Friday, July 23, 2010

யாயும் நாயும் யாராகியரோ?


இந்தியாவிலேயே நாய்களுக்கான முதல் ரத்த வங்கி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது நமக்கும் நாய்களுக்கும் மிகவும் பெருமையளிக்கக் கூடிய செய்தியல்லவா?


நாய் என்றால் கேவலமா?

"நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார் வயிற்றில் நரனாய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே."

என்று பட்டினத்தாரே நாயின் பெருமையை ஒரு பாடல்மூலம் விளக்கியிருக்கிறார் என்று காண்க! மேலும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டை நாட்டுப்புலவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார், தனது கட்டுச்சோற்றை நாய் திருடியதும் பாடிய செய்யுளும் குறிப்பிடத்தக்கதாகும்.

"சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராறு நான்முகன் வாகனந் தன்னைமுன் பறறிக்கவ்வி
நாரா யணனுயர் வாகன மாயிற்று நமமைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே."

நாயை "சீராடையற்ற வயிரவன்," என்று அந்தகக்கவி வீரராகவ முதலியார் அப்போது சொன்னதை நினைவுகூர்ந்தே இப்போது நாய்களெல்லாம் விதவிதமாக ஆடையணிந்து அழகுப்போட்டிகளில் கலந்து கொள்கின்றன என்பதை அவ்வப்போது செய்திகள் வாயிலாக நாமெல்லாம் அறிந்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், உலக அழகிப்போட்டிகளில் நமது நாய்கள் கலந்து கொண்டு, இன்னொரு சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, லாரா தத்தா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றால் மறுக்கவா முடியும்? நாய் நற்பணி மன்றங்களும் வரலாம்!

கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமா? அவனை ஒரு நாயைப் போல நேசியுங்கள் என்று பெண்கள் இணையத்தில் எழுதித்தள்ளுகிறார்கள். Want to keep your man happy? Treat him like a dog

இதை வாசித்துவிட்டு சில ஆண்களுக்கு அநாவசியமாக கோபம் வந்து, அவர்கள் பங்குக்கு அவர்களும் மனைவியையும், நாயையும் ஒப்பிட்டு ஜோக் அடித்திருக்கிறார்கள். (இந்த ஆண்கள் எப்போ தான் சீரியஸ் ஆவார்களோ?). உதாரணமாக, இந்தியா போன்ற நாடுகளில் ஆண்கள் ஏன் இரண்டாவது திருமணம் செய்வதைக் காட்டிலும், இன்னொரு நாய் வளர்ப்பதையே விரும்புகிறார்கள் என்று ஒருவர் காரணங்களை அடுக்குகிறார் பாருங்களேன்!

  • வீட்டுக்கு எவ்வளவு லேட்டா வர்றோமோ, நாய் அவ்வளவு சந்தோஷப்படும்.
  • வாய்தவறி ஒரு நாய்கிட்டே இன்னொரு நாய் பேரைச் சொன்னா அதுக்குக் கோபம் வராது.
  • நாயோட அப்பா,அம்மா உங்க வீட்டுக்கு வர மாட்டாங்க
  • நல்லாத் தூங்கிட்டிருக்கும்போது எழுப்பி,’நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?’ன்னு நாய் கேட்கவே கேட்காது.
  • நாயைப் பின்சீட்டுலே உட்காரச் சொன்னா, சமர்த்தா உட்கார்ந்துக்கும்.
  • நாய்க்கு ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிக்கத் தெரியாது

இன்னும் நிறைய இருக்கு; அனுபவஸ்தருங்களை மேலும் நோகடிக்க வேணாமுன்னு இத்தோட நிறுத்திக்குவோம்.

என்னதான் பழிக்குப் பழி என்று எழுதினாலும், ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு தம்மோடு மனிதர்களை ஒப்பிட்டிருப்பது நாய்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமா இல்லையா? நாய்க்கும் மனிதனுக்கும் ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகிற உறவு பற்றி பல நாய்வுகள், மன்னிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சமீபத்துலே பாருங்க, நம்ம திரிஷா ஹைதராபாத்துலே தெருவிலே அடிபட்டுக் கிடந்த ஒரு நாயை அமலா கிட்டே கொண்டுபோய்க் கொடுத்திருக்காங்க! உடனே தெலுங்குப் பத்திரிகை எல்லாத்துலேயும் திரிஷாவோட படத்தைப் போட்டு ஜிலேபி ஜிலேபியாப் பிழிஞ்சு தலைப்புச்செய்தி போட்டுட்டாங்க!

நேத்து பழவந்தாங்கல் சப்-வேயிலே அடிபட்டுக் கிடந்த பாட்டியை இட்டுக்கினு போக ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரமாச்சு!

சேலத்துலே ஒருத்தர் வீட்டு நாய் காணாமப் போனதும், அவர் போஸ்டரெல்லாம் அடிச்சு ஒட்டி, விளம்பரமெல்லாம் கொடுத்து நாயைக் கண்டுபிடிச்சு எல்லாப் பேப்பரிலேயும் கடவாய்ப்பல் தெரிய போஸ்கொடுத்து போட்டோ போட்டாங்க!

நம்ம மதுராந்தகம் பக்கத்துலே ஒரு முதியோர் இல்லத்துலே பாகீரதின்னு ஒரு அம்மா இருக்காங்க! ஒரு கண்ணு பார்வை வேறே இல்லை!

"புள்ளை வெளிநாடு போயிருக்கச்சே மாட்டுப்பொண்ணு தொரத்திட்டாடா! என்னை இங்கேருந்து கூட்டிண்டு போயி ஏதாவது கோயில் குளத்துலே விடேன்; நோக்குப் புண்ணியமாப் போகட்டும்!" என்று சொன்னது நேற்றுக் கேட்டது போலிருக்கிறது. (சே! இதுலே சென்டிமென்ட் வரக்கூடாதுன்னு நினைச்சேன்!)

சரி, நாய் இரத்த வங்கி மேட்டருக்கு வருவோம்! உயர்ஜாதி நாய்களின் இரத்தத்தைச் சேகரித்து வைத்து, விபத்தில் சிக்குகிற நாய்களுக்கு அளித்து உயிர் காப்பாற்றப் போகிறார்களாம். மிகவும் சீரிய செயல் தான் இது! ஆனால், சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது; குறிப்பாக தமிழர் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் விஷயத்திலாவது....

பெரும்பாலும் பணக்கார வீட்டு நாய்களுக்கு டயாபடீஸ், ஹைப்பர்-டென்ஷன் போன்ற உயர்ஜாதி வியாதிகளும் இருக்கலாம். அதையெல்லாம் தெருநாய்களுக்கும் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமானது, தெருநாய்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே பணக்கார வீட்டு நாய்களின் இரத்தத்தை தெருநாய்களுக்கு அளித்துத் தொலைத்தால், அவைகளும் ஆங்கிலத்தில் குரைக்கத் தொடங்கிவிடும். ஸ்னோயி, சீஸர், டைகர் என்று அவைகளும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

பெயர்ப்பலகையை தமிழில் எழுதுவது, தமிழில் பெயர் வைப்பது எல்லாம் சரிதான்! ஆனால், நாயிடம் தமிழில் தான் பேச வேண்டும் என்று ஒரு சட்டத்தை இயற்றித் தொலைத்திருக்கலாம்! அடையாறு, திருவான்மியூர் ஏரியாவில் தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த இரத்த வங்கிகளால் நாய்களுக்குள் மொழிப்பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், நாய்க்கு எது தெரியுமோ இல்லையோ, கடிக்கத் தெரியும்!

20 comments:

ராம்ஜி_யாஹூ said...

My appreciation and thanks to the blood bank organisers.

Jey said...

ஏம்ப்பா, நாய்க்கு சரக்க வச்சியே... சைடிஷ் வச்சியாப்பா???....

நல்ல நகைச்சுவையா இருக்கு:)

Jey said...

ஏம்ப்பா, நாய்க்கு சரக்க வச்சியே... சைடிஷ் வச்சியாப்பா???....

நல்ல நகைச்சுவையா இருக்கு:)

வெங்கட் நாகராஜ் said...

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

//இன்னொரு சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, லாரா தத்தா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றால் மறுக்கவா முடியும்?//

இங்கே லோதி ரோட் பகுதியில் ஒரு கடையின் அருகே சுற்றும் சில தெரு நாய்களுக்கு, கடைக்காரர் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, யுக்தா முகி என சினிமா நட்சத்திரங்களின் பெயராகவே வைத்து அழைத்து மகிழ்கிறார்.

Chitra said...

Welcome back! Happy to see your blog in action! Keep rocking!
நான் லீவுல போகும் போதுதான், திரும்பி வரணும்னு சொல்லி இருந்தால், அப்போவே லீவு போட்டு இருப்பேன்..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

வார்த்தை said...

//ஏன் என்றால், நாய்க்கு எது தெரியுமோ இல்லையோ, கடிக்கத் தெரியும்!//

நாய்க்கு மட்டும் தானா...?!

vasu balaji said...

ஆண்டவா:)) இந்த சேட்டைய தாங்கமுடியல சாமி. :)). டாப் க்ளாஸ்.

pudugaithendral said...

vaanga vaanga

ஜெய்லானி said...

// * வீட்டுக்கு எவ்வளவு லேட்டா வர்றோமோ, நாய் அவ்வளவு சந்தோஷப்படும்.
* வாய்தவறி ஒரு நாய்கிட்டே இன்னொரு நாய் பேரைச் சொன்னா அதுக்குக் கோபம் வராது.
* நாயோட அப்பா,அம்மா உங்க வீட்டுக்கு வர மாட்டாங்க
* நல்லாத் தூங்கிட்டிருக்கும்போது எழுப்பி,’நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?’ன்னு நாய் கேட்கவே கேட்காது.
* நாயைப் பின்சீட்டுலே உட்காரச் சொன்னா, சமர்த்தா உட்கார்ந்துக்கும்.
* நாய்க்கு ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிக்கத் தெரியாது//



சேட்டை இது ......பத்தி சொன்னீங்க ....!!!

Anonymous said...

வந்துட்டீங்களா??
எங்க போனீங்க இவ்ளோ நாளா???

பிரபாகர் said...

ஒரு சிறு விஷயம் போதும் சேட்டை பண்ண என் சேட்டைக்கு...

நாயமாய்... சாரி நயமாய் எழுதியிருக்கிறீர்கள் நண்பா!

பிரபாகர்...

க ரா said...

வெல்கம் பேக் சேட்டை :)

arul Sudarsanam said...

Welcome Back settaikaran.. happy to see you in action again. START MUSIC..

Kousalya Raj said...

supernka.....

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விசயம்தான் சேட்டை.

ரோஸ்விக் said...

இந்த ஸ்டையில் எனக்கு புடிச்சிருக்கு சேட்டை. நீங்க வழக்கமா எழுதுற உரையாடல் வகையில் இல்லாம (அதாவது பேர்போட்டு... அல்லது நீ: ....... நான்:.....)
ரொம்ப நகைச்சுவையாகவும் இருந்தது... எப்படி இருக்கீங்க?

சௌந்தர் said...

நாய்க்கு ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிக்கத் தெரியாது
இந்த விசயம் ரொம்ப நல்ல இருக்கு

அஷீதா said...

:))))))))) sirichu sirichu mudiyala chettai...

* நல்லாத் தூங்கிட்டிருக்கும்போது எழுப்பி,’நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?’ன்னு நாய் கேட்கவே கேட்காது.
* நாயைப் பின்சீட்டுலே உட்காரச் சொன்னா, சமர்த்தா உட்கார்ந்துக்கும்.
* நாய்க்கு ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிக்கத் தெரியாது//

ஸ்ரீராம். said...

என்னுடைய பிரிய ஜீவன் நாய் பற்றி பதிவு. விருப்பமாகப் படித்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனைவி கோபத்தில் கணவனை நாய் எனத் திட்ட, அவன் பதிலுக்கு

ஒரு தொகையறாவை எடுத்து விட்டான் ...

" நாயென்றும்

பேயென்றும் பேசி - அடி

நாக்கு தடித்த மகராசி,

நாயெல்லாம் விசுவாசி,

அவை முன்,

நீ ஒரு தூசி !'

(ஆதெள கீர்த்தனாரம்பத்தில, அல்லி அர்ஜுனா நாடகத்தில அயர்ன் ஸ்த்ரி பார்ட் அல்லி முத்து,

'நாதாரி நாயைப் போல் நாரதனே, நங்கு விகடமும் பண்ண வந்தாய்' என்று பாட,பதிலுக்கு நாரதன் பாடியது இது ! - மூலம் கலை மணி எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் என்ற நாவல் )