Friday, June 11, 2010

கல்யாணமாம் கல்யாணம்

ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்,’ என்று என் தலையில் இடிபோல வந்திறங்கிய செய்திக்கும் இந்த இடுகைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதைக் கண்ணீர்மல்க உருக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; நான் பொருத்தமானவருக்காகக் காத்திருக்கிறேன்,’ என்று ஸ்ரேயாவே பேட்டியளித்து என் வயிற்றில் ஒரு பால்பூத்தையே வார்த்து விட்டார்.

ஆனா, இந்த இடுகைக்கும் ஸ்ரேயாவின் மாநிலத்துக்கும் தொடர்பு இருக்கு! இப்போ உத்தராஞ்சலாக மாறிட்டாலும், ஸ்ரேயா பிறக்கும்போது அது உத்திரப்பிரதேசம் தானே? இதனாலோ என்னவோ, யாராவது உ.பியைப் பற்றி மட்டமாப் பேசினா, எனக்கு ரொம்பக் கோபம் வரும். உ.பி.காரங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா? அவங்க எவ்வளவு அறிவாளிங்க தெரியுமா? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க!

உபியிலே ஒரு அப்பா மகனைக் கூப்பிட்டு அதட்டுறாரு! "என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே? ஒரு குச்சி கூட எரிய மாட்டேங்குதே?

அதுக்கு, அவரோட மகன் எவ்வளவு புத்திசாலித்தனமா பதில் சொல்றான்னு கவனிங்க! "அப்பா, நீங்க இப்படிக் கேட்பீங்கன்னு நான் கடையிலேயே எல்லாக் குச்சியையும் உரசிக் கொளுத்திப் பார்த்திட்டுத் தான் வாங்கிட்டு வந்தேன்!"

இப்படிப்பட்ட அறிவுக்கொழுந்துகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற மாநிலத்தைப் பற்றி திரும்பவும் எல்லாரும் கேலியும் கிண்டலும் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க! அதுக்குக் காரணம் என்ன? இரத்தம் கொதிக்குதுங்க; நீங்களே கேளுங்க இந்த அநியாயத்தை!

உ.பி.பஹ்ரைச் காவல் நிலையத்துலே கங்காராம் திவாரின்னு ஒருத்தர் ஒரு புகார் கொடுத்திருக்காரு! (பாருங்க, இன்னமும் உபியிலே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி புகார் கொடுக்கிறவங்க இருக்கத் தான் செய்யுறாங்க!). கங்காராம் திவாரிக்கு முப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சுங்க! எலெக்ட்ரிஷியனா இருக்காரு! எலெக்ட்ரிசிட்டியே இல்லாத மாநிலத்துலே எலக்ட்ரிஷியனா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்? அவரு வாழ்க்கையே ஃபியூஸ் ஆயிடுச்சிங்க! அதுனாலே அவருக்குக் கல்யாணமே ஆகாம இருந்தது! யாரோ ரெண்டு பேரு வந்து ’உனக்கு ஏத்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்! ஒரு முப்பதாயிரம் ரூபாய் கொடு!’ன்னு சொல்லவும், இவரும் கல்யாண ஆசையிலே கொடுத்திட்டாரு! கல்யாணமும் நடந்திருச்சு! கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் கல்யாணப்பொண்ணு விஷயத்துலே நல்லா ஏமாந்திட்டோமுன்னு கங்காராமுக்குத் தெரிஞ்சிருக்கு! எப்படீன்னு கேளுங்க!

அதாவது, அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு பெண்ணையே இல்லை! ஒரு பதினெட்டு வயசுப் பையன்! முகத்தை கூங்கட்டு போட்டு மூடி ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க! இது தெரியாம இவரு மணப்பெண்ணை(?!) கிள்ளிக் குறும்பெல்லாம் வேறே பண்ணியிருக்காரு பாவம்! கனவுலே "துஜே தேக்கா தோ யே ஜானா சனம்!’னு ஷாருக்கான் பாட்டெல்லாம் பாடியிருக்காரு! கல்யாணம் பண்ணிக்கிட்டு முசோரி,நைனிதால்னு தேனிலவு போக வேண்டிய ஆளு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்திட்டிருக்காரு! ஒரு எலெக்ட்ரீஷியனோட வாழ்க்கையிலேயே இப்படி ஷார்ட்-சர்க்யூட் ஆகுமுன்னு அவரென்ன கனவா கண்டாரு?

மணப்பெண் மாதிரி நடிச்ச மணப்பையன், இது மாதிரி ஏற்கனவே 18 பேரை ஏமாத்தியிருக்கானாம். இவரையும் சேர்த்து பத்தொன்பது. இன்னும் ஒருத்தர் சேர்ந்திட்டா ஒரு சங்கமே ஆரம்பிக்கலாம். ஹிந்தி தெரியாதுன்னுறதுனாலே அதுக்கு நம்மாலே பேரு வைக்க முடியாது! தமிழ்நாடா இருந்தா ’சொந்தச் செலவுலே சூனியம் வைத்துக்கொள்வோர் சங்கம்,’னு வைச்சிருக்கலாம்; எதுக்கும் முன்னாடி ’அகில இந்திய,’ன்னு போட்டுக்கிட்டா பிற்காலத்துலே தேர்தல் வரும்போது உதவும்!

சத்தியமா ரீல் விடலீங்க! இதைப் படிச்சுப் பாருங்க; உங்களுக்கே தெரியும்!

பஹ்ரைச் எஸ்.பியே அசந்து போயிட்டாராம். ’என் சர்வீஸிலே இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததே இல்லே!"ன்னுட்டாரு! (எல்லா ஊரு போலீஸும் இந்த ஒரு டயலாக்கை மட்டும் விடவே மாட்டீங்களே! சே!!) அந்த எஸ்.பி.யோட பேரு அதை விடக் கொடுமை! ராம் பரோஸே! அதாவது கடவுளை நம்புன்னு அர்த்தம்! உ.பியிலே கடவுளை நம்பாம போலீஸையா நம்புவாங்க?

ஆனாலும் இதை ஒரு காரணமா வைச்சு ஸ்ரேயா பிறந்த மாநிலத்தை எல்லாரும் கிண்டல் பண்ணுறது ரொம்பத் தப்புங்க! நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அது ஏமாத்திப் பண்ணின கல்யாணம்! அதுனாலே பொண்ணுக்குப் பதிலா பையனைக் கல்யாணம் பண்ணி வைச்சாங்க! ஆனா, நம்ம தமிழ்நாட்டுலே மட்டும் ரொம்ப ஒழுங்கா?

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே சிவகங்கை மாவட்டத்துலே செல்வகுமார்னு ஒருத்தரு, செல்விங்கிற நாயைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! செல்வகுமார்-செல்வி! என்ன பெயர்ப்பொருத்தம் பாருங்களேன்! லட்சத்துலே ஒருத்தருக்குத் தான் இது மாதிரி அமையும்! நான் கூட வரதட்சணை வாங்காமக் கல்யாணம் பண்ணணும்கிறதுக்காக இப்படிப் பண்ணிட்டாரோன்னு நினைச்சேன். ஆனா, இதுலே ஒரு ஃபிளாஷ்-பேக் இருக்குதுங்க!(நாய்க்கு இல்லை; செல்வகுமாருக்கு!) அதாவது இவரு சின்ன வயசுலே ரெண்டு நாய்ங்களை அடிச்சுக் கொன்னுட்டாராம்! அந்தப் பாவம் போறதுக்காக ஜோசியர் பேச்சைக் கேட்டுக்கிட்டு தோஷம் போறதுக்காக ஒரு நாயையே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்!

இதைப் படிச்சதுலேருந்து நான் கொசு அடிக்கிறதையே நிறுத்திட்டேனுங்க! இவர் கணக்குப் படி இரண்டுக்கு ஒண்ணுங்கிற விகிதாச்சாரத்துலே போனாலும் நான் தினமும் நூறு கொசுவையாவது கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு கொசுவை உயிரோட பிடிச்சு, அதோட கழுத்தைக் கண்டுபிடிச்சுத் தாலிகட்டுறதெல்லாம் ஆவுற காரியமா? ’இதுக்கு என்னையும் சாவடிச்சிருக்கலாமே?’ன்னு கொசு கேட்காதுன்னு என்ன நிச்சயம்?

ஏதோ, இந்த மாதிரி வேலையெல்லாம் தமிழ்நாட்டுலேயும், உ.பியிலேயும் தான் நடக்குதுன்னு நினைச்சிராதீங்க!

நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ஒரிசாவுலே ஒரு பெண்மணி ஒரு பாம்பைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! அந்தப் பெண்மணி பேரு பிம்பளா தாஸ்! எதுக்குப் பாம்பைப் போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு கேட்டா, ’அது வாயில்லா ஜந்துவுங்க! பாலை வச்சாக் குடிச்சுட்டு அதுபாட்டுக்கு சுருண்டு ஒரு மூலையிலே போய் படுத்துக்கும்! இப்படியொரு புருசன் எல்லாருக்கும் கிடைப்பாங்களா?"னு எதார்த்தமா ஒரு கேள்வி கேட்டிருக்காங்க! ஆனாலும், அவங்களுக்கு ஒரே ஒரு குறை! என்னான்னா அவங்க கல்யாணத்தன்னிக்கு மாப்பிள்ளையே வராம இருந்திட்டாரு! அர்ஜெண்டா தவளை பிடிக்கப் போயிருக்கலாமுன்னு ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

நம்ம இந்தியா இவ்வளவு மோசமாப் போயிருச்சான்னு அங்கலாய்க்காதீங்க அண்ணாச்சியோவ்! வழக்கம்போல இதெல்லாமும் கூட மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பு தான்! எப்படீன்னு கேட்கறீங்களா?

ஷரன் டென்ட்லர்-னு ஒரு 41 வயது பிரிட்டிஷ் பெண்மணி ஒரு டால்ஃபின் மீனைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! உலகத்துலேயே ஒரு மீனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட முதல் பெண்மணி இவங்க தானாம்! எவ்வளவு பெருமை! அத்தோட அவங்களோட பெருந்தன்மையைக் கவனிங்க!

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவரு கடலுக்குள்ளே அவருக்குப் பிடிச்ச மத்த டால்ஃபின்களோட சந்தோஷமாயிருக்கலாம்! நான் சக்களத்திச் சண்டையெல்லாம் போட மாட்டேன்!"

யாராவது இந்த அம்மாவுக்கு தேம்ஸ் நதிக்கரையிலே ஒரு சிலை வைக்கச் சொல்லுங்கப்பா! அப்படியே பக்கிங்ஹாம் அரண்மனையிலே இவங்களோட பொன்மொழியைக் கல்வெட்டா எழுதி வைச்சா, பின்னாலே வரப்போற தலைமுறை படிச்சுப் பயன் பெறுமில்லையா?

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிண்டி என்ற பெண்மணி ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, ஃபிரட் என்ற குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாகவும், அதைக் கூட்டிக்கிட்டு அல்லது ஓட்டிக்கிட்டு தேனிலவு போகப்போறதாகவும் எழுதியிருந்தாங்க! அவங்களுக்குக் கல்யாணமாயிருச்சா, அந்தக் குதிரை பாவம் எப்படியிருக்குன்னு சரியாத் தகவல் இல்லே! எங்கேயாவது குதிரையும் குடித்தனமாவும் இருந்தாச் சரிதான்!

சரி, பாம்பு, மீன், குதிரை எல்லாத்தையும் கல்யாணம் பண்ணினதோட நிறுத்துனாங்களான்னா, அது தானில்லை!

தாய்வான் நாட்டுலே சாங்-சீ-சும் (என்னய்யா பேரு இது?) என்ற 46 வயது நபர், பதினோரு அங்குல பார்பீ பொம்மையைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! இருபது வருசத்துக்கு முன்னாலே தற்கொலை பண்ணிக்கிட்ட மனைவியோட ஆத்மா சாந்தியடையணுமுன்னு, பொம்மையைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காராம்! இவராலே தாஜ்மஹால் கட்ட முடியாததுனாலே, வீட்டை Toy மஹால் ஆக்கிட்டாரு போலிருக்கு!

தாய்வானிலேயே இப்படீன்னா, ஜப்பானைப் பத்தி சொல்லவா வேணும்? அங்கே sal9000-னு ஒரு ஆளு நேனே-அனே-கசாக்கி-ன்னுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! இதுலே என்ன ஸ்பெஷாலிட்டின்னு கேட்கறீங்களா? ஐயா சாமீ, அந்தப் பொண்ணு ஒரு வீடியோ கேமில் வருகிற கேரக்டர்! ஜப்பான் வழக்கப்படி பூசாரியெல்லாம் வந்து மந்திரமெல்லாம் சொல்லி, பாட்டுக்கச்சேரியெல்லாம் வைச்சு அமர்க்களமா கல்யாணம் நடந்திருக்கு! இந்த இழையைச் சொடுக்கிப் பார்த்தீங்கன்னா, அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

இந்த ஜப்பான்காரரு இப்படீன்னா, இன்னொரு ஜப்பான் காரர் யாரைக் கல்யாணம் பண்ணியிருக்காரு தெரியுமா? ஒரு தலையணையை! ஜப்பானிலே அந்தத் தலையணைக்கு டக்கிமர்க்குரா-ன்னு பேராம்! அதுலே ஃபட்டே-டெஸ்ட-ரோசா-ன்னு ஒரு கார்ட்டூன் கேரக்டரோட உருவம் பிரிண்ட் ஆயிருக்குதாம். அவரு எங்கே போனாலும் டக்கிமர்க்குராவையும் கூட்டிக்கிட்டே போறாராம்! அதுக்குன்னு தனி சீட்டு வேறே! அதுக்கு அரை டிக்கெட்டா முழு டிக்கெட்டா தெரியலே! இவரே அறிவுலே அரை டிக்கெட் மாதிரி இருக்கிறதாலே மொத்தம் ஒண்ணு வாங்கினாப் போதுமில்லா? இதுலே ஒரு நல்ல விஷயம் என்னான்னா, இனிமேலாவது அவர் அடிக்கடி தலையணைக்கு உறையை மாத்தி, தோய்ச்சு சுத்தமா வச்சிருப்பாருன்னு நம்பலாம்! அவருக்குப் பொஞ்சாதி சோறு போடாட்டியும், சுத்தம் சோறு போடுமில்லா?

சேச்சே! இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு கேட்கறீங்களா? இன்னும் இருக்கு சாமியோவ்!

ஜெர்மனியிலே எஜ்ஜா-ரிட்டா-பெர்லினர்-மார் என்ற பெண்மணி பெர்லின் சுவரை 29 வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். (இவ்வளவு நீளமா, வாயிலே நுழையாத பேரா வச்சுக்கிட்டா மனிசன் கட்டிக்குவானா?) எல்லாரும் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அப்புறமா சுவத்துலே போய் முட்டிக்குவாங்க! இவங்க என்னடான்னா முன்யோசனையா முட்டிக்கிற சுவத்தையே கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! ஏதோ, ஒரு வேலை மிச்சம் அவங்களுக்கு! இதுலே லொள்ளு வேறே! "சீனப்பெருஞ்சுவர் தொந்தியும் தொப்பையுமா குண்டா அசிங்கமாயிருக்கு! என் புருசன் தான் ஒல்லியா ஸ்மார்ட்டா இருக்கார்!"னு அம்மணி அலப்பறை வேறே பண்ணுது! டூப் இல்லீங்க! போய்ப் படிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும்!

என்னய்யா? செங்கலும் சுண்ணாம்பும் வைச்சுக்கட்டுன சுவத்தைப் போயி யாராச்சும் கல்யாணம் பண்ணிக்குவாங்களான்னா கேட்கறீங்க? இப்படி யாராவது கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் எரிக்கா-லா-டூர்-ஈஃபில் என்ற பெண்மணி இரும்பாலே கட்டப்பட்ட, 1000 அடி உயரமான, பாரீஸின் ஈஃபில் கோபுரத்தையே கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! இந்த அம்மணி ஆவணப்படமெல்லாம் எடுக்கிறவங்களாம்! (நிறைய பேரு ஆவணப்படம் பார்த்துட்டு அதெல்லாம் சாவணப்படம்னு ஏன் வாழ்க்கை வெறுத்துப் போறாங்கன்னு இப்பத்தானே புரியுது!) நல்ல வேளை, நம்ம ஊரு மாதிரி பாரீசிலே மாலை மாத்திக்கிற பழக்கம் கிடையாது! யாரு கண்டாங்க, இந்தம்மா மேலே போயி மாலை போட்டுட்டு கீழே இறங்குறதுக்குள்ளே டைவோர்ஸ் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

இந்தக் கம்ப்யூட்டர் யுகத்துலே இப்படியுமா ஆளுங்க இருப்பாங்கன்னு தானே கேட்கப்போறீங்க? ஸ்தூ! ஒரு அம்மணி கம்ப்யூட்டரையே கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு சொன்னா அதை விட பெரிய வயித்தெரிச்சல் வேறே என்ன இருக்க முடியும்?

ஹெர்மியோன் வே-ன்னு ஒரு பிரிட்டிஷ் கார அம்மணி அவங்களோட 17 அங்குல மடிக்கணினியைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களாம்! அதுக்கு அலெக்ஸ்-னு பேரு வேறே வச்சிருக்காங்க! புள்ளைங்களுக்கு எல்லாரும் பேரு வைக்கிறாங்க; ஆனா, உலகத்திலேயே புருசனுக்கு பெயரு வைச்ச புரட்சிப்பெண் இவங்க தானய்யா! இரண்டு வருசமா இவங்க இணைபிரியாத ஜோடியா இருக்காங்களாம்! ’நான் என்ன டிரஸ் போட்டுக்கிட்டாலும் அலெக்ஸ் ஒண்ணுமே சொல்ல மாட்டாரு! ரொம்ப தங்கமான குணம்,’னு புருசனுக்குப் பாராட்டு வேறே! புருசனுக்கு வைரஸ் வராம கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டா சரி!

இந்த மாதிரி ஆடு, பன்றி, கார்-னு பல வினோதக்கல்யாணங்கள் நடந்திட்டிருக்கு! எல்லாத்தையும் எழுதினா கொட்டாவி தான் வரும்! அதுனாலே முத்தாய்ப்பா நாம பார்க்கப்போறது, ஜெனிஃபர் ஹோஸ் என்ற பெண்மணியை! இவங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அல்லது எதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேட்கறீங்களா? ஊஹூம்! அவங்க வேறே யாரையோ எதையோ கல்யாணம் பண்ணிக்கலே! அவங்களை அவங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்காங்க! அதாவது அவங்களுக்கு அவங்களையே ரொம்பப் பிடிச்சதுனாலே அவங்க, அவங்களைத் தவிர வேறே எவங்களையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமுன்னு, அவங்களையே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவங்க அவங்களோட வாழ்க்கை நடத்திட்டிருக்காங்களாம்.

என்ன கொடுமை சரவணா?

இனிமேலாவது சும்மா உ.பி,தமிழ்நாட்டையே கிண்டல் பண்ணிட்டிருக்காதீங்க! பாருங்க, மேற்கத்திய நாடெல்லாம் எவ்வளவு அட்வான்ஸாப் போயிட்டிருக்கு, இங்கே சும்மா நாய், தவளையைக் கல்யாணம் பண்ணினதும் எல்லாரும் சவுண்டு விடுறதை நிறுத்துங்க! மணமக்கள் சீரும் சிறப்புமா எந்த ரிப்பேரும் இல்லாம வாழணமுன்னு மனசார வாழ்த்துவோம். அது தான் நம்ம பண்பாடு!

அட, வாழ்த்துன்னதும் தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது! நம்ம மனீஷா கொய்ராலாவுக்கு வர்ற 19-ம் தேதி கல்யாணம் தெரியுமா? (இனிமேல் தானான்னு நக்கலா கேட்காதீங்க!) அதுக்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு ஒண்ணும் கிடையாதுங்க! அவங்க பேருக்கு ஏத்தா மாதிரி ’மனிஷ’னைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க! நல்லாயிருக்கட்டும்! ஆனா, ரொம்ப நொந்து போயித்தான் கல்யாணம்கிற விபரீத முடிவை எடுத்திருப்பாங்கன்னு தோணுது!

இருக்காதா பின்னே? ஏதோ போனாப்போகுதுன்னு ஒரு படத்துலே தனுஷுக்கு மாமியார் வேஷத்துலே நடிக்க சம்மதிச்சதுக்காக, இன்னொரு படத்துலே ராமராஜனுக்குப் பாட்டியா நடிக்கக் கூப்பிட்டா, கோபம் வருமா வராதா?

மனீஷாவுக்கும் இனி மணமுடிக்கப்போற எல்லாருக்கும் நமது இனிய திருமண வாழ்த்துக்கள்! எங்கிருந்தாலும் வாழ்க!

31 comments:

சிநேகிதன் அக்பர் said...

அய்யா சாமி! ஆளை விடுங்க. எம்பூட்டு பெரிய லிஸ்ட்.

வாழ்க்கையில கல்யாணா ஆசையே போயிடும் போல இருக்கே. :)

Raghu said...

நீங்க‌ ரெகுல‌ரா அண்ண‌ன் உ.த‌. ப‌திவை ப‌டிக்க‌ ஆர‌ம்பிச்சிட்டீங்க‌ளா?...;))

பனித்துளி சங்கர் said...

///////////’ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்,’ என்று என் தலையில் இடிபோல வந்திறங்கிய செய்திக்கும் இந்த இடுகைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதைக் கண்ணீர்மல்க உருக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; நான் பொருத்தமானவருக்காகக் காத்திருக்கிறேன்,’ என்று ஸ்ரேயாவே பேட்டியளித்து என் வயிற்றில் ஒரு பால்பூத்தையே
//

!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

//மணப்பெண் மாதிரி நடிச்ச மணப்பையன், இது மாதிரி ஏற்கனவே 18 பேரை ஏமாத்தியிருக்கானாம்.//

என்னடா கொடுமை இதுன்னு படிச்சா இன்னும் படிக்க படிக்க ..... இப்படியெல்லாம் உலகத்துல நடக்குது .

ஜெய்லானி said...

அடக்கடவுளே !! நல்ல வேளை யாரும் நான் சாமி சிலையை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு இது வரை சொல்லல..!!

CS. Mohan Kumar said...

இந்த மாதிரி வித்யாச கல்யாணம் நடக்கும் போது ஸ்ரேயா ஏன் என்னை கல்யாணம் செய்ய கூடாதுன்னு சேட்டை முடிச்சிருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

பைனலா என்னா விசயம்ன்ன சேட்டைக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு (ஏம்பா செட்ட உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?)

பிரபாகர் said...

தினுசு தினுசாய் கல்யாணம்... அதிலும் உ.பி டாப்பு! வழக்கமான உங்கள் நக்கல், எள்ளல்....தூள்.


பிரபாகர்...

சென்ஷி said...

செம்ம சேட்டை :)))

வார்த்தைகள்ல குறும்பைக் கொப்பளிச்சு துப்பிட்டீங்க :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. எனக்கு ரெண்டு விஷயம் தெளிவா புரிது..
நீங்க ஒரு ஸ்ரேயா ரசிகர் என்றும், நம்ம ஊர்ல.. மனுசங்க கல்யாணம் பண்ணிக்கிறது குறைஞ்சுட்டே வருதுனும் தெரிது..
ஹ்ம்ம்..

பெசொவி said...

எத்தனை தகவல்கள்....சேட்டை ஸ்டைலில்! சூப்பர்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் காலையில் இட்ட பின்னூட்டம் காணவில்லை..

இதைக்கண்ட 3 மணி நேரத்தில் பதில் அளிக்கத்தவறினால்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
அவ்...

வெங்கட் நாகராஜ் said...

எம்மாம் பெரிய லிஸ்ட் - யாரு எதை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு.. கலக்கறீங்க போங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவி மக்கா..
நான் தப்புபன்ணிப்போட்டேனே..
அது நேற்றுபோட்ட பதிவுக்கு..

ஏம்மா..ஒஉ நாளைக்கு 2 பதிவு போட்டா..எப்படி படிக்க?...

திரும்பவும்..அவ்...( இது எனக்கு..)

Chitra said...

இருக்காதா பின்னே? ஏதோ போனாப்போகுதுன்னு ஒரு படத்துலே தனுஷுக்கு மாமியார் வேஷத்துலே நடிக்க சம்மதிச்சதுக்காக, இன்னொரு படத்துலே ராமராஜனுக்குப் பாட்டியா நடிக்கக் கூப்பிட்டா, கோபம் வருமா வராதா?

..........கோபம் தானே வரணும். கல்யாண ஆசை வந்துருக்கே..... ம்ம்ம்ம்..... சேட்டை, அழுவாதீங்க.... அழுவாதீங்க.....ரொம்ப யோசிச்சு கேள்வி கேட்டுட்டேன் போல. சேட்டைக்காரனுக்கு துக்கம் தாங்கல.

vasu balaji said...

கலாட்டா கலியாணங்கள்:))

Mythili said...

Chatai Sir,

Oru Singam readya irukkam. ungaulku o.kya?

miga arumaiyana pathivu. thanks.

manjoorraja said...

கவலைப்படாதே சேட்டை. இன்னும் கொஞ்ச நாள் நீ சந்தோசமாக ஸ்ரெயா ஜொள்ளு விட்டுகிட்டிருக்கலாம்.

பதிவு சூப்பர்.

யுக கோபிகா said...

//’அது வாயில்லா ஜந்துவுங்க! பாலை வச்சாக் குடிச்சுட்டு அதுபாட்டுக்கு சுருண்டு ஒரு மூலையிலே போய் படுத்துக்கும்! இப்படியொரு புருசன் எல்லாருக்கும் கிடைப்பாங்களா?"னு எதார்த்தமா ஒரு கேள்வி கேட்டிருக்காங்க!//

எதார்த்தமான கேள்விதான் ....

//ராமராஜனுக்குப் பாட்டியா நடிக்கக் கூப்பிட்டா, கோபம் வருமா வராதா?//

கண்டிப்பா வரும் ...

அருமையான பதிவு..

Paleo God said...

//அவங்களை அவங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்காங்க! அதாவது அவங்களுக்கு அவங்களையே ரொம்பப் பிடிச்சதுனாலே அவங்க, அவங்களைத் தவிர வேறே எவங்களையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமுன்னு, அவங்களையே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவங்க அவங்களோட வாழ்க்கை நடத்திட்டிருக்காங்களாம்.//

இதாங்க டாப்பு! :))

பிரேமா மகள் said...

நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க சேட்டை?

மாதேவி said...

சிரிப்பூ...கல்யாணங்கள் சூப்பர்.

Jey said...

வுடுப்பா வுடுப்பா, இங்க கலியாணம் செய்ஞ்சுகிட்ட பொண்னுகளால(பொம்பளகனு சொன்னா வயச கூட்டி சொல்லிட்டோம்னு கோவபட்டாலும் படுவாக) நம்ம சகோதரக சனங்க எஸ்கேப்பானத னெனச்சி சந்தோஷ்படுரேம்பா.

அதெ மாதிரி இந்த பொன்னுகள கட்டிக்காம, வேற எதயாவது கட்டிகிட்டு புத்திசாலிதனமா முடிவு எடுத்தவகளுக்கு நம்ம வாழ்த்துகள சொல்லிகிரேம்பா.

மசக்கவுண்டன் said...

ஆஜர்

Anonymous said...

இத படிச்சதும், இவங்க எல்லாம் இவங்கள(இத)எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்ட போது, நம்ம எவ்வளவோ பரவாயில்ல சாமின்னு ஒரு மன ஆறுதல் வருதாம் சில பேருக்கு :)

Lot of information.. Gud humour.. Very nice.. As usual :) Keep rocking Settai.. :)

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கல்யாணத்துல இவ்வளவு தினுசா? படிக்கவே மூச்சு முட்டுதே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கல்யாணம்ங்கறதுல இவ்வளவு வகை இருக்கா.. :)

அண்ணாமலை..!! said...

சேட்டை..சேட்டை!
இனிமே நம்மள மட்டுமே யாரும்
கொற சொல்ல முடியாதுல்ல...!!!!! :)

r.v.saravanan said...

சேட்டை சும்மா வார்த்தையாலே ஆடியிருக்கீங்க வேட்டை

Srividhya R said...

நீங்க ஸ்ரேயா ரசிகரா?