Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Saturday, February 27, 2021

மாஸ்க்கிலாமணி


மாஸ்க்கிலாமணி

கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது. சென்றமுறை, கடலைப்பருப்புக்குப் பதிலாக பொறிகடலையும், பாமாயிலுக்குப் பதிலாக பினாயிலும் வாங்கி வந்ததன் விளைவாக இரண்டு நாட்களுக்கு காப்பிக்குப் பதிலாக ரவா கஞ்சி குடிக்க நேரிட்ட துயரம் இன்னும் அவரது தொண்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே இறங்காமல், அழிச்சாட்டியமாக அங்கேயே எக்ஸிபிஷன் போட்டு அப்பள ஸ்டால் நடத்திக் கொண்டிருந்தது.

மாசிலாமணியின் சதக்தர்மிணி, மன்னிக்கவும், சகதர்மிணி குசலகுமாரி என்ற குஷி, பெட்ரூமில் உள்பக்கம் தாள்போட்டுக்கொண்டு, யூட்யூப் பார்த்தபடி குச்சுப்படி பயிற்சி பண்ணிக்கொண்டிருந்தாள். ஏற்கனவே குடியிருந்த பழைய வீட்டில் குஷியின் குச்சுப்பிடி காரணமாக மச்சுப்படி உட்பட கட்டிட்த்திலிருந்த காரையெல்லாம் உதிர்ந்ததால், கொஞ்ச நாளைக்கு எல்லாரும் மலைக்கள்ளன் எம்ஜியாரைப் போல கயிற்றை உபயோகித்துத்தான் மாடிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தார்கள். ஆகவே, பூகம்பமே வந்தாலும் அதிராத புத்தம்புது டெக்னாலஜியில் கட்டப்பட்ட குடியிருப்பில் கொள்ளைவிலை கொடுத்துக் குடிவந்திருந்தார் மாசிலாமணி.

என்னதான் தில்லான ஆசாமியாக இருந்தாலும், மனைவியின் தில்லானாவுக்குத் தொந்தரவு செய்வது, மைதாமாவு தோசை என்ற மாபெரும் ஆபத்துக்கு வித்திடும் என்பதை அறிந்தவர் என்பதால், சத்தம்போடாமல் கதவைச் சாத்திவிட்டு, லிஃப்டு வழியாகக் கீழே வந்து, மெயின்கேட்டை நெருங்கினார்.

யோவ், நில்லுய்யா!” என்று ஒரு குரல்கேட்கவே, திரும்பிய மாசிலாமணி, ஒரு செக்யூரிட்டி தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார்.

யாருய்யா நீ, அபார்ட்மெண்ட்ஸ்ல துணிப்பை சேல்ஸ் பண்றியா?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டதும், மாசிலாமணிக்குக் கோபம் மூக்குக்கு மேல், கிட்டத்தட்ட முன்மண்டை வரை வந்தது.

பல்குத்தும் குச்சிக்குப் பாவாடை கட்டினாற்போல, தொளதொளவென்ற யூனிபாரம் அணிந்திருந்த அந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நெருங்கி வந்து நின்று முறைத்தார்.

யோவ், வாயிலே என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே? எப்படிய்யா உள்ளே வந்தே?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டுக் கொண்டிருந்தபோதே, அபார்ட்மெண்ட் மேனேஜர் ஒப்பனிங் சீனில் வரும் ஹீரோவைப் போல எங்கிருந்தோ குதித்தோடி வந்தார்.

யோவ் செக்யூரிட்டி, அவர் யாரு தெரியுமா?” என்று நெருங்கி வந்தார் மேனேஜர். “இவரு புதுசா வீடுவாங்கி குடிவந்திருக்காருய்யா. மரியாதையாப் பேசு.”

அந்த செக்யூரிட்டி டென்ஷனில் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்த சத்தத்தைக் கேட்டு, எட்டாவது மாடியிலிருந்த புறாக்களெல்லாம் பயந்து எக்மோர் ஸ்டேஷனுக்குக் குடிபெயர்ந்தன.

மேனேஜர், என்னைப் பார்த்து துணிப்பை சேல்ஸ் பண்றியான்னு கேட்கிறாரு இந்தாளு,” என்று பொருமினார் மாசிலாமணி.

அடப்பாவி,” என்று மேனேஜர் தலையில் கைவைத்தார்.

யோவ் மேனேஜர், அவன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குய்யா என் தலையிலே கைவைக்கறீங்க?” என்று உறுமினார் மாசிலாமணி.

சாரி சார், பதட்டத்துல எது என்னோட தலைன்னு தெரியாமக் குழம்பிட்டேன்,” என்று வருந்திய மேனேஜர், செக்யூரிட்டி பக்கம் திரும்பினார்.

எல்லாம் உன்னாலே வந்தது! சார் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? கவர்மெண்டுல அண்ட்ராயர் செகரட்டரியா இருக்காரு!”

யோவ் மேனேஜர், உன் வாயை பாமாயில் போட்டுக்கழுவுய்யா! அது அண்டர் செகரட்டரி; அண்ட்ராயர் செகரட்டரி இல்லை.” எரிந்து விழுந்தார் மாசிலாமணி.

அண்டர் செகரட்டரின்னா பேஸ்மெண்டுலதான் ஆபீஸா சார்?” என்று பவ்யமாகக் கேட்டார் மேனேஜர்.

ஆண்டவா,” மாசிலாமணிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னய்யா இங்கே செக்யூரிட்டியும் சரியில்லை; மேனேஜரும் சரியில்லை. இந்த அப்பார்ட்மெண்ட் ரொம்பத் தப்பார்ட்மெண்ட்டா இருக்கும் போலிருக்கே.”

கோவிச்சுக்காதீங்க சார்,” என்று கைகூப்பினார் மேனேஜர். “வந்ததுலேருந்து எப்பவும் மாஸ்க் போட்டுக்கிட்டுத்தான் நடமாடுவீங்க. இன்னிக்கு மாஸ்க் போடாம வந்திருக்கீங்களா, எனக்கே அடையாளம் தெரியலை.”

என்னது? மாஸ்க் போடலியா?” மாசிலாமணி அதிர்ந்தார். “நல்லாப் பார்த்துட்டுச் சொல்லுய்யா. நெஜமாவே  நான் மாஸ்க் போடலியா?”

இதுக்கெல்லாமா பொய் சொல்லுவாங்க? என் பொஞ்சாதி தங்கலட்சுமி மேலே சத்தியமா நீங்க மாஸ்க் போடலை சார்.”

ஐயையோ!” அலறினார் மாசிலாமணி. “வழக்கமா கடைக்குப்போயி என்ன சாமான் வாங்கணும்கிறதைத்தான் மறப்பேன். இன்னிக்கு மாஸ்க் போடவே மறந்திட்டேனா?”

“அப்படீன்னா இன்னிக்கு என்ன சாமான் வாங்கணும்னு ஞாபகம் வைச்சிருக்கீங்களா சார்? வெரிகுட்!”

”சும்மாயிருய்யா,” மாசிலாமணி சலித்துக்கொண்டார். “நானே என்ன வாங்கணும்னே தெரியாம எந்தக்கடைக்குப் போறதுன்னு குழம்பியிருக்கேன். ஆனாலும், ஆண்டவன் ஒரு மனுசனை இப்படியெல்லாமா சோதிக்கிறது?”

இதுக்கெல்லாம் ஆண்டவன் என்ன சார் பண்ணுவாரு?” என்று பரிதாபமாக்க் கேட்டார் மேனேஜர். “சார், முக்குக்கடையிலேதான் அஞ்சு ரூபாயிலிருந்து அம்பது ரூபா வரைக்கும் மாஸ்க் தொங்க விட்டிருக்கானே? ஒண்ணு வாங்கிட்டுப் போறதுதானே?”

வெரிகுட்!” மாசிலாமணி மெச்சினார். “மேனேஜர்னதும் நான்கூட தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்க ரொம்ப உண்மையிலேயே புத்திசாலி.”

யோவ் செக்யூரிட்டி,” மேனேஜர் மீண்டும் அந்த செக்யூரிட்டி பக்கம் திரும்பினார். “இனிமேல் சார்கிட்டே மரியாதையா நடந்துக்கணும் தெரியுதா? ஏழாவது மாடிக்குக் குடிவந்திருக்காரு சார்! இவர் பேரு மாஸ்கிலாமணி..ச்சீ.. மாசிலாமணி!”

இனிமே ஜாக்கிரதையா இருப்பேன் சார்,” என்று பணிவன்புடன் கைகுவித்தார் செக்யூரிட்டி.

என்னத்தை ஜாக்கிரதை? நீ அடிச்ச சல்யூட்டுல உன் பேண்ட் அவுந்து விழுந்திருச்சு. ரிஸைன் பண்ணிட்டுப் போனவன் யூனிஃபாரத்தையெல்லாம் போட்டுக்காம இனிமேலாவது ஜாக்கிரதையா இரு,” என்று அறிவுரைத்த மாசிலாமணி, காம்பவுண்டை விட்டு வெளியேறி கடையை நோக்கி நடந்தார்.

மாஸ்க் போடுவதை மறந்த விஷயம் அதற்குள் மறந்துபோய்விடவில்லையென்பதால், முக்குக்கடைக்குள் நுழைந்தார்.

”சார்,” கடைக்காரர் அலறினார். “மாஸ்க் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க சார்.”

”மாஸ்க் வாங்கத்தான் உள்ளே வரணும்.”

”உள்ளே வரணும்னா மாஸ்க் போடணும் சார்.”

”மாஸ்க் இல்லேன்னுதானே மாஸ்க் வாங்க உள்ளே வர்றேன்.”

“மாஸ்கே வாங்கணும்னாலும் மாஸ்க் இல்லாம உள்ளே வந்து மாஸ்க் வாங்க முடியாது.”

”யோவ் வெளக்கெண்ணை முண்டம்!” மாசிலாமணி பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை கடைக்காரரை நோக்கி வீசியெறிந்தார். “இதுக்கு ஒரு மாஸ்கை எடுத்து விட்டெறி! நான் கேட்ச் புடிக்கிறேன்.”

கடைக்காரர் ஒரு மாஸ்க்கை எடுத்து எறிய, மாசிலாமணி அதைக் கரெக்டாகக் கேட்ச் பிடித்தார்.

”சூப்பர் சார், ரோஹித் ஷர்மாவைவிட நல்லாவே கேட்ச் புடிக்கறீங்க,” என்றார் கடைக்காரர்.

’ரோஹித் ஷர்மா எப்பவாச்சும் பூந்திக்கரண்டி, பூரிக்கட்டையைக் கேட்ச் புடிச்சிருந்தாத்தானே?’ என்று மனதுக்குள் எண்ணியவருக்குச் சட்டென்று பொறிதட்டியது.

’யுரேகா! பூரிக்கட்டை…பூரி…ஞாபகம் வந்திருச்சு… நான் கடைக்குப்போய் வாங்க வேண்டியது கோதுமை மாவும், கோல்ட்வின்னர் எண்ணையும்! யெப்பா ரோஹித் ஷர்மா… நீ இன்னும் பத்து வருசத்துக்கு டெஸ்ட் மேட்ச் ஆடணும் சாமி..’

மறதி வருவதற்குள் மாஸ்க்கை அணிந்துகொண்ட மாசிலாமணி, திருவருட்செல்வர் சிவாஜிபோல சிங்கநடை போட்டார்.

வழக்கமாக மளிகை சாமான் வாங்க தான் செல்லுகிற அந்த டப்பார்ட்மெண்டல், மன்னிக்கவும், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழையை முற்பட்டபோது, அங்கிருந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நிறுத்தினார்.

”சார், ஒரு நிமிஷம்! சூடு இருக்கான்னு பார்க்கணும்.”

”என்னய்யா இது, இன்னிக்கு எல்லா செக்யூரிட்டிகளும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க. யாரைப் பார்த்துய்யா சூடு இருக்கா, சொரணை இருக்கான்னு கேட்கறே?”

“சாரி சார், டெம்பரேச்சர் கன் வேலை பண்ணலை. அதான், உடம்புல சூடு இருக்கான்னு கேட்டேன் சார்.”

”உடம்புல சூடு இருக்கிறதுனாலதான்யா கடைக்கு வந்திருக்கேன். இல்லாட்டி கண்ணம்மாபேட்டைக்குக் கொண்டுபோயிருப்பாங்கய்யா.”

”ஐயோ சார், காய்ச்சல் இருக்கான்னு கேட்டேன் சார்!”

”அதை எங்கிட்டே ஏன்யா கேட்குறே? உனக்குக் காய்ச்சல் இருக்கான்னு பார்க்க நான் என்ன டாக்டரா? நான் அண்ட்ராயர்…ச்சீ, அண்டர் செகரட்டரிய்யா!”

“சார்” அந்த செகரட்டரி அழாதகுறையாக கைகூப்பினார். “ நீங்க உள்ளே போங்க சார்!”

ஒருவழியாகக் கடைக்குள் சென்று வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் வாங்கிக்கொண்டு வெற்றிப்பெருமிதத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். காம்பவுண்ட் அருகே மேனேஜரும், இன்னொருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

”அந்த ஏழாவது மாடியிலே புதுசா குடிவந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்,” இரைந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். “தொம்முதொம்முன்னு ஒரே சத்தம். ரெண்டு ட்யூப்லைட் ஃபியூஸ் ஆயிருச்சு. இன்னிக்கு என்னடான்னா நல்லா ஓடிட்டிருந்த சீலிங் ஃபேன் நின்னுருச்சு. அந்தாளு மட்டும் என் கையிலே கிடைச்சான், அவனைக் கொலை பண்ணிருவேன்.”

”ஏய்ய்ய்!” மாசிலாமணியின் ரத்தம் கொதித்து, காதுவழியாக ஆவி பறந்தது. “எவண்டா கொலை பண்றவன்? தில்லிருந்தா வாடா பார்க்கலாம்.”

திரும்பிப்பார்த்த மேனேஜர்,’ யோவ் யாருய்யா நீ? சம்பந்தமில்லாத மேட்டர்ல எதுக்கு நுழையறே? இவரு புதுசா குடிவந்திருக்காரே, மாசிலாமணி, அவரைப்பத்திப் பேசிட்டிருக்காரு!”

”யோவ் மேனேஜர், நான்தான்யா மாசிலாமணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தோமேய்யா?”

“சார் நீங்களா? மாஸ்க் போட்டிருக்கீங்களா, அதான் அடையாளம் தெரியலை.” என்று தலையை, அதாவது அவரது சொந்தத்தலையைச் சொறிந்தார் மேனேஜர்.

”படுத்தாதீங்கய்யா,” பொறுமையின்றிக் கூச்சலிட்டார் மாசிலாமணி. “முதல்ல மாஸ்க் போடாம அடையாளம் தெரியலை; இப்போ மாஸ்க் போட்டா அடையாளம் தெரியலியா?”

”அது இருக்கட்டும் மிஸ்டர் மாசிலாமணி,” அந்த நபர் குறுக்கிட்டார். “ நீங்கதானே ஏழாவது மாடியிலே குடிவந்திருக்கீங்க? உங்க வீட்டுல யாராவது குதிச்சுக் குதிச்சு விளையாடறாங்களா? ஏன் இவ்வளவு சத்தம்?”

”நீங்க ஆறாவது மாடியிலே இருக்கீங்களா?” கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டார் மாசிலாமணி.

“நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கேன் சார்,” அந்த நபர் உறுமினார். “என்ன சார் நடக்குது உங்க வீட்டுல?”

“லூசாய்யா நீ?” கொதித்தார் மாசிலாமணி. “ஏழாவது மாடியிலே என் பொஞ்சாதி குச்சுப்புடி ஆடினா, கிரவுண்ட் ஃப்ளோர்ல எப்படியா கேட்கும்?”

“சார்,” மேனேஜர் குரலைத்தாழ்த்தினார். “கிரவுண்ட் ஃப்ளோர் கூட பரவாயில்லை சார். பக்கத்து பில்டிங்ல கவுன்சிலர் குடியிருக்காரு. உங்க வொய்ஃப் குச்சுப்புடி சத்தம் கேட்டு, நம்ம பில்டிங்க்ல என்னமோ வேலை நடக்குதுன்னு சந்தேகப்பட்டு மாமூல் கேட்க வந்திட்டாரு சார்!”

”ஐயையோ!” மாசிலாமணி வாயடைத்துப்போனார்.

”மாசிலாமணி சார்,” அந்த நபர் குழைந்தார். ‘ஒரு புருஷனோட மனசு இன்னொரு புருஷனுக்குத்தான் புரியும். என்னதான் லக்ஸுரி அபார்ட்மெண்ட்னாலும் குச்சுப்புடி ஆடறதெல்லாம் ரொம்பவே ஓவர். குழந்தை குட்டிங்க இருக்காங்க; ஹார்ட் பேஷண்ட்ஸ் இருக்காங்க. இந்த லாக்டவுணுக்கு அப்புறம் ஒவ்வொரு பிளாக்லயும் குறைஞ்சது ரெண்டு வீட்டுலயாவது யாராவது கர்ப்பமா இருக்காங்க. இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரின்னுற முறையிலே சொல்றேன். விஷப்பரீட்சையெல்லாம் வேணாம் சார்.”

”அடாடா, நீங்கதான் செகரட்டரியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் மாசிலாமணி. “செகரட்டரின்னா கையிலே ஒரு டார்ச் லைட்டோ, ஸ்க்ரூ டிரைவரோ வைச்சிட்டிருக்கணும் சார். அதான் நம்ம பண்பாடு! இல்லாட்டி எப்படி அடையாளம் தெரியும்?”

பேசிமுடித்துவிட்டு, வீடு திரும்பியவர் கதவைத்தட்டிவிட்டு, மாஸ்க்கைக் கழற்றிவிட்டுக்கொண்டார். கதவைத் திறந்த குஷி…

“என்னங்க, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போகலியா?” என்று கேட்டார்.

அடுத்த நொடி…

ஏழாவது மாடியிலிருந்து தொப்பென்று ஏதோ விழும் சத்தம் கேட்டது.

Tuesday, October 31, 2017

வாராது வந்த வரதாமணி



வாராது வந்த வரதாமணி

வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சாலச்சிறந்தது. அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை கிட்டாமணி, வரதாமணி இருவருடனும் பேசுவதற்கு அனுப்பினால், சத்தியமாக இருவரும் உறவுதான்  என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார். சொந்தக்காரர்கள் எவர் வீட்டுக்கும் போகாமலிருந்ததால், வரதாமணியை நிறைய பேர் ’வராத மணி’ என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன இரண்டு சாத்துக்குடிப்பழங்களுடனும் வாசலில் வந்து நின்ற வரதாமணியைப் பார்த்துப் பூரித்த கிட்டாமணியின் வயிற்றில் புளிகரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆகியதுபோல உணர்ந்தான்.

’கிட்டா! சௌக்யமாடா?’என்று பாய்ந்துவந்து கிட்டாமணியைக் கட்டிப்பிடித்து வரதாமணி குலுக்கிய குலுக்கில், கிட்டாமணியின் வயிற்றிலிருந்த காப்பி பால் வேறு, டிகாஷன் வேறு ஆகியது.

அந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வெளியேவந்த பாலாமணி, தன் கணவரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

’இது யாருடா கிட்டா? உன் சம்சாரமா?’ வரதாமணியின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது. “பத்து வருஷத்துக்கு முன்னாலே பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா!”

’சும்மாயிரு வரதா,’கிட்டாமணி முணுமுணுத்தான். ‘அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்.’

பரஸ்பரம் குசலம் விசாரித்து முடிந்ததும் வரதாமணி, தீபாவளிக்குச் செய்த பலகாரமென்று விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைக்க, அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது. வரதாமணி கொண்டுவந்த பண்டங்களின் வாசனையில் அங்கிங்கெனாதபடி எங்குமிருந்த டெங்குக்கொசுக்களின் டங்குவார்கள் அறுந்துபோய், சுங்குவார் சத்திரத்தை நோக்கிக் கிளம்பின. ஒரு வழியாக, பாலாமணி காப்பியைக் கலந்துகொண்டு வைத்தபிறகுதான் வரதாமணியின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

’டேய் வரதாமணி, நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே?’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா?”

“எனக்குப் பிடிக்கலேடா கிட்டா,” வரதாமணி சுரத்தேயில்லாமல் கூறினார். “Forward வசதிமாதிரியே Rewind-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”

“சரிசரி, போய்க் குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம்,” என்றான் கிட்டாமணி. பாலாமணி அன்று ஸ்பெஷலாகச் செய்திருந்த கபூர்தலா கத்திரிக்காய் கொத்சைச் சாப்பிட்டால், வரதாமணி காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிவிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான். ஆனால், வரதாமணியோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும்  மீதமிருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும். உண்ட களைப்பில் வரதாமணி கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, பாலாமணி கிட்டாமணியை இழுத்துக்கொண்டு போனாள்.

”இத பாருங்க, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு டயோட்டா இன்னோவாவோ ஃபோர்ட் ஃபியஸ்டாவோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்க! ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு? இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”

”இப்படி திடீர்னு கேட்டா எப்படி?” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா?”

”ஒண்ணும் வேணாம்; முதல்ல இந்தாளைக் கெளப்புங்க! இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்!”

”உங்கப்பா வீடா? அது இடிஞ்சுபோயி இப்ப ஊர்க்காரங்க எருமைமாட்டைக் கட்டியிருக்கிறதாச் சொன்னே?”

“அது கிராமத்து வீடு,” பாலாமணி ஓலமணியாகிக் கூவினாள். “நான் பெங்களூரு வீட்டுக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”

“அதான் நீ போறியா?”

”இத பாருங்க, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்.”

“கரெக்ட்! ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தாக் கஷ்டம்தான்.”

”நான் அப்பா வீட்டுக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா?”

“அதுக்கு உங்கப்பாதானே வருத்தப்படணும்? பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா?”

”எனக்கென்ன தலையெழுத்தா? ஸ்பைஸ்ஜெட்ல டிக்கெட் போடுங்க!”

சோகமும் கோபமும் மிகுந்த நிலையில் பாலாமணி இரண்டே மணி நேரத்துக்குள் மேக்-அப் போட்டுக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினாள். பாலாமணி கிளம்பி சரியாக அரை மணி நேரம் கழித்து வரதாமணி உறக்கத்திலிருந்து கண்விழித்தான்.

“கிட்டா? இந்த வீட்டுல கொசு இருக்கா என்ன?”

“எல்லாம் வெளியே போயிருந்தது. பாலாமணி கிளம்பினதும் தைரியமா ரிட்டர்ன் ஆயிடுச்சு.”

“அடடா, சம்சாரம் கோவிச்சிட்டுப் போயிட்டாளா?”

“ஆமாண்டா வரதா, பாண்டிச்சேரிலேருந்து மான்ஷன் ஹவுஸ் ஒரு பாட்டில் வாங்கி வைச்சிருக்கேன். ஆளுக்கு ஒரு லார்ஜ் போட்டுக்கலாமா?”

“ஒரு மனுஷி ஹவுஸ்ல இல்லேன்னா உடனே மான்ஷன் ஹவுஸா?”

“அப்போ வேண்டாம்கிறியா?”

“எப்போ அப்படிச்சொன்னேன்? எடுத்திட்டு வாடா!”

“டேய் வரதா, இது கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு இல்லை; மான்ஷன் ஹவுஸ் விஸ்கி! இதுக்குக் குளம் வெட்டினே, உன்னையே வெட்டிருவேன்.”

“பொஞ்சாதி கெளம்பிட்டா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசறான்யா”

வரதாமணியும் கிட்டாமணியும் ஆளுக்கு ஒரு லார்ஜ் என்று ஆரம்பித்து, மான்ஷன் ஹவுஸ் பாட்டிலுக்கு சிரஸாசனம் செய்வித்துக் கடைசிச்சொட்டையும் காலிசெய்தனர்.

”உன் பொண்டாட்டி கோவுச்சிட்டுப் போனதை நினைச்சா ரொம்ப வர்த்தமா இருக்குடா!” என்று வரதாமணி வராத கண்ணீரை வரவழைக்க முயன்றார்.

”இப்போ எதுக்குடா சீரியல்லே வர்ற சித்தப்பா மாதிரி எமோஷனல் ஆகுறே? ஏன், உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா?”

“அது இல்லாமலா? போன மாசம்கூட பக்கத்துவீட்டு பேபி ஸ்கூலுக்குப் போயிட்டுருக்கும்போது டாட்டா காட்டினேன். உடனே கோவிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டா!”

“அடாடா, அந்த பேபி எந்த கிளாஸ்ல படிக்குது?”

“படிக்கலேடா, அது டீச்சரா இருக்குது!”

”நியாயமாப் பார்த்தா உன்னைத்தான் துரத்தியிருக்கணும்!”

“அதை விடுடா, ஏதாவது பண்ணி இந்தப் பொம்பளைகளுக்குப் பாடம் கற்பிக்கணும்டா!”

“அதுக்கு முதல்லே நாம படிக்கணுமே! விடுடா, நாம எப்பவும் போல இப்படியே சூடுசொரணை இல்லாமலே கடைசிவரை இருந்திரலாம்.”

“என்னாலே முடியாது,” வரதாமணி கொக்கரித்தான். “பொறுத்தது போதும்; பொங்கி எழு!”

“இன்னொரு பொங்கலா? உன்னையே கத்திரிக்காய் மாதிரி சுட்டு கொத்சு பண்ணிடுவேன்.”

”சும்மாயிரு, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் அரசியல்ல குதிக்கப்போறேன்.”

”அடப்பாவி, பொண்டாட்டி மேலே இருக்கிற கோபத்தை ஏண்டா ஊருமேலே காட்டறே?”

”என்னைப்பத்தி என்ன நினைச்சே? பொங்கலைச் சாப்பிட்டுட்டுத் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஒரு ட்வீட் போட்டேன்; பார்க்கறியா?”

“எங்கே காட்டு!”

வரதாமணி தனது மொபைல் போனை எடுத்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதுபோல ஆங்காங்கே தடவ, வரதாமணியின் டிவிட்டர் உயிர்பெற்றது.

“கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு!” கிட்டாமணி வாசித்தான். “இதெல்லாம் ஒரு ட்வீட்டுன்னு போட்டிருக்கியே!”

“சரியாப் பாரு! இதை அம்பது பேர் ரீ-ட்வீட் பண்ணியிருக்கான்!”

கிட்டாமணி அரண்டு போனான்.

“அட ஆமாண்டா! இதை எதுக்குடா ரீ-ட்வீட் பண்ணியிருக்கானுங்க? உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே?”

“கீழே கமெண்ட் படிடா!” வரதாமணி சிரித்தான்.

“என்ன கமெண்ட்?” கிட்டாமணி வாசித்தான். “பஞ்சாபில் கத்திரிக்காய் கொத்சு; தமிழ்நாட்டில் பொங்கலுக்கே வழியில்லை!”

“பார்த்தியா? ஒரு கொத்சு மேட்டரை எப்படி அரசியலாக்கி ட்வீட் பண்ணுறான் நம்மாளு!”

”இதுக்குத்தான் ஆளாளும் டிவிட்டருக்குப் போறானுங்களா?”

“இரு!” என்று வரதாமணி புதிதாக ஒரு ட்வீட்டை டைப் அடித்தான்.

“மான்ஷன் ஹவுஸ்!”

“இதென்னடா கண்றாவி?”

“பொறு! இப்ப இதையும் ரீ-ட்வீட் பண்ணி கமெண்ட் போடுவான் பாரு நம்மாளு!”

சில நிமிடங்கள் கழித்து.....

“இதோ பாரு முத கமெண்ட்....!”

கிட்டாமணி வாசித்தான்.

“இப்படியே போனால் தமிழர்களெல்லாம் குடும்பத்தை விட்டுவிட்டு மான்ஷனில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா தலைவா? பலே!”

வரதாமணி வாய்விட்டுச் சிரித்தான்.

“பார்த்தியா மக்களோட ரியாக்‌ஷனை? இப்ப சொல்லு! நாம அரசியலுக்குப் போயிடலாமா?”

”டேய்! நீ வரதாமணி இல்லேடா; வாராது வந்த மாமணி! என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா?”

“அதான் பொட்டிக்கடை ஆரம்பிக்கிறா மாதிரி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு போஸ்டர் ஒட்டறானுங்க. என்ன சொல்றே? அரசியலுக்குப் போலாமா?”

“அதுக்கு முன்னாடி அர்ஜெண்டா பாத்ரூம் போயிட்டு வர்றேன்,” என்று கிளம்பினான் கிட்டாமணி.

வரதாமணி ட்விட்டரில் அடுத்த ட்வீட் போட்டான்.

”நம்பர் ஒன்!”

*****************

Saturday, January 30, 2016

பேய்மையே வெல்லும்




பேய்மையே வெல்லும்
       அப்பளம் பொரிகிற வாசனை ஆலந்தூரிலிருந்து புறப்பட்ட மெட்ரொ ரயில்போல சமையலறையிலிருந்து கிளம்பி, கிட்டாமணியின் மூக்கை வந்து அடைந்தது. மனைவி பாலாமணியின் ஆணைக்கிணங்க, அதாவது ஆசைக்கிணங்க அவளது சொந்த ஊருக்கு வந்ததிலிருந்து கிட்டாமணி காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு, மச்சான் குப்பண்ணாவின் மரணக்கடிகளிலிருந்து தப்பித்து வந்து கொண்டிருந்தார். ஆனால், எண்ணைச்சட்டி கொதிக்கிற வாசனைவந்தாலே நாக்கு நாகப்பட்டினமாகி வெள்ளத்தில் மூழ்குவது, வாடிக்கையாகி விட்டிருந்தது. ’உளுந்து அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல், வெங்காய சாம்பார், பூண்டு ரசம், வெள்ளரிக்காய்ப்பச்சடி…’ என்று கிட்டாமணி யோசித்துக் கொண்டிருந்தபோதே, குப்பண்ணா உலுக்கி எழுப்பினார். 
       மாப்பிள்ளே! என்ன பகல்கனவு காணுறீங்களா?”
       உங்கக்காவைக் கட்டிக்கிட்டதுலேருந்து ராத்திரியிலேயே கனவு வர்றதில்லை; இதுலே பகல்கனவு வேறேயா?’ என்று எரிச்சலுடன் கண்ணைத் திறந்த கிட்டாமணி, கார்பன் மொபைல்போனில் காண்டாமிருகம் எடுத்த செல்ஃபிபோல எதிரே தெரிந்த குப்பண்ணாவின் முகத்தைப் பார்த்து ஒரு வினாடி பயந்துவிட்டார்.
       சேச்சே!” இயர்போனைக் கழற்றினார் கிட்டாமணி. ”பாட்டுக் கேட்டிட்டிருந்தேன்.”
       எனக்குக்கூட நிறைய பாட்டு டவுண்லோட் பண்ணிக் கேட்கணும்னு ஆசைதான். அதுக்கு ஏதோ மெமரி கார்டு வேணும்னு கடைக்காரன் சொல்றான்.” பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் குப்பண்ணா. “அடுத்தவாட்டி போனா கேட்கணும். ஆதார்கார்டு இருந்தா டவுண்லோட் பண்ண முடியுமான்னு.”
       குப்பண்ணாவுக்கும் பொது அறிவுக்கும் இருக்கிற தொடர்பு, புகாரி ஓட்டலுக்கும் புளிசாதத்துக்கும் உள்ள தொடர்பு என்பதை கிட்டாமணி அறிந்திருந்ததால், அவருக்குச் சிரிப்பு வரவில்லை.
       உங்களுக்கும் செல்போனுக்கும்தான் ராசியே இல்லையே!” கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கிட்டாமணி மச்சானை துச்சானாக்கினார்.
       கரெக்டுதான்!” சைலன்ஸர் இல்லாத ஷேர்-ஆட்டோபோலச் சத்தமிட்டுச் சிரித்தார் குப்பண்ணா. “போனமாசம் ஒரு மடையன் என்னோட புதுபோனைத் திருட்டிட்டான் தெரியுமா?”
       என்ன மச்சான்? திருடனைப் போயி மடையன்னு சொல்றீங்க?”
       பின்னே என்ன? போனை மட்டும் திருடிட்டுப் போயி என்ன பண்ணுவான்? சார்ஜர் என்கிட்டே தானே இருக்கு?”
       குப்பண்ணாவின் அறிவுத்திறனைப் பார்த்து, கிட்டாமணியின் உடம்பெல்லாம் புல்லரித்து, எறும்பு கடித்ததுபோல ஏகத்துக்கும் தடிப்புகளே ஏற்பட்டுவிட்டன.        
ஆனாலும் உங்களுக்கு இத்தனை அஜாக்கிரதை ஆகாது மச்சான்,” குப்பண்ணாவின் வாயைக் கிண்டினால், மேலும் சில உப்புமாக்கதைகள் கிடைக்குமென்று சீண்டினார் கிட்டாமணி.
       ஆமாம்! போனவாட்டி நீங்க வந்திட்டுப் போன அன்னிக்கு என்னோட பர்ஸ் காணாமப் போயிடுச்சு. அதுலே ரெண்டாயிரம் ரூபாய் இருந்திச்சு.”
       இல்லையே! வெறும் ஆயிரத்தி எண்ணூறுதானே இருந்திச்சு?” என்று அவசரப்பட்டுச் சொன்ன கிட்டாமணி சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
       அப்ப இருநூறு ரூபாய் லாபமா? சபாஷ்!” சிரித்தார் குப்பண்ணா. “என் வருத்தமெல்லாம், அந்தத் திருடனை இன்னும் கண்டுபிடிக்கவே முடியலை மாப்பிள்ளை.”
       கண்டிப்பா கண்டுபிடிச்சிருவீங்க,” நக்கலாய்ச் சிரித்தார் கிட்டாமணி. “பாலாமணி தம்பியா கொக்கா?”
       இன்னும் எங்க அக்காவுக்கு பயப்படறீங்களா மாப்பிள்ளை?” குப்பண்ணா சிரித்தார்.
       யாரு சொன்னா? நான் சொன்னதுதான் வீட்டுலே நடக்கும் தெரியுமா? தேங்காய் நார் வேணும்னா தேங்காய் நாரை உடனே கொண்டாந்து கொடுப்பா உங்கக்கா.”
       எதுக்குத் தேங்காய் நார்?”
       அதாலே பாத்திரம் தேய்ச்சாத்தான் நல்லாப் பளிச்சுன்னு இருக்கும். பிளாஸ்டிக் பிரஷ் நான் யூஸ் பண்ண மாட்டேன்.”
       எங்கக்கா ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கா!” என்று சொன்ன குப்பண்ணாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு ஆனந்தக்கண்ணீர் இறங்கி, கன்னத்தைத் தாண்டுமுன்பே இடைவேளைக்கு முன்பே காணாமல்போகும் தமிழ்ப்படக் கதைபோல மாயமானது.
       மாப்பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம்.”
       என்னது, நீங்களும் தேங்காய் நார் தானா?”
       இல்லை மாப்பிள்ளை!” குப்பண்ணா குரலைத் தாழ்த்திக் கொண்டார். “கொஞ்ச நாளா ஊருலே புதுசா ஒரு பேய் நடமாடிட்டிருக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க.”
       என்னை சந்தேகப்படறீங்களா? சத்தியமா நான் அந்தப் பேய் இல்லை.”
       ஜோக் அடிக்காதீங்க மாப்பிள்ளை. உங்களைப் பேய்ன்னு சொன்னா பேயே தூக்குப்போட்டு செத்துப்போயிரும். நான் சொல்ல வந்தது என்னான்னா, ராத்திரி திருவிழா பார்க்கப்போனா, தனியாத் திரும்பி வராதீங்க. வழியிலே முத்தம்மாவோட பேய் வழிமறிக்குதாம்.”
       பொம்பளைப் பேயா?” கிட்டாமணி உற்சாகமானார். “பார்க்க ஹன்ஸிகா, த்ரிஷா மாதிரி இருக்குமா?”
       முத்தம்மா சாகும்போது அவளுக்குத் தொண்ணூறு வயசு.
       வயசான காலத்துலே செத்தப்புறம்கூட ரெஸ்ட் எடுக்காம எதுக்குப் பேயா அலையுது இந்தப் பாட்டி?” கிட்டாமணிக்கு எரிச்சல் மிகுந்தது. “எதுக்கு வம்பு? நான் பாட்டுக்கு இன்னிக்கு ராத்திரி படுத்து நிம்மதியாத் தூங்கிடறேன்.”
       மாப்பிள்ளை! இன்னிக்கு ராத்திரி கண்ணழகி காந்தாவோட கரகாட்டம் நடக்கப்போகுது. நீங்க திருவிழாவுக்கு வர்றீங்களோ, கோவிலுக்குப் போறீங்களோ இல்லையோ, ஆனா, காந்தாவோட ஆட்டத்தைப் பார்க்காம இருந்திடாதீங்க. அப்புறம் நீங்களும் பேயா அலைவீங்க.”
       குப்பண்ணா சொன்னதைக் கேட்டதும், கிட்டாமணியின் காதில் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்கேட்டமாங்குயிலே பூங்குயிலே சேதியொண்ணு கேளுபாடல் எதிரொலிக்க, கண்ணழகி காந்தாவின் ஆட்டத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தபடி, முஷ்டியை இறுக்கியவாறு, தீர்மானமாக ஓங்கித் தொடையில் குத்தினார்.
       ஐயோ!” குப்பண்ணா அலறினார். “எதுக்கு மாப்பிள்ளை என் தொடையிலே குத்துறீங்க?”
       ஸாரி, உங்க தொடையா? குறி தவறிடுச்சு,” என்று சமாளித்த கிட்டாமணி, “நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாமா?”
       அது சரிப்பட்டு வராது,” குப்பண்ணா வலிதாளாமல் தொடையை வருடியவாறு கூறினார்.
       அதுக்கு ஏன் என் தொடையைத் தடவறீங்க?”
       ! உங்க தொடையா? வலியிலே குழம்பிட்டேன்.” என்று அரற்றிய குப்பண்ணா, “நமக்கு நிறைய கன்ஃப்யூஷன் இருக்கு. அதுனால, நாம ரெண்டு பேரும் வேறே வேறே நேரத்துல, வேற வேற வழியிலே போய் வேறே வேறே இடத்துல இருந்து ஆட்டத்தைப் பார்ப்போம்.”
       வேறே வேறே ஆட்டத்தைப் பார்த்து ஏமாந்திடாம இருக்கணுமே?” காந்தாவின் ஆட்டத்தைப் பார்க்கிற ஆவலால் கிட்டாமணி கண்கொட்டா மணியாகியிருந்தார்.
       இன்னிக்கு ஒரே புரோகிராம் காந்தா கரகாட்டம்தான்,” என்று காய்ந்துகிடந்த கிட்டாமணியின் வயிற்றில் கப்புச்சீனோ காப்பி வார்த்தார் குப்பண்ணா. “அப்போ, நீங்க பயப்படாம தனியாப் போயிட்டுத் தனியா வந்திடுவீங்கதானே?”
       என் துணிச்சலைப் பத்தி உங்கக்காகிட்டே கேளுங்க,” மார்தட்டினார் கிட்டாமணி, “ஒருவாட்டி எங்க ஏரியாவுலே ஒரு வீட்டுலே தீப்புடிச்சிருச்சு. நான் துணிச்சலா உள்ளேபோயி அங்கேயிருந்த நாலஞ்சு பேரை வெளியே தூக்கிட்டே வந்திட்டேன். தெரியுமா?”
       அப்படியா? எந்திரன் ரஜினி மாதிரியில்லே பண்ணியிருக்கீங்க?”
       ஹும்! எந்திரன் ரஜினி மாதிரி ஜோடி அமையாட்டாலும் இதையாவது பண்ணுவோமென்னுதான்...
       சூப்பர் மாப்பிள்ளை! அப்ப நாம ரெண்டு பேரும் தனித்தனியாப் போகலாம்.”
எப்படியும் மாப்பிள்ளை பேய்ப்பீதியிலே ராத்திரி வெளியே போகமாட்டார்.’ குப்பண்ணா மனதுக்குள் வில்லன்சிரிப்புச் சிரித்தபடி கிளம்பினார். ‘இன்னிக்கு திருவிழா பார்க்கப்போறேன்னு கிளம்பி, டாஸ்மாக் மூடுறவரைக்கும் ஒரு கை பார்த்திட வேண்டியதுதான்.’
       குப்பண்ணா கிளம்பியதும், மீண்டும் இயர்போனைக் காதில் மாட்டிய கிட்டாமணியின் காதுகளில், ‘ஆகாயத்தில் தொட்டில்கட்டி மங்கை உன்னைக் கண்டாள்என்ற ஆவிப்பாடல் விழவே, அவருக்குகுப்பென்று வியர்த்தது.
       சேச்சே! தொண்ணூறு வயசுப்பாட்டி பேசவே கஷ்டப்படும்; வாணி ஜெயராம் வாய்ஸிலே பாடவா போகுது? இதுக்குப் பயந்து திருவிழாவுக்குப் போகாம இருந்தா, மச்சான் நம்மளைத் தொடைநடுங்கின்னு நினைச்சிருவாரு. கண்டிப்பா போயே தீரணும்என்று முடிவெடுத்த கிட்டாமணி, மீண்டும் முஷ்டியை இறுக்கி, தீர்மானமாக ஓங்கித் தொடையில் குத்தியதும்தான், குப்பண்ணா அலறியதில் ஆச்சரியமில்லை என்று புரிந்தது.
ஆனால், இதற்கு பாலாமணி சம்மதிப்பாளா?
       ”என்னது, ராத்திரியிலே தனியா போறீங்களா?” பாலாமணி ஓலமணியாகி அலறினாள். “முத்தம்மாவோட பேய் உலாத்திட்டிருக்குன்னு ஊரே கதிகலங்கிக் கிடக்குது. நீங்க தனியாப் போயி முத்தம்மா கண்ணுலே பட்டா என்னாகும்?”
       ”அது பேய்தானே? அதுக்கு ஒண்ணும் ஆகாது!” என்றார் கிட்டாமணி.
       ”உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா?” தமிழ்சீரியல் அக்காபோல பாலாமணியின் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் பெருகியது. “உங்களை நம்பித்தான், ரேஷன்லே அஞ்சு கிலோ கோதுமை வாங்கி வைச்சிட்டு வந்திருக்கேன். ஊருலே எவ்வளவு வேலையிருக்கு?”
       என் வீரத்தைப் பத்தி சந்தேகப்படறியா பாலாமணி?” கிட்டாமணி இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினார். “உனக்கு ஞாபகமிருக்கா, நம்ம வீட்டுப் பக்கத்துலே தீப்பிடிச்சுதே, அன்னிக்கு நான் ஒருத்தன் உள்ளே போயி நாலைஞ்சு பேரை தூக்கிட்டு வந்து வெளியிலே போட்டேனே? மறந்திட்டியா?”
       எல்லாம் ஞாபகமிருக்கு,” அலுப்புடன் பதிலளித்தாள் பாலாமணி. “அன்னிக்கு எல்லாருமாச் சேர்ந்து உங்களைப் போட்டு அடிச்சுத் துவைச்சாங்களே அதுவும் ஞாபகமிருக்கு.”
       அதுக்கென்ன பண்றது? நான் வெளியே இழுத்துக் கொண்டுவந்து போட்டது ஃபயர் சர்வீஸ் காரங்களைன்னு எனக்கு எப்படித் தெரியும்?”
       ”வரவர பொண்டாட்டியையே எதிர்த்துப் பேச ஆரம்பிச்சீட்டீங்க? எப்பலேருந்து இந்தக் கெட்ட பழக்கம்?”
       ”பாலாமணி! இந்த ஒரே ஒருவாட்டி, என்னை என் இஷ்டப்படி விடேன்,” கிட்டாமணி கெஞ்சினார்.
       பாலாமணி யோசித்தாள்.
”அப்படியா? காதைக்கொடுங்க!”
“ரொம்ப முறுக்கிடாதே பாலாமணி! புதுசா இயர்போன் வாங்கியிருக்கேன்; பாட்டுக் கேட்க முடியாது!”
”ஐயோ! அதுக்கில்லை. தப்பித்தவறி நீங்க பேயைப் பார்த்தா எப்படித் தப்பிக்கணும்னு காதுலே சொல்றேன். கேட்டுக்குங்க!”
கிட்டாமணியின் காதில், பாலாமணி எதையோ சொல்ல, அதைக் கேட்ட கிட்டாமணியின் முகம் கடைவாசலில் தண்ணீர் தெளித்துவைத்த காலிஃப்ளவர்போல மலர்ந்தது.
”புரிஞ்சுதா?” பாலாமணி கேட்டாள். “பேயைப் பார்த்தா இப்படிப் பண்ணுங்க. ஓடியே போயிடும்.”
”அதெப்படி பேயோட சைக்காலஜியை எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றே?” வியந்தார் கிட்டாமணி. “அதுசரி, இதை ஏன் ரகசியமாச் சொன்னே?”
”சத்தம்போட்டுச் சொன்னா பேய் காதுலே விழுந்திராது?”
பாலாமணியின் புத்திகூர்மையை அறிந்து கிட்டாமணியின் இதயம் உடுப்பி ஹோட்டல் பூரிபோல உப்பிப் பூரித்தது.
அன்று இரவு, பாலாமணி சொன்னதுபோல, காந்தாவின் கரகாட்டத்தைக் காணக் கிளம்பினார் கிட்டாமணி. போனபிறகுதான் தெரிந்தது……
”காந்தாவுக்குப் பதிலா யாரோ சாந்தாவைக் கூட்டிட்டு வந்து ஏமாத்திப்புட்டாய்ங்க. கூப்பிடுங்கய்யா விழாக்குழுவை. இன்னிக்கு இங்கே ரெண்டு மூணு தலை உருளப்போவுது.”
ஊர்மக்கள் கூடிக்கூடி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த கிட்டாமணிக்கு, முத்தம்மாவைப் பார்க்காமலேயே, உடம்பு அரசுப்பேருந்தின் கடைசி இருக்கைபோல ஆட்டம் கண்டது.  நிலவரம் கலவரமாவதற்குள் நடையைக் கட்டாவிட்டால், முத்தம்மாவின் சிம்பொனியில் தானும் கம்பனி கொடுக்க நேரிடும் என்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்.
கிட்டாமணியின் மனமென்ற குட்டையில், மச்சான் முத்தண்ணா காந்தாவென்ற கல்லையெறிந்ததால், அதிலிருந்த தவக்களைகள் தாவித் தாவித் துரத்த ஆரம்பித்திருந்தன. சாவதற்குள் ஒரு உருப்படியான மூஞ்சியைப் பார்க்க வேண்டுமென்ற தனது ஆசையும் நிறைவேறாமல் போன கவலையில் கிட்டாமணியின் கண்களிலிருந்து, மாநகராட்சி டேங்கர் போல தண்ணீர் மானாவாரியாகக் கொட்ட ஆரம்பித்தது.
அப்போது….!
தூரத்தில், இருட்டில் சிவப்புப்புடவை அணிந்தவாறு ஒரு உருவம் வருவதைப் பார்த்த கிட்டாமணியின் உடம்பு, ஃப்ரீஸரில் வைத்த பால்பாக்கெட்டைப் போல உறைந்தது. அதே சமயம், பாலாமணி அளித்த பேயோபதேசத்தை அவரது மனம் நினைவுகூர்ந்தது. தோளில் தொங்கிய பையில் வைத்திருந்த சிவப்புநிறப் புடவையை எடுத்து உடம்பைச் சுற்றி, தலையில் முக்காடு போட்டுக் கொண்டார்.
பெண் என்றால் பேயும் இரங்கும். நீங்களும் முத்தம்மாவை மாதிரியே சிவப்புப் புடவையைச் சுத்திட்டுப் போனா, பேய் பார்த்ததும் ஏமாந்து திரும்பிப் போயிடும்.”
ஆனால், எதிரே வந்த உருவம் திரும்பிப் போகவில்லை. கிட்டாமணியை நெருங்கியது -சிவப்புநிறப் புடவையில்! இப்போது என்ன செய்வது?
முத்தம்மாவுக்கு மசால்வடை ரொம்பப் பிடிக்கும். மூணுவாட்டி மசால்வடைன்னு சொன்னா அது உங்களை ஒண்ணும் பண்ணாது,” – பாலாமணியின் குரல் அசரீரிபோலக் கேட்டது.
மசால்வடை! மசால்வடை! மசால்வடை!” – கிட்டாமணி உரக்கச் சொன்னார். ஆனால்…
பேய் இன்னும் கிட்டாமணியை நோக்கியே வந்து கொண்டிருந்தது.
“முத்தம்மா மசால்வடை சாப்பிடறதை நிறுத்தியிருக்குமோ? எமலோகத்துல கே.எஃப்.சி பிராஞ்ச் திறந்திருப்பாங்களோ என்னமோ!”
கிட்டாமணி யோசிப்பதற்குள், அந்த உருவம் அவரை மிகவும் நெருங்கி விட்டது. இப்போது என்ன செய்வது?
துணிஞ்சிடுங்க! பையிலிருக்கிற பழஞ்செருப்பை எடுத்துக்குங்க. அப்படியே அடி பின்னிடுங்க.
கிட்டாமணி பழஞ்செருப்போடு அந்த உருவத்தின்மீது பாய்ந்தார். அடுத்த ஒருசில நிமிடங்கள், தெலுங்குப்பட கிளைமாக்ஸ் காட்சிபோல, வெறும் டிஷூம் டிஷூம் என்ற சத்தங்களுடன் கழிந்தன. கிட்டாமணி கைவலிக்கும் வரை பழஞ்செருப்பால் அந்த உருவத்தை அடித்தபிறகு, மூச்சு வாங்கியபோதுதான் அந்த உருவம் மூர்ச்சையாகியிருப்பது புரிந்தது. ’வீரத்தை விடவும் விவேகம்தான் முக்கியம்’ என்பதால், விவேகமாக அங்கிருந்து திரும்பியும் பாராமல் ஓட ஆரம்பித்தார் கிட்டாமணி. காந்தாவின் ஆட்டம் கான்சல் ஆன கடுப்பில், கண்ணயர்ந்திருந்த தெருநாய்களெல்லாம் திடுக்கிட்டு எழுந்து, அசப்பில் எலும்புத்துண்டு போலிருந்த கிட்டாமணி ஓடுவதைப் பார்த்துத் துரத்த ஆரம்பித்தன. பேயோடு போரிட்டு வென்ற கிட்டாமணி, நாயோடு போரிடத் துணிவின்றி புறமுதுகு காட்டிப் புழுதிபறக்க ஓடினார்.
மறுநாள் காலை! திருவிழாவின் கடைசி நாள்! ஒலிபெருக்கியிலிருந்து பாடல் கணீரென்று கேட்டது: ‘டங்காமாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி’
’எழுந்திருங்க! எழுந்திருங்க!’ கிட்டாமணியை உலுக்கி எழுப்பினாள் பாலாமணி. “சீக்கிரமா வந்து என் தம்பியைப் பாருங்க!”
தூக்கத்தில் கண்விழித்த கிட்டாமணிக்கு, பாலாமணியைப் பார்த்ததும் சற்றே முத்தம்மாவின் ஞாபகம் வந்தாலும், திடுக்கிட்டு எழுந்து மச்சான் குப்பண்ணாவின் அறைக்கு ஓடினார். குப்பண்ணாவின் மனைவி பரிமளா, worryமளாவாகக் கன்னத்தில் கைவைத்தபடி நின்றிருக்க, குப்பண்ணா பரோட்டாவுக்குப் பிசைந்த மாவுபோலப் படுக்கையில் கம்பளிக்குள் சுருண்டு கிடந்தான்.
“மச்சான்! என்னாச்சு?”
”மாப்பிள்ளை! கரகாட்டம் பார்க்கப்போறேன்னு பொய்சொல்லிட்டு வொயின்ஷாப்புக்குப் போயி ஓவராக் குடிச்சிட்டு வந்தேனா? தூரத்துலே ஒரு உருவம் வந்திச்சா, பரிமளா சொன்னாமாதிரி ஒரு சிவப்புப்புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். உடனே முத்தம்மா ‘மசால்வடை மசால்வடை மசால்வடை’ன்னு மூணுவாட்டிச் சொல்லிச்சு. முத்தம்மாவுக்கு ‘கீரைவடைதான் பிடிக்கும்’ பரிமளா சொல்லியிருந்தாளா? நான் அப்படியே ஷாக் ஆயி நின்னுட்டேன். உடனே முத்தம்மா என் மேலே பாய்ஞ்சு பழஞ்செருப்பாலேயே என்னை அடிச்சுப் போட்டுட்டு ஓடிருச்சு. பின்னாலே நாயெல்லாம் துரத்திட்டுப் போச்சு. பாவம், அந்த நாயெல்லாம் என்னாச்சோ தெரியலை!”
பல்விளக்கிக் காப்பிகுடிக்காமலேயே கிட்டாமணியின் மூளைக்குள் சுவிட்சு போடாமலே பல்பு எரிந்தது. ‘அடப்பாவி, முத்தம்மான்னு நினைச்சு உன்னையா நான் போட்டு மொத்தினேன்?’
”முத்தம்மா ஏன் மசால்வடைன்னு சொல்லிச்சு? அதுக்குக் கீரைவடைதானே பிடிக்கும்?” என்று கேட்டாள் பாலாமணி.
”நேத்திக்கு நீ கீரைவடைன்னா எனக்குச் சொல்லிக் கொடுத்தே?” என்று கேட்கலாமா என்று யோசித்த கிட்டாமணி, அப்படிக் கேட்டால், மூன்று பேர் முத்தம்மாவாக மாறி தன்னை மொத்தமாக மொத்தி விடுவார்கள் என்று அமைதியாக நின்றார்.