும் money இருக்கு.பில் கட்டாம ஓடிர மாட்டாங்க,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட டாக்டர் உலகப்பன் கிட்டாமணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

"மிஸ்டர் கிட்டாமணி! எப்படியிருக்கீங்க? உங்களுக்கு என்ன பண்ணுது?"

"எனக்கு ஒண்ணுமில்லே டாக்டர்! என்னை வீட்டுக்குப் போக விடுங்க! இன்னிக்கு கல்கத்தாவுலே இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஃபைனல்ஸ் ஆடுறாங்க! தூரதர்ஷன்லே லைவ் ரிலே இருக்கு! என்னைப் போக விடுங்க!" கிட்டாமணி எழ முயன்றார்.

"ரிலாக்ஸ் மிஸ்டர் கிட்டாமணி! கல்கத்தாவுலே ஃபைனல்ஸா? நீங்க ஏதோ குழம்பியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இன்னிக்கு என்ன தேதின்னு சொல்லுங்க பார்க்கலாம்."

"இன்னிக்கு நவம்பர் 8. வருசம் 1987. இது கூடவா தெரியாது?" என்று கிட்டாமணி சொல்லவும், பாலாமணி தாழையூத்து சிமெண்ட் ஃபேக்டரியில் சாயங்கால சைரன் ஊதுவதுபோல உரக்க அழத்தொடங்கினார்.

"அழாதீங்கம்மா! நீங்க பாட்டுக்கு ஜாம்ஷெட்பூர் ஜவ்வரிசி உப்புமா, கோரக்பூர் கோதுமைக் கிச்சடின்னு எதையாவது டிபன்னு கொடுக்க வேண்டியது. அப்புறம் எங்க உசிர வாங்க வேண்டியது. பொறுமையா இருங்க. அவர் போக்குலேயே விட்டுப் பிடிப்போம்," என்று கடிந்து கொண்ட டாக்டர் உலகப்பன், முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தபடி மீண்டும் கிட்டாமணியோடு பேசினார்.

"மிஸ்டர் கிட்டாமணி! உங்களுக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்குமோ?"

"என்ன அப்படிக் கேட்கறீங்க டாக்டர்? கிரிக்கெட்னா உயிரு எனக்கு. அதுவும் இந்த வருசம் நம்ம டீம் சூப்பரா வெளாண்டிருக்கானுங்க. ஜனவரிலே நம்ம கபில்தேவ் 300-வது விக்கெட்டை எடுத்தாருன்னா, மார்ச்சுலே கவாஸ்கர் 10000 ரன் அடிச்சு உலக சாதனை பண்ணியிருக்காரு! என்ன, ரிலயன்ஸ் வேர்ல்ட்-கப் செமிஃபைனலிலே கோட்டை விட்டுட்டாங்க!"

"ஓஹோ!" என்று அர்த்தபுஷ்டியாகப் புன்னகைத்த டாக்டர் உலகப்பன், பாலாமணி பக்கம் திரும்பி வினவினார். "உங்க புருஷன் கிரிக்கெட் ரொம்பப் பார்ப்பாரோ?"

"அதையேன் கேட்கறீங்க டாக்டர்? அவரு ஒரு வாட்டி கிரிக்கெட் மேட்சு பாத்திட்டிருந்தாரு! கஞ்சிக்காக வச்சிருந்த புழுங்கலரிசியைக் கொடுத்து, மேட்சைப் பார்த்திட்டே கல் பொறுக்குங்கன்னு கொடுத்தேனா, அவரு பாட்டுக்கு ஆட்டத்தைப் பார்க்கிற சுவாரசியத்துலே மொத்த அரிசியையும் வாயிலே போட்டு பச்சையாவே மென்னு தின்னுட்டாரு!"

"ஐயையோ, அப்புறம் என்னாச்சு?"

"அப்புறம் என்ன, கொஞ்சம் உப்பும் வெந்நீரும் கொடுத்துச் சாப்பிடச்சொன்னேன். உள்ளே போய் எல்லாம் சேர்ந்து கஞ்சியாயிருக்கும்."

’நல்ல வேளை, அவரை அடுப்புலே உட்கார்த்தி சூடு பண்ணாம இருந்தவரைக்கும் சரி,’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார் டாக்டர் உலகப்பன். பிறகு,

"ஏன் மிஸ்டர் கிட்டாமணி? கிரிக்கெட்டுன்னா அவ்வளவு ஈடுபாடா?" என வினவினார்.

"டாக்டர், எனக்கு டென்னிஸ் கூடப் பிடிக்கும் டாக்டர்!" என்று துள்ளியெழுந்தார் கிட்டாமணி. "இந்தவாட்டி பிரெஞ்சு ஓப்பனிலே ஸ்டெஃபி கிராஃப் ஜெயிச்சதைப் பார்த்தீங்களா? ஆனானப்பட்ட மார்ட்டினா நவரத்திலோவாவையே மண்ணைக் கவ்வ வச்சிட்டாங்க பார்த்தீங்களா?"

"க்கும்! நீங்க எங்கே ஆட்டத்தைப் பார்த்தீங்க?" என்று முகவாய்க்கட்டையை வெடுக்கென்று திருப்பிக்கொண்டார் பாலாமணி. "ஸ்டெஃபி கிராஃபையே கண்கொட்டாம இஞ்சிதின்ன குரங்கு மாதிரி பார்த்திட்டிருப்பீங்க!"

"சும்மாயிரு பாலாமணி! ஏன் ஸ்டெஃபி கிராஃப் மேலே உனக்கு இவ்வளவு பொறாமை. அவங்க அழகாயிருக்காங்கன்னுதானே? உன் வயித்தெரிச்சலாலே தான் பாவம் விம்பிள்டனிலே அதே நவரத்திலோவா கிட்டே தோத்துப் போயிட்டாங்க!"

"மிசஸ் பாலாமணி! பேசாமயிருங்க!," என்று கையமர்த்திய டாக்டர் உலகப்பன், "ஏன் மிஸ்டர் கிட்டாமணி? சினிமா பார்ப்பீங்களா?"

"ஓ! மாசத்துக்கு ரெண்டு சினிமா போவோம் டாக்டர்," என்று உற்சாகமானார் கிட்டாமணி. "நான் ரஜினி ரசிகன். பாலாமணி கமல் ரசிகை. அதுனாலே ரெண்டு பேர் படத்தையும் விடுறதில்லை! மனிதன் படமும் பார்த்தோம். நாயகனும் பார்த்தோம்."

"சரிதான், கமல் ரஜினி படம்தான் பார்ப்பீங்களோ?"

"இல்லை டாக்டர்! எங்க ரெண்டு பேருக்குமே பாலசந்தர், பாக்யராஜ், பாலுமகேந்திரா படம் எல்லாம் புடிக்கும். அதுனாலே எங்க சின்ன ராசா, மனதில் உறுதி வேண்டும், ரெட்டைவால் குருவி எல்லாம் பார்த்தாச்சு! அப்புறம், மிஸ்டர் இந்தியா-ன்னு ஒரு இந்திப்படம் வந்திருக்கு டாக்டர். ஹிஹிஹி!"

"அதுக்கு என் சிரிக்கிறீங்க?"

"அதுலே ஸ்ரீதேவி ரெட் கலருலே ஷிபான் ஸாரி கட்டிக்கிட்டு ஒரு பாட்டுலே வருவாங்க தெரியுமா?"

"ஓ! நீங்க ஸ்ரீதேவியோட ஃபேனா?"

"சாதாரணம் ஃபேன் இல்லே டாக்டர். நான் ஸ்ரீதேவியோட கைத்தான் ஃபேன்."

"நர்ஸ்!" என்று நர்ஸ் நாகம்மாவை அழைத்த டாக்டர் உலகப்பன் ரகசியமாக எதையோ சொல்ல, கிட்டாமணிக்கு ஒரு ஊசிபோடப்பட்டது.

"மிஸ்டர் கிட்டாமணி! இன்னும் கொஞ்ச நேரத்துலே தூங்கிருவீங்க! முழிச்சதுக்கப்புறமா வீட்டுக்குப்போகலாம் சரியா?"

டாக்டர் உலகப்பன் அங்கிருந்து நகர, பாலாமணியும் பின்தொடர்ந்தார்.

"டாக்டர், என் புருஷனுக்கு என்னாச்சு டாக்டர்?"

"அவருக்கு பழசெல்லாம் மறந்திருச்சு!"

"அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே! இந்த ஞாயிற்றுக்கிழமை கூட ஹிண்டுவுலே மேட்ரிமோனியல் பார்த்திட்டிருந்தாரே!"

"இல்லீங்க, நான் சொல்றது சீரியஸான விசயம்! அவரு இப்போ 1987 வருசத்துலேயே இருக்காரு! அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் அவருக்குத் திடீர்னு மறந்திருச்சு!" என்று விளக்கினார் டாக்டர் உலகப்பன்.

"ஐயையோ! எப்படி டாக்டர்?"

"சில பேருக்குச் சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டா, பல வருஷம் கழிச்சு அவங்க மூளையிலே பாதிப்பு ஏற்படுறதுண்டு. அது மாதிரிதான் இதுவும்."

"என்ன டாக்டர், சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டா, இத்தனை வருஷம் கழிச்சா பாதிப்பு ஏற்படும்?"

"ஏன் ஏற்படாது? மண்டை அதே மண்டை தானே?" என்று மேலும் விளக்கினார் டாக்டர். "அது போகட்டும், அவருக்கு 1987-ம் வருஷத்துலே தான் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்குது. உங்களுக்குத் தெரிஞ்சு அந்த வருஷம் அந்த மாதிரி ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துதுன்னு சொல்ல முடியுமா?"

"அந்த வருஷம்தான் எங்களுக்குக் கல்யாணமே ஆச்சு டாக்டர்!"

"ஓ ஐ ஸீ!" என்று வெற்றிப்பெருமிதத்துடன் புன்னகைத்தார் டாக்டர். "எனி வே, ஒரு நாலு மணி நேரம் அவர் தூங்கட்டும். முழிச்சதும் அவர் எப்படியிருக்காருன்னு பார்த்திட்டு மேற்கொண்டு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணுவோம். சரியா?"

பாலாமணி கவலைதோய்ந்த முகத்தோடு போக, டாக்டர் உலகப்பன் தனது ஓய்வறைக்குச் சென்றார். மேஜை மீதிருந்த செய்தித்தாளைப் பார்த்தவர் அதையெடுத்து வாசிக்க ஆரம்பித்தவர் தலைப்புச் செய்தியைப் பார்த்த அடுத்த கணமே அதிர்ந்து போனார்.

"ஒரு நாளைக்கு ரூ.32 செலவழிக்கிறீர்களா? நீங்கள் ஏழையில்லை! இந்திய திட்டக் கமிஷன் அறிக்கை!"

அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தொடர்ந்து செய்தியை வாசித்தார் டாக்டர் உலகப்பன்.

"இந்தியாவின் திட்டக்கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்துக்கு ரூ.965 செலவழிக்கும் நகரவாசிகளும், ரூ.781 செலவழிக்கும் கிராமவாசிகளும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கருதப்பட மாட்டார்கள். அதாவது நாளொன்றுக்கு ரூ.32 செலவழிக்கும் நகரவாசிகளும், ரூ.26 செலவழிக்கும் கிராமவாசிகளும் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்."

டாக்டர் உலகப்பனுக்குத் தலைசுற்றியது. சமாளித்தபடி மேலும் வாசித்தார்.

"மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3860 செலவானால், அவர்கள் ஏழைகள் என்று கருதப்பட மாட்டார்கள்."

டாக்டர் உலகப்பனுக்கு வியர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து செய்தியை வாசித்தார்.

"நாளொன்றுக்கு ரூ.5.50 அரிசி/கோதுமைக்குச் செலவழித்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். ரூ. 1.02 பருப்புக்காகவும், ரூ.2.33 பாலுக்காகவும், ரூ.1.55 சமையல் எண்ணைக்காகவும் செலவழித்தாலே ஒரு குடும்பம் ஊட்டச்சத்துடன் திகழும். இத்துடன் காய்கறிகளுக்காக ரூ.1.95 மற்றும் பழவகைகளுக்காக 44 பைசாவும் செலவழிப்பவர்களும் ஏழைகளாய்க் கருதப்பட மாட்டார்கள்."

டாக்டர் உலகப்பனுக்குக் கண்கள் இருளத்தொடங்கின. துணிச்சலை வரவழைத்து மேலும் செய்தியை வாசித்தார்.

"மருத்துவச்செலவுக்கு ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு ரூ.39.70 செலவழித்தாலே போதுமானது. கல்விக்கு ஒரு நாளைக்கு 99 பைசா போதுமானது..."

"அடப்பாவிகளா! இந்தச் செய்தியை டிவியில் பார்த்துத்தான் கிட்டாமணிக்கு இந்த கதி ஏற்பட்டதா? 1987-ல் கூட சென்னையில் ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் போதாதே சாமிகளா!" என்றெல்லாம் யோசித்த டாக்டர் உலகப்பனுக்கு திடீர் என்று பகீர் என்றது.

"ஒரு வேளை கிட்டாமணி முப்பத்தி ஒன்பது ரூபாய் எழுபது பைசாவை முப்பதாலே வகுத்து நமக்கு பீஸ் கொடுத்தாலும் கொடுப்பாரோ?"

அடுத்த கணமே அவர் மயங்கி விழுந்தார். அடுத்த நாள் காலை செய்தித்தாள்களில் தலைப்பு.....

"பிரபல மனோதத்துவ டாக்டருக்கு ’திடீர்’ பைத்தியம்!"

37 comments:

கடம்பவன குயில் said...

ஐயோ..கடவுளே... அழறதா உண்மையை இப்படி பாளிஷா சொன்னதுக்காக வருத்தப்படறதா காமெடிய கையில் எடுத்ததுக்காக சிரிக்கறதானே தெரியல.

மொத்தத்தில அரசாங்கத்தோட புள்ளிவிவரங்களெல்லாம் அப்படித்தான்..நம்மையும் பைத்தியம் பிடிக்க வச்சுடும்.

நல்லா கதைமூலம் நாட்டுநடப்பு..... நடக்கட்டும் நடக்கட்டும்.

பால கணேஷ் said...

புது பிளேடால் கீறினால் சற்று நேரம் கழித்துத் தான் ரத்தம் வருவது போல, நகைச்சுவையை ரசித்துச் சிரித்து விட்டு சற்று நேரம் கழித்துத் தான் நல்ல விஷயம் ஒன்றை நீங்கள் சொல்லியிருப்பதைப் புரிந்தேன். அருமை!

Unknown said...

மாப்ள நடப்பை கலந்து கட்டி கொன்னுட்டீங்க ஹஹா!

rajamelaiyur said...

Kalakkal

rajamelaiyur said...

Tamilmanam 3

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

அசத்தலான அரசியல் மொக்கை மூலம் இனிய காலைப் பொழுதை மகிழ்ச்சிகரமான பொழுதாக தொடக்கி வைத்திருக்கிறீங்க.

நிரூபன் said...

கிட்டாமணிக்கு எல்லா விளையாட்டுக்கள் மீதும் தீராத காதல் இருக்குமோ...

ஹே..ஹே...

நிரூபன் said...

அரசியல், விளையாட்டு,
அடிக்கடி மாற்றம் பெறும் மனித மன உணர்வுகள்,
தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத கிணற்றுத் தவளையான கிட்டாமணியின் அதிர்ச்சி கலந்த சம்பவங்கள் என அனைத்தையும் தொகுத்து அசத்தியிருக்கிறீங்க.

Unknown said...

சரியான புனைவு சேட்டை..

சத்ரியன் said...

//உங்களுக்குத் தெரிஞ்சு அந்த வருஷம் (1987) அந்த மாதிரி ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துதுன்னு சொல்ல முடியுமா?"

"அந்த வருஷம்தான் எங்களுக்குக் கல்யாணமே ஆச்சு டாக்டர்!"//

சேட்டை,

நல்லவேளை நான் 1987-ல கல்யாணம் பண்ணிக்கல...

vasu balaji said...

:)))).நேத்து பேப்பர்ல படிச்சப்பவே நினைச்சேன் இதுக்கு சேட்டை ட்ரீட்மெண்ட் இருக்கும்னு..ஆனா இப்படி எதிர்பார்க்கல:)) அடிப்பொளீ

K said...

வித்தியாசமான திகுப்பும் கருத்தும் நண்பா! சிந்திக்கவேற வச்சுட்டீங்க!

Rekha raghavan said...

இது செம சேட்டை!

சேலம் தேவா said...

இந்த திட்டக்கமிஷன் எல்லாம் நாம திட்றதுக்கே திட்டம் போடுவாங்க போல...நல்லாருக்கு. :)

Unknown said...

சேட்டை யின்னா சேட்டைதான்
சிரிக்க வைக்கும் சேட்டைதான்
சிந்திக்க வைக்கும் சேட்டைதான்
ஒப்பீடும் நையாண்டியும்
உயர் தரம்!

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...

அனேகமா இதப் படிச்சா மோன்டேக் கூட பைத்தியம் புடிச்சு திரிவார்

cheena (சீனா) said...

அன்பின் சேட்டைக்காரன் - சூப்பர் நகைச்சுவை - திட்டக்கமிஷனோட அறிக்கை - சும்மா சொல்லக்கூடாது - எழுதுனவனுக்கு நோபல் பரிசு கொடுக்கணூம். நலலாருக்க் கத - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said...

கலந்து கட்டி கலக்குங்க மக்கா...!!!

த. ஜார்ஜ் said...

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் செலவழிக்க தனியாக ஏதாவது நாணயம் இருக்கிறதா... அதையும் கேட்டு சொல்லிவிடுங்கள்.[பைசாக்கள் எல்லாம் இப்போ செல்லாக் காசாகிவிட்டனவே.]

உணவு உலகம் said...

வளமான கற்பனை.பகிர்விற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

சலூன்ல கதை கேட்டுட்டே 'பேப்பர்' படிச்சது போல்...நையாண்டியோட..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"ஏன் ஏற்படாது? மண்டை அதே மண்டை தானே?" என்று மேலும் விளக்கினார் டாக்டர். "அது போகட்டும், அவருக்கு 1987-ம் வருஷத்துலே தான் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்குது. உங்களுக்குத் தெரிஞ்சு அந்த வருஷம் அந்த மாதிரி ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துதுன்னு சொல்ல முடியுமா?"

"அந்த வருஷம்தான் எங்களுக்குக் கல்யாணமே ஆச்சு டாக்டர்!"

"ஓ ஐ ஸீ!" என்று வெற்றிப்பெருமிதத்துடன் புன்னகைத்தார் டாக்டர்//

சூப்பர் காமெடி இது தான்.

தமிழ்மணம் 14
இண்ட்லி 17
vgk

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சேட்டை. நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. கடைசியில் இருந்த தகவல்.... :(

Anonymous said...

வாசிக்க வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு சார்.

வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியகார டாக்டருக்கு பைத்தியமா... சூப்பர்... நல்லா சிரிக்க சிரிக்க படிச்சேன்...:))

settaikkaran said...

//கடம்பவன குயில் said...

ஐயோ..கடவுளே... அழறதா உண்மையை இப்படி பாளிஷா சொன்னதுக்காக வருத்தப்படறதா காமெடிய கையில் எடுத்ததுக்காக சிரிக்கறதானே தெரியல.//

என்னை மாதிரி தலையிலே மளார் மளார்-னு அடிச்சுக்காம இருந்தா சரி! :-)

//மொத்தத்தில அரசாங்கத்தோட புள்ளிவிவரங்களெல்லாம் அப்படித்தான்..நம்மையும் பைத்தியம் பிடிக்க வச்சுடும்.//

அதுனாலே தானோ முந்தி விளையாட்டுத்துறை அமைச்சரா இருந்தவரை புள்ளிவிவரத்துறை அமைச்சராப் போட்டாங்க போலிருக்குது. :-)

//நல்லா கதைமூலம் நாட்டுநடப்பு..... நடக்கட்டும் நடக்கட்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கணேஷ் said...

புது பிளேடால் கீறினால் சற்று நேரம் கழித்துத் தான் ரத்தம் வருவது போல, நகைச்சுவையை ரசித்துச் சிரித்து விட்டு சற்று நேரம் கழித்துத் தான் நல்ல விஷயம் ஒன்றை நீங்கள் சொல்லியிருப்பதைப் புரிந்தேன். அருமை!//

சுருக்கமா ’பிளேடு போட்டிருக்கே சேட்டை,’ என்று சொல்ல வேண்டியதை இப்படி சுத்தி வளைச்சு சொல்றீங்களா? :-))))))) சும்மா டமாசு!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள நடப்பை கலந்து கட்டி கொன்னுட்டீங்க ஹஹா!//

நாமும் வலிக்காத மாதிரியே எம்புட்டு நாள் நடிக்கிறது...? :-)
மிக்க நன்றி!

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal Tamilmanam 3

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,//

இனிய காலை வணக்கம் சகோ!

//அசத்தலான அரசியல் மொக்கை மூலம் இனிய காலைப் பொழுதை மகிழ்ச்சிகரமான பொழுதாக தொடக்கி வைத்திருக்கிறீங்க.//

அப்படீங்கறீங்க...? இவனுக பண்ணுற கூத்துலே எங்க பொழப்பு சிரிப்பாச் சிரிக்குது சகோ!

//கிட்டாமணிக்கு எல்லா விளையாட்டுக்கள் மீதும் தீராத காதல் இருக்குமோ...ஹே..ஹே...//

கிட்டாமணி இனி அடிக்கடி வருவார்; நீங்களே தெரிந்து கொள்வீர்கள். :-)

//அரசியல், விளையாட்டு, அடிக்கடி மாற்றம் பெறும் மனித மன உணர்வுகள்,
தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத கிணற்றுத்தவளையான கிட்டாமணியின் அதிர்ச்சி கலந்த சம்பவங்கள் என அனைத்தையும் தொகுத்து அசத்தியிருக்கிறீங்க.//

எல்லாத்தையும் விட, மிகவும் பெரிதுபடுத்தப்பட்ட சில அமைப்புகள் பற்றிய பிம்பம் சுக்கல் சுக்கலாகியிருப்பதையே குறிப்பிட விரும்பினேன்.

மிக்க நன்றி சகோ! :-)

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சரியான புனைவு சேட்டை..//

மிக்க நன்றி நண்பரே!

//சத்ரியன் said...

சேட்டை, நல்லவேளை நான் 1987-ல கல்யாணம் பண்ணிக்கல...//

ஹிஹி, நானும் அப்படித்தான். :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

:)))).நேத்து பேப்பர்ல படிச்சப்பவே நினைச்சேன் இதுக்கு சேட்டை ட்ரீட்மெண்ட் இருக்கும்னு..ஆனா இப்படி எதிர்பார்க்கல:)) அடிப்பொளீ//

ஐயா இந்தப்பக்கம் வந்து வெகுநாளாச்சே, ஒரு போன் போட்டிரலாமான்னு யோசிச்சிட்டேயிருந்தேன். வந்து மனதைக் குளிர வைத்து விட்டீர்கள் ஐயா. மிக்க நன்றி! :-)

//Powder Star - Dr. ஐடியாமணி said...

வித்தியாசமான திகுப்பும் கருத்தும் நண்பா! சிந்திக்கவேற வச்சுட்டீங்க!//

புதுப்புது get-upலே வர்றீங்க? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//ரேகா ராகவன் said...

இது செம சேட்டை!//

மிக்க நன்றி ஐயா! :-)

//சேலம் தேவா said...

இந்த திட்டக்கமிஷன் எல்லாம் நாம திட்றதுக்கே திட்டம் போடுவாங்க போல...நல்லாருக்கு. :)//

திட்டவட்டமாக நீங்க சொல்றதை நான் ஆமோதிக்கிறேன்.
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

சேட்டை யின்னா சேட்டைதான்
சிரிக்க வைக்கும் சேட்டைதான்
சிந்திக்க வைக்கும் சேட்டைதான்
ஒப்பீடும் நையாண்டியும் உயர் தரம்!//

புலவர் ஐயாவின் கருத்துக்களால்
புளகாங்கிதம் அடைந்தேன் ஐயா!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

அனேகமா இதப் படிச்சா மோன்டேக் கூட பைத்தியம் புடிச்சு திரிவார்//

இப்போ மட்டும் என்னவாம்..? :-)
வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//cheena (சீனா) said...

அன்பின் சேட்டைக்காரன் - சூப்பர் நகைச்சுவை - திட்டக்கமிஷனோட அறிக்கை - சும்மா சொல்லக்கூடாது - எழுதுனவனுக்கு நோபல் பரிசு கொடுக்கணூம். நலலாருக்க் கத - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

ஐயா, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் இங்கு வந்து பின்னூட்டமிட்டிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா!

//MANO நாஞ்சில் மனோ said...

கலந்து கட்டி கலக்குங்க மக்கா...!!!//

மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

settaikkaran said...

//த. ஜார்ஜ் said...

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் செலவழிக்க தனியாக ஏதாவது நாணயம் இருக்கிறதா... அதையும் கேட்டு சொல்லிவிடுங்கள்.[பைசாக்கள் எல்லாம் இப்போ செல்லாக் காசாகிவிட்டனவே.]//

செம! சவுக்காலடிப்பது போன்று ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள் நண்பரே! இது பற்றி நான் யோசிக்கவேயில்லையே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//FOOD said...

வளமான கற்பனை.பகிர்விற்கு வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரெவெரி said...

சலூன்ல கதை கேட்டுட்டே 'பேப்பர்' படிச்சது போல்...நையாண்டியோட..//

சலூன் ஒரு படுசுவாரசியமான அனுபவம்! :-)
மிக்க நன்றி நண்பரே!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பர் காமெடி இது தான். தமிழ்மணம் 14 இண்ட்லி 17//

ஐயாவின் வருகையும் கருத்தும் தருகிற மகிழ்ச்சியுடன், உங்களது ஓட்டுக்கள் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்வது போல! மிக்க நன்றி ஐயா! :-)

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சேட்டை. நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. கடைசியில் இருந்த தகவல்.... :(//

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் சொல்லிவிட்டாரே! எல்லாவற்றையும் நக்கலாய் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...

வாசிக்க வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு சார். வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..//

நானும் குழந்தையாய் இருந்து வளர்ந்தவன் தான்; அவசியம் வருகிறேன் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியகார டாக்டருக்கு பைத்தியமா... சூப்பர்... நல்லா சிரிக்க சிரிக்க படிச்சேன்...:))//

ஆஹா, இந்த இடுகை கொஞ்ச நாட்களாய் இங்கு வராமலிருந்த பலரை வரவழைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

ரிஷபன் said...

அவரு பாட்டுக்கு ஆட்டத்தைப் பார்க்கிற சுவாரசியத்துலே மொத்த அரிசியையும் வாயிலே போட்டு பச்சையாவே மென்னு தின்னுட்டாரு!"

"ஐயையோ, அப்புறம் என்னாச்சு?"

அப்புறம் என்ன, கொஞ்சம் உப்பும் வெந்நீரும் கொடுத்துச் சாப்பிடச்சொன்னேன். உள்ளே போய் எல்லாம் சேர்ந்து கஞ்சியாயிருக்கும்

ஐயோ சேட்டை தாங்கல..

G.M Balasubramaniam said...

அன்பு சேட்டைக்காரரே, இடுக்கண் வருங்கால் நகுக, என்று நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பிரபல மனோதத்துவ டாக்டருக்கு ’திடீர்’ பைத்தியம்!"/

வாழ்த்துக்கள்.

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி...

ஜூப்பரு...


#உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் தல...
இன்றுதான் உங்க பேஜ் பக்கம் வரமுடிஞ்சுது....மன்னிக்கவும்...

நாய் நக்ஸ் said...

இதுதான் சேட்டை என்கிறது !!!!
இதை எழதி உங்களுக்கு ஒன்னும் ஆகலையா ????

kaialavuman said...

இனிமேல் ரூபாய் நோட்டுகள் அணைத்தையும் புழக்கத்திலிருந்து நீக்கி திரும்ப 1,2,3,5,10 பைசாக்களை அச்சடிக்க எண்ணியுள்ளதாகத் தகவல்.

settaikkaran said...

@ரிஷபன்
@G.M Balasubramaniam
@இராஜராஜேஸ்வரி
@NAAI-NAKKS
@வேங்கட ஸ்ரீனிவாசன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)