Wednesday, July 28, 2010

பதிவுலகில் நான் ஒரு ?????

இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்தவர் நண்பர் முகிலன்! இரண்டாவது முறையாக என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். (இந்த ஊரு இன்னுமா என்னை நம்புது?)

"ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும்
அன்றி அது வரினும், வந்து எய்தும்; ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்." -ஔவையார்

இதற்கு "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் சுருக்கமாகச் சொன்ன உரை:

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது."

ஒரு மனிதன் வாழ்க்கையிலே கேட்கும் மிகச் சிறந்த கேள்வி, அவன் தன்னிடமே கேட்ட முதல் கேள்விதான்,’ என்று ஒரு தலைசிறந்த அறிஞர் சொல்லியிருக்கிறார். (அது யாருன்னு கேட்காதீங்க, எனக்கு புகழ்ச்சியே பிடிக்காது!)

இந்த வலையுலக வாழ்க்கையில் என்ன சாதித்து விட்டாய்? என்ற கேள்வியை என்னை நான் கேட்டதே அதிகம். அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல், தூக்கக்கலக்கத்தில் காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக ரவையைப் போட்டுக் குடித்தவனைப் போல அசடுவழிந்து, ஏறக்குறைய ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, நான் மீண்டும் எனது வலைப்பதிவை ஒட்டடையடிக்க வந்தபோதுதான் இது போன்ற பல பதிவுகள் உலாவந்து கொண்டிருந்தன!

"வலையுலகத்தில் நான் யார்?" இது தான் தலைப்பு!

சுயபரிசோதனை செய்ய இப்படியும் ஒரு வழியிருக்கா? தவற விட்டுட்டோமென்னு உச்சுக்கொட்டிக் கொண்டிருக்கையில், முகிலன் ஒரு இடுகைபோட்டு எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு எனது பணிவான, உளமார்ந்த நன்றிகள்!

கேள்வி-பதில் படலம் ...’ரம்பம்!’

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சேட்டைக்காரன்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயரில்லை! இப்படியொரு பெயரை திம்மஞ்சேரலா டுமீல் ரெட்டி தனது டப்பிங் படத்துக்கே வைக்கமாட்டாரே!

வேட்டைக்காரன்,’ படத்தைப் பார்த்துவிட்டு, விளக்கெண்ணையை நக்கிய வெள்ளெலி மாதிரி வெளிவந்தபோது ஏற்பட்ட வெறியின் வெளிப்பாடே இது. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி......

கணினி இருந்தது; இணையம் இருந்தது; தமிழ் தட்டச்சு மென்பொருளோ தண்ணீர்பட்ட பாடாய்க் கிடைக்கிறது. காசா பணமா? ’எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு,’ங்குறா மாதிரி வந்திட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணுமே பண்ணலீங்க!

பெரியவங்களாப் பார்த்து கைகொடுத்துத் தூக்கி விட்டுட்டாங்க!

சகோதரி அநன்யா மகாதேவன் தான் தமிழ்மணம், தமிழீஷ் போய் பதிவு பண்ணச் சொன்னாங்க!

அருமை நண்பர் பிரபாகர் என்னைப்பற்றி ’வலைச்சரம்’ இடுகையில் அறிமுகப்படுத்தினாரு! அதைத் தொடர்ந்து.....

ஜெட்லீ,

ஸ்டார்ஜன்,

அக்பர்.......

என்று பல அனுபவசாலிகள் என்னைப் பற்றி அவரவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும்போது குறிப்பிட ஆரம்பிச்சாங்க!

பொதுவா தெரிஞ்சவங்க என்னை வெளங்காமூஞ்சி© -ன்னு சொல்லுவாங்க! (© இந்தப் பெயரிலே யாராச்சும் வலைப்பதிவு ஆரம்பிக்காம இருக்கணுமே!). ஆனால், வலையுலகைப் பொறுத்தமட்டில் மேற்கூறிய பதிவர்களின் வழிநடத்துதல், ஆதரவு எல்லாவற்றையும் மேலாக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஒரு அம்மாவின் தொடரும் அன்பு, நான் வணங்கும் சென்னை காளிகாம்பாளின் கருணை....எவ்வளவு காரணங்கள்!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முதலில் எழுதியதுண்டு; இப்போது இல்லை! காரணம், எனது தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டி, எனக்கு நானே வக்கீலாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்! மேலும் ஒரு மெல்லிய நூலில் கட்டுண்டு கிடக்கும் முரண்பாடுகளின் மூட்டை நான்! எதையோ எழுதி யாரோ வாசித்து என்காரணமாய் அவர் தனது பலவீனங்களோடு சமரசம் செய்து கொள்வதற்கு ஏன் வழி செய்ய வேண்டும்?

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

வலைப்பதிவு மூலம் சம்பாதிக்க முடியுமா? மெய்யாலுமேவா?

எனக்குத் தெரிந்த சம்பாத்தியம்.........

கணக்கில் இலாபம்:-

பொதுவாக சொல்வதென்றால், எத்தனையோ சகபதிவர்களின் அன்பும், நட்பும்.....

குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ’வலைச்சரம்’ ஆசிரியராக ஒரு வாரம் இருந்தது. பல பதிவர்களை அறிமுகம் செய்ய முடிந்தது. நான் யார், எனது முகவரி என்ன, நல்லவனா கெட்டவனா என்று கூடத் தெரியாத நிலையில் பெருந்தன்மையோடு அன்புக்கும் மரியாதைக்குமுரிய சீனா ஐயா அவர்கள் எனக்களித்த வாய்ப்பினை அவரது ஆசியாகவே இன்றளவிலும் கருதுகிறேன்.

கணக்கில் நஷ்டம்:-

சில சூழல்களில் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டதால் ஏற்பட்ட விரோதம். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பொழுதுபோக்குக்காகத் தான் எழுத ஆரம்பித்தேன்! ஆனால், என்னை பலர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது இன்னும் விளங்காத வினோதம்!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

குறுஞ்செய்தி, நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச்சித்திரங்கள் என்று முழுக்க முழுக்க நகைச்சுவையாய் ஒரு வலைப்பதிவு வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இப்போதைக்கு ’சேட்டைக்காரன்’ மட்டுமே!

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சில சர்ச்சைக்குரிய பதிவுகளைப் படித்து சில சமயங்களில் கோபம் ஏற்படுவதுண்டு. அந்தப் பட்டியலை வெளியிட இன்னொரு வலைப்பதிவுதான் ஆரம்பித்தாக வேண்டும்.

பொறாமை!(பெரிய எழுத்தில் படிக்கவும்!) பல வலைப்பதிவர்கள் மீதுண்டு! தமிழறிவு, சொல்வீச்சு, கருத்துக்களின் ஆழம், நகைச்சுவை உணர்வு, துணிச்சல் என்று பல அரிய குணங்களைக் கொண்டிருக்கிற பதிவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ’இவங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சரக்கைக் கொடுத்தாய் இறைவா?’ என்று பொறாமைப் படுவது இப்போதும் உண்டு. இந்தப் பட்டியலும் மீக நீளமானது.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

சகோதரி. முத்துலெட்சுமி!

அட, நம்ம இடுகைக்கு கருத்தா?’ என்று போய்ப்பார்த்தேன். அவரது பெயரைச் சொடுக்கி அவரது வலைப்பதிவைப் பார்த்ததும் நான் வாய்பிளந்தபோது, நல்லவேளையாக யாரும் அருகில் கால்பந்து ஆடவில்லை! இல்லாவிட்டால் என் வாய்க்குள்ளே கோல் போட்டு கப்பு வாங்கியிருப்பார்கள்.

நண்பர். கந்தவேல் ராஜன்-எனது வலைப்பதிவை பின்தொடர்ந்த முதல் நண்பர்! கைராசிக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்! கணினி சார்ந்த தொழிலை மேற்கொண்டிருப்பவர். கூகிள் குழுமங்களில் பெரிதும் மதிக்கப்படுபவர். எனக்கு அவர் உற்சாகமூட்டிக் கொண்டிருப்பது இன்றளவிலும் தொடர்கிறது.

10) கடைசியாக...........விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஒரே வாக்கியத்தில்.....நான் ஒரு மோசமான முன்னுதாரணம்!

அடுத்தது இதைத் தொடரப் போகிறவர்கள்........!

1. சகோதரி முத்துலெட்சுமி
2. நண்பர் அஹமது எர்ஷாத்
3. சகோதரி அஷீதா
4. நண்பர் இரா.எட்வின்
5. நண்பர் நான் ஆதவன்

அம்புட்டுத்தேன்! மோர் ஊத்தியாச்சு! :-)

21 comments:

அ.முத்து பிரகாஷ் said...

சேட்டை பாஸ் ...தொடர்ந்து வலையில் கலக்குங்க ...வாழ்த்துக்கள்
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html

Mahi_Granny said...

autobiography range க்கு இருக்கு ரொம்ப அழகாய் . இரண்டு வைர மோதிரக் கை சொட்டு கிடைத்ததால் வந்திருக்கும் போல இந்த உயரம். உங்களை வலைச்சர ஆசிரியர் வாரத்திலிருந்து தொடர்கிறேன். திடிரென்று லீவ் சொல்லி போனப் போது ஒரு மாதிரியாக இருந்தது. வந்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்

Chitra said...

அம்புட்டுத்தேன்! மோர் ஊத்தியாச்சு! :-)


...... நல்ல நகைச்சுவை விருந்து.... :-)

பிரபாகர் said...

நண்பா...

இதிலும் உங்கள் சேட்டையுடன் அசத்தியிருக்கிறீர்கள்.

பிரபாகர்...

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு :)-

எல் கே said...

முதல் வெட்டு

Unknown said...

நல்ல பதில்கள்..

அடுத்த தொடர்பதிவு - நான் ஏன் மோசமான முன்னுதாரணம்?

ரோஸ்விக் said...

//’வேட்டைக்காரன்,’ படத்தைப் பார்த்துவிட்டு, விளக்கெண்ணையை நக்கிய வெள்ளெலி மாதிரி வெளிவந்தபோது//

//அவரது வலைப்பதிவைப் பார்த்ததும் நான் வாய்பிளந்தபோது, நல்லவேளையாக யாரும் அருகில் கால்பந்து ஆடவில்லை! இல்லாவிட்டால் என் வாய்க்குள்ளே கோல் போட்டு கப்பு வாங்கியிருப்பார்கள்.///

இப்புடி எழுதும்போது எப்படிசாமி பொறாமைபடாம இருக்கமுடியும்...??

சந்திக்கணும்... உங்க கால்சீட் கிடைக்குமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள்விக்குறி , ஆச்சரியகுறி, புதிர் :)

சேட்டைக்காரப்பயலேன்னு என்னேரமும் என் பையனை சொல்லிட்டிருப்பேனா அதான் முதல்ல வந்திருக்கேன்.. :)

\\எதையோ எழுதி யாரோ வாசித்து என்காரணமாய் அவர் தனது பலவீனங்களோடு சமரசம் செய்து கொள்வதற்கு ஏன் வழி செய்ய வேண்டும்?//
உண்மையா சொன்னீங்க ... சொந்தவிசயங்களை எழுதத்தொடங்கி சிலசமயம் தவிர்த்திடுவேன் நானும்.

☀நான் ஆதவன்☀ said...

//கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள்விக்குறி , ஆச்சரியகுறி, புதிர் :)//

ரிப்பீட்டே! :))

அழைப்பிற்கு நன்றிங்க சேட்டை. கண்டிப்பா எழுதுறேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அத்தனை பதில்களும் அருமை..
இதிலும் சுவாரஸ்யமாதான் எழுதி இருக்கீங்க..

வலைப்பூவில் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை ஆரம்பிச்சிருச்சி டோய்ய்ய்ய்........

ஜில்தண்ணி said...

சேட்டை சேட்டையாகவே இருக்கீங்க

எல்லாம் செம பதில்கள் அத்தனை எதார்த்தம்

நீங்க நடத்துங்க தல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்று முதல் நீர் ”சேட்டையார்” என அழைக்கப்படுவீர்..

தனி காட்டு ராஜா said...

:)))))

வெங்கட் நாகராஜ் said...

நகைச்சுவை ததும்பும் பதில்கள் சேட்டைக்காரரே - நடத்துங்கள்... :)

சிநேகிதன் அக்பர் said...

பதில்கள் நகைச்சுவையாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இருந்தது சேட்டை.

என் பெயரையும் சேர்த்தாச்சா. அவ்வ்வ்வ்.

Jey said...

உங்கள் பதிவுகளை போலவே,பதில்களிலும் சேட்டை...

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்ல‌ சுவார‌ஸ்ய‌ம் சேட்டைக்கார‌ன்.

திடிரென்று காணாம‌ல் போயிட்டீங்க‌,ந‌ல்லா எழுத‌ற‌வ‌ங்க‌ளெல்லாம் இப்ப‌டி இடைவெளி எடுத்துகிட்டா எப்ப‌டி ந‌ண்பா.தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌.

nis said...

உண்மையிலே நீங்கள் சேட்டைக் காரன் தான்

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html