Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday, February 27, 2021

மாஸ்க்கிலாமணி


மாஸ்க்கிலாமணி

கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது. சென்றமுறை, கடலைப்பருப்புக்குப் பதிலாக பொறிகடலையும், பாமாயிலுக்குப் பதிலாக பினாயிலும் வாங்கி வந்ததன் விளைவாக இரண்டு நாட்களுக்கு காப்பிக்குப் பதிலாக ரவா கஞ்சி குடிக்க நேரிட்ட துயரம் இன்னும் அவரது தொண்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே இறங்காமல், அழிச்சாட்டியமாக அங்கேயே எக்ஸிபிஷன் போட்டு அப்பள ஸ்டால் நடத்திக் கொண்டிருந்தது.

மாசிலாமணியின் சதக்தர்மிணி, மன்னிக்கவும், சகதர்மிணி குசலகுமாரி என்ற குஷி, பெட்ரூமில் உள்பக்கம் தாள்போட்டுக்கொண்டு, யூட்யூப் பார்த்தபடி குச்சுப்படி பயிற்சி பண்ணிக்கொண்டிருந்தாள். ஏற்கனவே குடியிருந்த பழைய வீட்டில் குஷியின் குச்சுப்பிடி காரணமாக மச்சுப்படி உட்பட கட்டிட்த்திலிருந்த காரையெல்லாம் உதிர்ந்ததால், கொஞ்ச நாளைக்கு எல்லாரும் மலைக்கள்ளன் எம்ஜியாரைப் போல கயிற்றை உபயோகித்துத்தான் மாடிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தார்கள். ஆகவே, பூகம்பமே வந்தாலும் அதிராத புத்தம்புது டெக்னாலஜியில் கட்டப்பட்ட குடியிருப்பில் கொள்ளைவிலை கொடுத்துக் குடிவந்திருந்தார் மாசிலாமணி.

என்னதான் தில்லான ஆசாமியாக இருந்தாலும், மனைவியின் தில்லானாவுக்குத் தொந்தரவு செய்வது, மைதாமாவு தோசை என்ற மாபெரும் ஆபத்துக்கு வித்திடும் என்பதை அறிந்தவர் என்பதால், சத்தம்போடாமல் கதவைச் சாத்திவிட்டு, லிஃப்டு வழியாகக் கீழே வந்து, மெயின்கேட்டை நெருங்கினார்.

யோவ், நில்லுய்யா!” என்று ஒரு குரல்கேட்கவே, திரும்பிய மாசிலாமணி, ஒரு செக்யூரிட்டி தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார்.

யாருய்யா நீ, அபார்ட்மெண்ட்ஸ்ல துணிப்பை சேல்ஸ் பண்றியா?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டதும், மாசிலாமணிக்குக் கோபம் மூக்குக்கு மேல், கிட்டத்தட்ட முன்மண்டை வரை வந்தது.

பல்குத்தும் குச்சிக்குப் பாவாடை கட்டினாற்போல, தொளதொளவென்ற யூனிபாரம் அணிந்திருந்த அந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நெருங்கி வந்து நின்று முறைத்தார்.

யோவ், வாயிலே என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே? எப்படிய்யா உள்ளே வந்தே?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டுக் கொண்டிருந்தபோதே, அபார்ட்மெண்ட் மேனேஜர் ஒப்பனிங் சீனில் வரும் ஹீரோவைப் போல எங்கிருந்தோ குதித்தோடி வந்தார்.

யோவ் செக்யூரிட்டி, அவர் யாரு தெரியுமா?” என்று நெருங்கி வந்தார் மேனேஜர். “இவரு புதுசா வீடுவாங்கி குடிவந்திருக்காருய்யா. மரியாதையாப் பேசு.”

அந்த செக்யூரிட்டி டென்ஷனில் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்த சத்தத்தைக் கேட்டு, எட்டாவது மாடியிலிருந்த புறாக்களெல்லாம் பயந்து எக்மோர் ஸ்டேஷனுக்குக் குடிபெயர்ந்தன.

மேனேஜர், என்னைப் பார்த்து துணிப்பை சேல்ஸ் பண்றியான்னு கேட்கிறாரு இந்தாளு,” என்று பொருமினார் மாசிலாமணி.

அடப்பாவி,” என்று மேனேஜர் தலையில் கைவைத்தார்.

யோவ் மேனேஜர், அவன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குய்யா என் தலையிலே கைவைக்கறீங்க?” என்று உறுமினார் மாசிலாமணி.

சாரி சார், பதட்டத்துல எது என்னோட தலைன்னு தெரியாமக் குழம்பிட்டேன்,” என்று வருந்திய மேனேஜர், செக்யூரிட்டி பக்கம் திரும்பினார்.

எல்லாம் உன்னாலே வந்தது! சார் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? கவர்மெண்டுல அண்ட்ராயர் செகரட்டரியா இருக்காரு!”

யோவ் மேனேஜர், உன் வாயை பாமாயில் போட்டுக்கழுவுய்யா! அது அண்டர் செகரட்டரி; அண்ட்ராயர் செகரட்டரி இல்லை.” எரிந்து விழுந்தார் மாசிலாமணி.

அண்டர் செகரட்டரின்னா பேஸ்மெண்டுலதான் ஆபீஸா சார்?” என்று பவ்யமாகக் கேட்டார் மேனேஜர்.

ஆண்டவா,” மாசிலாமணிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னய்யா இங்கே செக்யூரிட்டியும் சரியில்லை; மேனேஜரும் சரியில்லை. இந்த அப்பார்ட்மெண்ட் ரொம்பத் தப்பார்ட்மெண்ட்டா இருக்கும் போலிருக்கே.”

கோவிச்சுக்காதீங்க சார்,” என்று கைகூப்பினார் மேனேஜர். “வந்ததுலேருந்து எப்பவும் மாஸ்க் போட்டுக்கிட்டுத்தான் நடமாடுவீங்க. இன்னிக்கு மாஸ்க் போடாம வந்திருக்கீங்களா, எனக்கே அடையாளம் தெரியலை.”

என்னது? மாஸ்க் போடலியா?” மாசிலாமணி அதிர்ந்தார். “நல்லாப் பார்த்துட்டுச் சொல்லுய்யா. நெஜமாவே  நான் மாஸ்க் போடலியா?”

இதுக்கெல்லாமா பொய் சொல்லுவாங்க? என் பொஞ்சாதி தங்கலட்சுமி மேலே சத்தியமா நீங்க மாஸ்க் போடலை சார்.”

ஐயையோ!” அலறினார் மாசிலாமணி. “வழக்கமா கடைக்குப்போயி என்ன சாமான் வாங்கணும்கிறதைத்தான் மறப்பேன். இன்னிக்கு மாஸ்க் போடவே மறந்திட்டேனா?”

“அப்படீன்னா இன்னிக்கு என்ன சாமான் வாங்கணும்னு ஞாபகம் வைச்சிருக்கீங்களா சார்? வெரிகுட்!”

”சும்மாயிருய்யா,” மாசிலாமணி சலித்துக்கொண்டார். “நானே என்ன வாங்கணும்னே தெரியாம எந்தக்கடைக்குப் போறதுன்னு குழம்பியிருக்கேன். ஆனாலும், ஆண்டவன் ஒரு மனுசனை இப்படியெல்லாமா சோதிக்கிறது?”

இதுக்கெல்லாம் ஆண்டவன் என்ன சார் பண்ணுவாரு?” என்று பரிதாபமாக்க் கேட்டார் மேனேஜர். “சார், முக்குக்கடையிலேதான் அஞ்சு ரூபாயிலிருந்து அம்பது ரூபா வரைக்கும் மாஸ்க் தொங்க விட்டிருக்கானே? ஒண்ணு வாங்கிட்டுப் போறதுதானே?”

வெரிகுட்!” மாசிலாமணி மெச்சினார். “மேனேஜர்னதும் நான்கூட தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்க ரொம்ப உண்மையிலேயே புத்திசாலி.”

யோவ் செக்யூரிட்டி,” மேனேஜர் மீண்டும் அந்த செக்யூரிட்டி பக்கம் திரும்பினார். “இனிமேல் சார்கிட்டே மரியாதையா நடந்துக்கணும் தெரியுதா? ஏழாவது மாடிக்குக் குடிவந்திருக்காரு சார்! இவர் பேரு மாஸ்கிலாமணி..ச்சீ.. மாசிலாமணி!”

இனிமே ஜாக்கிரதையா இருப்பேன் சார்,” என்று பணிவன்புடன் கைகுவித்தார் செக்யூரிட்டி.

என்னத்தை ஜாக்கிரதை? நீ அடிச்ச சல்யூட்டுல உன் பேண்ட் அவுந்து விழுந்திருச்சு. ரிஸைன் பண்ணிட்டுப் போனவன் யூனிஃபாரத்தையெல்லாம் போட்டுக்காம இனிமேலாவது ஜாக்கிரதையா இரு,” என்று அறிவுரைத்த மாசிலாமணி, காம்பவுண்டை விட்டு வெளியேறி கடையை நோக்கி நடந்தார்.

மாஸ்க் போடுவதை மறந்த விஷயம் அதற்குள் மறந்துபோய்விடவில்லையென்பதால், முக்குக்கடைக்குள் நுழைந்தார்.

”சார்,” கடைக்காரர் அலறினார். “மாஸ்க் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க சார்.”

”மாஸ்க் வாங்கத்தான் உள்ளே வரணும்.”

”உள்ளே வரணும்னா மாஸ்க் போடணும் சார்.”

”மாஸ்க் இல்லேன்னுதானே மாஸ்க் வாங்க உள்ளே வர்றேன்.”

“மாஸ்கே வாங்கணும்னாலும் மாஸ்க் இல்லாம உள்ளே வந்து மாஸ்க் வாங்க முடியாது.”

”யோவ் வெளக்கெண்ணை முண்டம்!” மாசிலாமணி பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை கடைக்காரரை நோக்கி வீசியெறிந்தார். “இதுக்கு ஒரு மாஸ்கை எடுத்து விட்டெறி! நான் கேட்ச் புடிக்கிறேன்.”

கடைக்காரர் ஒரு மாஸ்க்கை எடுத்து எறிய, மாசிலாமணி அதைக் கரெக்டாகக் கேட்ச் பிடித்தார்.

”சூப்பர் சார், ரோஹித் ஷர்மாவைவிட நல்லாவே கேட்ச் புடிக்கறீங்க,” என்றார் கடைக்காரர்.

’ரோஹித் ஷர்மா எப்பவாச்சும் பூந்திக்கரண்டி, பூரிக்கட்டையைக் கேட்ச் புடிச்சிருந்தாத்தானே?’ என்று மனதுக்குள் எண்ணியவருக்குச் சட்டென்று பொறிதட்டியது.

’யுரேகா! பூரிக்கட்டை…பூரி…ஞாபகம் வந்திருச்சு… நான் கடைக்குப்போய் வாங்க வேண்டியது கோதுமை மாவும், கோல்ட்வின்னர் எண்ணையும்! யெப்பா ரோஹித் ஷர்மா… நீ இன்னும் பத்து வருசத்துக்கு டெஸ்ட் மேட்ச் ஆடணும் சாமி..’

மறதி வருவதற்குள் மாஸ்க்கை அணிந்துகொண்ட மாசிலாமணி, திருவருட்செல்வர் சிவாஜிபோல சிங்கநடை போட்டார்.

வழக்கமாக மளிகை சாமான் வாங்க தான் செல்லுகிற அந்த டப்பார்ட்மெண்டல், மன்னிக்கவும், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழையை முற்பட்டபோது, அங்கிருந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நிறுத்தினார்.

”சார், ஒரு நிமிஷம்! சூடு இருக்கான்னு பார்க்கணும்.”

”என்னய்யா இது, இன்னிக்கு எல்லா செக்யூரிட்டிகளும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க. யாரைப் பார்த்துய்யா சூடு இருக்கா, சொரணை இருக்கான்னு கேட்கறே?”

“சாரி சார், டெம்பரேச்சர் கன் வேலை பண்ணலை. அதான், உடம்புல சூடு இருக்கான்னு கேட்டேன் சார்.”

”உடம்புல சூடு இருக்கிறதுனாலதான்யா கடைக்கு வந்திருக்கேன். இல்லாட்டி கண்ணம்மாபேட்டைக்குக் கொண்டுபோயிருப்பாங்கய்யா.”

”ஐயோ சார், காய்ச்சல் இருக்கான்னு கேட்டேன் சார்!”

”அதை எங்கிட்டே ஏன்யா கேட்குறே? உனக்குக் காய்ச்சல் இருக்கான்னு பார்க்க நான் என்ன டாக்டரா? நான் அண்ட்ராயர்…ச்சீ, அண்டர் செகரட்டரிய்யா!”

“சார்” அந்த செகரட்டரி அழாதகுறையாக கைகூப்பினார். “ நீங்க உள்ளே போங்க சார்!”

ஒருவழியாகக் கடைக்குள் சென்று வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் வாங்கிக்கொண்டு வெற்றிப்பெருமிதத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். காம்பவுண்ட் அருகே மேனேஜரும், இன்னொருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

”அந்த ஏழாவது மாடியிலே புதுசா குடிவந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்,” இரைந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். “தொம்முதொம்முன்னு ஒரே சத்தம். ரெண்டு ட்யூப்லைட் ஃபியூஸ் ஆயிருச்சு. இன்னிக்கு என்னடான்னா நல்லா ஓடிட்டிருந்த சீலிங் ஃபேன் நின்னுருச்சு. அந்தாளு மட்டும் என் கையிலே கிடைச்சான், அவனைக் கொலை பண்ணிருவேன்.”

”ஏய்ய்ய்!” மாசிலாமணியின் ரத்தம் கொதித்து, காதுவழியாக ஆவி பறந்தது. “எவண்டா கொலை பண்றவன்? தில்லிருந்தா வாடா பார்க்கலாம்.”

திரும்பிப்பார்த்த மேனேஜர்,’ யோவ் யாருய்யா நீ? சம்பந்தமில்லாத மேட்டர்ல எதுக்கு நுழையறே? இவரு புதுசா குடிவந்திருக்காரே, மாசிலாமணி, அவரைப்பத்திப் பேசிட்டிருக்காரு!”

”யோவ் மேனேஜர், நான்தான்யா மாசிலாமணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தோமேய்யா?”

“சார் நீங்களா? மாஸ்க் போட்டிருக்கீங்களா, அதான் அடையாளம் தெரியலை.” என்று தலையை, அதாவது அவரது சொந்தத்தலையைச் சொறிந்தார் மேனேஜர்.

”படுத்தாதீங்கய்யா,” பொறுமையின்றிக் கூச்சலிட்டார் மாசிலாமணி. “முதல்ல மாஸ்க் போடாம அடையாளம் தெரியலை; இப்போ மாஸ்க் போட்டா அடையாளம் தெரியலியா?”

”அது இருக்கட்டும் மிஸ்டர் மாசிலாமணி,” அந்த நபர் குறுக்கிட்டார். “ நீங்கதானே ஏழாவது மாடியிலே குடிவந்திருக்கீங்க? உங்க வீட்டுல யாராவது குதிச்சுக் குதிச்சு விளையாடறாங்களா? ஏன் இவ்வளவு சத்தம்?”

”நீங்க ஆறாவது மாடியிலே இருக்கீங்களா?” கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டார் மாசிலாமணி.

“நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கேன் சார்,” அந்த நபர் உறுமினார். “என்ன சார் நடக்குது உங்க வீட்டுல?”

“லூசாய்யா நீ?” கொதித்தார் மாசிலாமணி. “ஏழாவது மாடியிலே என் பொஞ்சாதி குச்சுப்புடி ஆடினா, கிரவுண்ட் ஃப்ளோர்ல எப்படியா கேட்கும்?”

“சார்,” மேனேஜர் குரலைத்தாழ்த்தினார். “கிரவுண்ட் ஃப்ளோர் கூட பரவாயில்லை சார். பக்கத்து பில்டிங்ல கவுன்சிலர் குடியிருக்காரு. உங்க வொய்ஃப் குச்சுப்புடி சத்தம் கேட்டு, நம்ம பில்டிங்க்ல என்னமோ வேலை நடக்குதுன்னு சந்தேகப்பட்டு மாமூல் கேட்க வந்திட்டாரு சார்!”

”ஐயையோ!” மாசிலாமணி வாயடைத்துப்போனார்.

”மாசிலாமணி சார்,” அந்த நபர் குழைந்தார். ‘ஒரு புருஷனோட மனசு இன்னொரு புருஷனுக்குத்தான் புரியும். என்னதான் லக்ஸுரி அபார்ட்மெண்ட்னாலும் குச்சுப்புடி ஆடறதெல்லாம் ரொம்பவே ஓவர். குழந்தை குட்டிங்க இருக்காங்க; ஹார்ட் பேஷண்ட்ஸ் இருக்காங்க. இந்த லாக்டவுணுக்கு அப்புறம் ஒவ்வொரு பிளாக்லயும் குறைஞ்சது ரெண்டு வீட்டுலயாவது யாராவது கர்ப்பமா இருக்காங்க. இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரின்னுற முறையிலே சொல்றேன். விஷப்பரீட்சையெல்லாம் வேணாம் சார்.”

”அடாடா, நீங்கதான் செகரட்டரியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் மாசிலாமணி. “செகரட்டரின்னா கையிலே ஒரு டார்ச் லைட்டோ, ஸ்க்ரூ டிரைவரோ வைச்சிட்டிருக்கணும் சார். அதான் நம்ம பண்பாடு! இல்லாட்டி எப்படி அடையாளம் தெரியும்?”

பேசிமுடித்துவிட்டு, வீடு திரும்பியவர் கதவைத்தட்டிவிட்டு, மாஸ்க்கைக் கழற்றிவிட்டுக்கொண்டார். கதவைத் திறந்த குஷி…

“என்னங்க, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போகலியா?” என்று கேட்டார்.

அடுத்த நொடி…

ஏழாவது மாடியிலிருந்து தொப்பென்று ஏதோ விழும் சத்தம் கேட்டது.

Saturday, June 25, 2016

சுவாதி! நான்தான் சாமானியன் பேசுகிறேன்!

photo: indianexpress.com 

ஒரு துர்மரணம்; அதுவும் ஒரு இளம்பெண்ணின் கோரமான படுகொலை என்றால், அதனால் விளையும் பின்விளைவு என்பது இயல்பானது. ஆகையினால், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உனக்கு நிகழ்ந்த பயங்கரம், குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனின் இதயத்திலும் இடியைவிடக் கொடிதாக இறங்குவது. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கொடூர நிகழ்வு நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகாமையில் வசிக்கிறவன் என்பதனால், இந்த நிகழ்வு முகம்தெரியாத ஒரு உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத இழப்பு என்பதையும், இது சராசரி மனிதனின் இயலாமைக்கு இன்னோர் உதாரணம் என்பதனையும், எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டு, ஒரு தனிமனிதனாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பழியையும் ஏற்று, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோரசம்பவத்தால் உயிரிழந்த உனது ஆத்மா அமைதியுற வேண்டுகிறேன். துடைக்கவியலாத உனது குடும்பத்தாரின் துயரத்தில் ஒரு சாமானியனாய் பங்கும் கொள்கிறேன். உனக்கு ஏற்பட்ட இந்த நிலை, பிறிதொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்றும் உளமார வேண்டுகிறேன்.
      ஆனால், ஒவ்வொரு அசாதாரணமான நிகழ்வுக்குப் பிறகும், கையில் சாட்டையுடன் வீறுகொண்டு எழுகிற சில அறிவுஜீவிகள், தாம் சார்ந்திருக்கும் சமூகத்தை வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டு, தத்தம் தலைகளில் ’போலி சமூகப்பொறுப்புடைமை’ என்ற அட்டைக்கிரீடத்தைப் பொருத்திக்கொண்டு அழகுபார்க்கின்றனர். இத்தகைய எரிச்சலூட்டுகிற போலித்தனம் உனது படுகொலைக்குப் பிறகும், தலைதூக்கியிருப்பது சற்றே வேதனையாய் இருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய ஒரு தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தெய்வமாகிவிட்ட நீ இதையும் பொறுப்பாயாக!
      உனது படுகொலை நிகழ்ந்த தினத்தன்று, சென்னையில் மேலும் நான்கு பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினசரிகளை வாசித்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காகப் படுகொலைகள் நிகழ்ந்து வந்திருப்பதும் தெரிந்தே இருக்கும். அவற்றிலும் பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். வீடுபுகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தி மூதாட்டிகளை ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு, பணம், நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து சிலபல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. வேதனை என்னெவென்றால், உனது படுகொலையைத் தொடர்ந்து ‘நான்தான் ஸ்வாதி பேசுகிறேன்’ என்று கட்டுரை எழுதி, சமூகத்துக்குச் சாட்டையடி கொடுக்கிறவர்கள், பிற கொலைகள் நிகழ்ந்தபோது, திரைப்பட விமர்சனங்களை எழுதி, தேசத்தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். 
இறந்தது இளம்பெண்ணோ, மூதாட்டியோ – இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் பிடி தளர்ந்து வருவதன் அறிகுறி என்பதையோ, குற்றவாளிகளின் துணிச்சல் அதிகரித்து வருகிறது என்பதன் அளபீடு என்பதையோ, ஒவ்வொரு சட்டவிரோதமான செயலும் ஏதோ ஒரு குடும்பத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிறது என்பதையோ, ஏதோ ஒரு விதத்தில் பெருகிவருகிற அலட்சியத்தின் பின்விளைவு என்பதனையோ, சில அறிவுஜீவிகளின் ஞானக்கண்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் உறுமீன் வருமளவும் காத்துக்குக் கொண்டிருந்தார்கள் போலும், வாடி நின்று சமூகத்தை வசைபாடுவதற்கு!
      உனக்கு நினைவிருக்கிறதா ஸ்வாதி? புது தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, உலகமே ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்தது. அதே தினத்தன்று தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி கிட்டத்தட்ட அதே மிருகத்தனத்துக்கு ஆளானபோது, அதை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து நாமெல்லாம் ஆதங்கப்பட்டோம். “தில்லி மட்டும்தான் இந்தியாவா? தமிழகத்தில் ஒரு நிர்பயா பலியானால் கேட்க நாதியில்லையா?
      இன்று, தமிழகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “சென்னை மட்டும்தான் தமிழகமா? தென்கோடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் அதுகுறித்துக் கொதித்தெழ எவரும் இல்லையா? ஒரு படித்த இளம் பொறியாளரின் உயிருக்கு அளிக்கிற மதிப்பு, எங்கோ ஒரு பொட்டல் காட்டில் கொலைசெய்யப்படுகிற ஒரு பெண்ணின் உயிருக்கு இல்லையா?
      ’நான்தான் ஸ்வாதி பேசுகிறேன் என்று கட்டுரை எழுதியவர், உனது கனவுகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன்.
 கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் கொலை செய்யப்பட்ட பெண்களுக்கும் கனவுகள் இருந்திருக்கும். அது குறித்து அவருக்குப் பெரிய அக்கறையில்லை; உண்மையில் உனது மரணம் குறித்தும் அவருக்குப் பெரிய அக்கறையில்லை என்பதுதான், என்னை எழுதவைக்கிற தூண்டுகோலாக அமைந்தது. அவரது கட்டுரையிலிருந்து சில துளிகள் உன் பார்வைக்காக….!
உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.
கட்டுரையாளரைப் பொறுத்தவரை ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
ஸ்வாதி! நீ ஒரு படித்த பொறியாளர்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகத்திலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாய்; அந்தப் பணிக்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில்தான் ஒரு கொலைகாரனின் மிருகத்தனத்துக்கு இரையானாய். ஒரு வகையில் நீ பெண்கள் முன்னேற்றத்தின் ஒரு குறியீடு. ஆகையால், உனது படுகொலை பெண்கள் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட களங்கம்; அதுவே ஏதோ ஒரு கிராமத்தில், படிப்பறியாத ஒரு பெண் கொலைசெய்யப்பட்டால், அது குறித்து பெண்கள் முன்னேற்ற ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதை நீ ஏற்றுக் கொள்வாயா?
உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்?
சமூகத்தின் மீது போலியாகக் கோபப்படுகிறவர்கள், சந்தடி சாக்கில் மூன்றாம்தரமான விமர்சனங்களை வைத்து, வாசிப்பவர்களை உசுப்பேற்றுவது வாடிக்கையல்லவா? அந்த உத்தியைத்தான் கட்டுரையாளரும் பயன்படுத்தியிருக்கிறார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அப்போது அந்தப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருந்த எந்த ஆண்மகனுக்கும் ஆண்மையில்லை; அதேபோல, எந்தப் பெண்ணுக்கும் பெண்மையுமில்லை என்று எழுதியிருந்தால், மகளிர் சங்கங்கள் கொடிதூக்கிக்கொண்டு அவரது அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்திருக்கும் என்பதனால், சவுகரியமாக அதைச் சொல்லவில்லை. அனேகமாக, அவர் ஆண்மையில்லை என்று தன்னையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டிருப்பார். (கட்டுரையாளர் கவனிக்க: அது வரிஜினிட்டி அல்ல; விரிலிட்டி.)
சென்னை மட்டுமின்றி, தமிழகமே உனது படுகொலை செய்திகேட்டு பதைபதைத்துக் கொண்டிருக்கையில், உனது பிரேதத்தின் தோளில் துப்பாக்கி வைத்து அவர் நடத்தியிருக்கிற தாக்குதல், உனக்குக் கொச்சையாகப் பட்டிருந்தால், அவர் சார்பாக நானே வருத்தம் தெரிவிக்கிறேன். ஆணல்லவா, உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாவம்!
அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?
 நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் அறிவுஜீவி! உண்மையில், நுங்கம்பாக்கம் உட்பட சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லையென்பதோ, பல பறக்கும் ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதோ, பயணிகளின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்பதோ கட்டுரையாளருக்கு நீ கொலைசெய்யப்படும் வரைக்கும் தெரியாது. தொடர்வண்டிகளில் பயணிக்கிறவர்கள் அன்றாடம் படுகிற அல்லல்கள், பெண்களுக்கு நிகழ்கிற அவலங்கள் இவையெல்லாம் கட்டுரையாளரின் மேலான பார்வைக்குக் கொண்டுசெல்லாத இந்த சமூகம் உண்மையிலேயே ஆண்மையற்ற சமூகம்தான். முன்கூட்டியே அறிந்திருந்தால், கட்டுரையாளர் மேற்கூறிய தவறுகளுக்குப் பொறுப்பானவர்களை அறம்பாடியே அழித்திருப்பார். காரணம், அவரது சமூக அக்கறையானது அவ்வளவு உறுதியானது. மேலொரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.
உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
கட்டுரையாளர் அனேகமாகக் கடவுளாக இருந்தாலும் இருக்கலாம். இறந்தபின்னும் உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை மட்டுமல்ல, உன்னைக் கொலை செய்தவனின் மனம் என்ன நினைக்கக்கூடும் என்பதுகுறித்தும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் அவளது ஒழுக்கத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்ற மிக முற்போக்கான சிந்தனையை அவர் கோடிட்டுக் காட்டியிருப்பதை என்னவென்று வியப்பது?
ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.
இல்லை! ஒரு கொலையைத் தடுக்கிற மன உரமும், உடல் வலுவும் பெறுவதற்கு முன்னர், கட்டுரையாளர் உட்பட அனைவரும் செய்யத்தக்கவை நிரம்ப இருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகளை இழைக்கிறவர்களைக் கண்டும் காணாமலும் போகிற மனப்போக்கை விட்டுவிட்டு, உடனுக்குடன் தட்டிக் கேளுங்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் தொடங்கி அன்றாடம் நம் கண்முன்னே சமூக அலட்சியத்துடன் புழங்குபவர்களைக் கண்டிக்கிற துணிச்சலை வரவழைத்துக் கொள்ளுங்கள். கட்டுரைகள் எழுதுவதோடு நிறுத்தாமல், செயலில் இறங்குங்கள். சமூகத்தைத் திட்டுவதோடு பொறுப்பு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், களத்தில் இறங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு தனிமனிதன் செய்கிற ஒரு சிறிய தவறையாவது சுட்டிக்காட்டி, அவனைத் தடுத்து நிறுத்துங்கள். தவறு செய்தால், பார்ப்பவர்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தை சிறுதுளி பெருவெள்ளமாக்க முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் அளவில் ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஈடுபடுத்துங்கள். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும்; காவல்துறை செய்ய வேண்டும்; நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று பழிபோட்டுவிட்டு ‘என்னால் முடிந்தது புலம்புவதும் சாபமிடுவதும் மட்டும்தான்’ என்று உட்காராமல், முடிந்ததைச் செய்யுங்கள். – இது தானே நீ சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஸ்வாதி?  
      கட்டுரையாளர் மட்டுமல்ல. ‘கொலையைக் கண்டும் கொலையாளியைத் தடுக்காதவர்களும் குற்றவாளிகள்தான்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் இன்னொரு முன்னாள் நடிகை; இன்னாள் அரசியல்வாதி. பெண்களைக் கேவலமாக நடத்துகிறார் என்று கட்சியின் எம்.எல்.ஏக்களே புகார் கொடுக்குமளவுக்கு யோக்கியமான தலைவர் உள்ள கட்சியிலிருந்து கொண்டு, இவர்களெல்லாம் இப்படிப் பேசுவது உன் ஆன்மாவைக் காயப்படுத்துவதன்றி வேறேன்ன ஸ்வாதி?
      கட்டுரையாளரின் முடிவுரையையே முத்தாய்ப்பாய் வைக்கிறேன்.
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.
அப்படி வீழ்ந்து கிடக்கிற சமூகத்தில் ஸ்வாதியும், அவளது மரணத்தை வேடிக்கை பார்த்தவர்களும் மட்டுமல்ல; அதை மையப்படுத்தி சமூகத்தை மட்டும் குற்றம்சாட்டி, அவரவர் கடமைகளைத் தட்டிக்கழிக்கிற கட்டுரையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதை மாற்ற ஒரு சிறு அடியை முன்வைத்து, முனைவதே ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, பெண்களுடன் சகோதரனாய் வளர்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண்ணுக்குத் தகப்பனாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு ஆண்மகனின் கண்ணியத்துக்குப் பெருமை சேர்ப்பதாய் இருக்கும்.

ஸ்வாதி! உன் படுகொலை உறங்கிக்கொண்டிருக்கிற மனசாட்சிகளை உலுக்கி எழுப்புகிற அழைப்புமணியாவதாக!