Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, October 31, 2017

வாராது வந்த வரதாமணி



வாராது வந்த வரதாமணி

வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சாலச்சிறந்தது. அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை கிட்டாமணி, வரதாமணி இருவருடனும் பேசுவதற்கு அனுப்பினால், சத்தியமாக இருவரும் உறவுதான்  என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார். சொந்தக்காரர்கள் எவர் வீட்டுக்கும் போகாமலிருந்ததால், வரதாமணியை நிறைய பேர் ’வராத மணி’ என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன இரண்டு சாத்துக்குடிப்பழங்களுடனும் வாசலில் வந்து நின்ற வரதாமணியைப் பார்த்துப் பூரித்த கிட்டாமணியின் வயிற்றில் புளிகரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆகியதுபோல உணர்ந்தான்.

’கிட்டா! சௌக்யமாடா?’என்று பாய்ந்துவந்து கிட்டாமணியைக் கட்டிப்பிடித்து வரதாமணி குலுக்கிய குலுக்கில், கிட்டாமணியின் வயிற்றிலிருந்த காப்பி பால் வேறு, டிகாஷன் வேறு ஆகியது.

அந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வெளியேவந்த பாலாமணி, தன் கணவரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

’இது யாருடா கிட்டா? உன் சம்சாரமா?’ வரதாமணியின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது. “பத்து வருஷத்துக்கு முன்னாலே பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா!”

’சும்மாயிரு வரதா,’கிட்டாமணி முணுமுணுத்தான். ‘அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்.’

பரஸ்பரம் குசலம் விசாரித்து முடிந்ததும் வரதாமணி, தீபாவளிக்குச் செய்த பலகாரமென்று விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைக்க, அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது. வரதாமணி கொண்டுவந்த பண்டங்களின் வாசனையில் அங்கிங்கெனாதபடி எங்குமிருந்த டெங்குக்கொசுக்களின் டங்குவார்கள் அறுந்துபோய், சுங்குவார் சத்திரத்தை நோக்கிக் கிளம்பின. ஒரு வழியாக, பாலாமணி காப்பியைக் கலந்துகொண்டு வைத்தபிறகுதான் வரதாமணியின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

’டேய் வரதாமணி, நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே?’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா?”

“எனக்குப் பிடிக்கலேடா கிட்டா,” வரதாமணி சுரத்தேயில்லாமல் கூறினார். “Forward வசதிமாதிரியே Rewind-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”

“சரிசரி, போய்க் குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம்,” என்றான் கிட்டாமணி. பாலாமணி அன்று ஸ்பெஷலாகச் செய்திருந்த கபூர்தலா கத்திரிக்காய் கொத்சைச் சாப்பிட்டால், வரதாமணி காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிவிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான். ஆனால், வரதாமணியோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும்  மீதமிருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும். உண்ட களைப்பில் வரதாமணி கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, பாலாமணி கிட்டாமணியை இழுத்துக்கொண்டு போனாள்.

”இத பாருங்க, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு டயோட்டா இன்னோவாவோ ஃபோர்ட் ஃபியஸ்டாவோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்க! ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு? இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”

”இப்படி திடீர்னு கேட்டா எப்படி?” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா?”

”ஒண்ணும் வேணாம்; முதல்ல இந்தாளைக் கெளப்புங்க! இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்!”

”உங்கப்பா வீடா? அது இடிஞ்சுபோயி இப்ப ஊர்க்காரங்க எருமைமாட்டைக் கட்டியிருக்கிறதாச் சொன்னே?”

“அது கிராமத்து வீடு,” பாலாமணி ஓலமணியாகிக் கூவினாள். “நான் பெங்களூரு வீட்டுக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”

“அதான் நீ போறியா?”

”இத பாருங்க, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்.”

“கரெக்ட்! ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தாக் கஷ்டம்தான்.”

”நான் அப்பா வீட்டுக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா?”

“அதுக்கு உங்கப்பாதானே வருத்தப்படணும்? பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா?”

”எனக்கென்ன தலையெழுத்தா? ஸ்பைஸ்ஜெட்ல டிக்கெட் போடுங்க!”

சோகமும் கோபமும் மிகுந்த நிலையில் பாலாமணி இரண்டே மணி நேரத்துக்குள் மேக்-அப் போட்டுக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினாள். பாலாமணி கிளம்பி சரியாக அரை மணி நேரம் கழித்து வரதாமணி உறக்கத்திலிருந்து கண்விழித்தான்.

“கிட்டா? இந்த வீட்டுல கொசு இருக்கா என்ன?”

“எல்லாம் வெளியே போயிருந்தது. பாலாமணி கிளம்பினதும் தைரியமா ரிட்டர்ன் ஆயிடுச்சு.”

“அடடா, சம்சாரம் கோவிச்சிட்டுப் போயிட்டாளா?”

“ஆமாண்டா வரதா, பாண்டிச்சேரிலேருந்து மான்ஷன் ஹவுஸ் ஒரு பாட்டில் வாங்கி வைச்சிருக்கேன். ஆளுக்கு ஒரு லார்ஜ் போட்டுக்கலாமா?”

“ஒரு மனுஷி ஹவுஸ்ல இல்லேன்னா உடனே மான்ஷன் ஹவுஸா?”

“அப்போ வேண்டாம்கிறியா?”

“எப்போ அப்படிச்சொன்னேன்? எடுத்திட்டு வாடா!”

“டேய் வரதா, இது கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு இல்லை; மான்ஷன் ஹவுஸ் விஸ்கி! இதுக்குக் குளம் வெட்டினே, உன்னையே வெட்டிருவேன்.”

“பொஞ்சாதி கெளம்பிட்டா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசறான்யா”

வரதாமணியும் கிட்டாமணியும் ஆளுக்கு ஒரு லார்ஜ் என்று ஆரம்பித்து, மான்ஷன் ஹவுஸ் பாட்டிலுக்கு சிரஸாசனம் செய்வித்துக் கடைசிச்சொட்டையும் காலிசெய்தனர்.

”உன் பொண்டாட்டி கோவுச்சிட்டுப் போனதை நினைச்சா ரொம்ப வர்த்தமா இருக்குடா!” என்று வரதாமணி வராத கண்ணீரை வரவழைக்க முயன்றார்.

”இப்போ எதுக்குடா சீரியல்லே வர்ற சித்தப்பா மாதிரி எமோஷனல் ஆகுறே? ஏன், உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா?”

“அது இல்லாமலா? போன மாசம்கூட பக்கத்துவீட்டு பேபி ஸ்கூலுக்குப் போயிட்டுருக்கும்போது டாட்டா காட்டினேன். உடனே கோவிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டா!”

“அடாடா, அந்த பேபி எந்த கிளாஸ்ல படிக்குது?”

“படிக்கலேடா, அது டீச்சரா இருக்குது!”

”நியாயமாப் பார்த்தா உன்னைத்தான் துரத்தியிருக்கணும்!”

“அதை விடுடா, ஏதாவது பண்ணி இந்தப் பொம்பளைகளுக்குப் பாடம் கற்பிக்கணும்டா!”

“அதுக்கு முதல்லே நாம படிக்கணுமே! விடுடா, நாம எப்பவும் போல இப்படியே சூடுசொரணை இல்லாமலே கடைசிவரை இருந்திரலாம்.”

“என்னாலே முடியாது,” வரதாமணி கொக்கரித்தான். “பொறுத்தது போதும்; பொங்கி எழு!”

“இன்னொரு பொங்கலா? உன்னையே கத்திரிக்காய் மாதிரி சுட்டு கொத்சு பண்ணிடுவேன்.”

”சும்மாயிரு, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் அரசியல்ல குதிக்கப்போறேன்.”

”அடப்பாவி, பொண்டாட்டி மேலே இருக்கிற கோபத்தை ஏண்டா ஊருமேலே காட்டறே?”

”என்னைப்பத்தி என்ன நினைச்சே? பொங்கலைச் சாப்பிட்டுட்டுத் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஒரு ட்வீட் போட்டேன்; பார்க்கறியா?”

“எங்கே காட்டு!”

வரதாமணி தனது மொபைல் போனை எடுத்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதுபோல ஆங்காங்கே தடவ, வரதாமணியின் டிவிட்டர் உயிர்பெற்றது.

“கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு!” கிட்டாமணி வாசித்தான். “இதெல்லாம் ஒரு ட்வீட்டுன்னு போட்டிருக்கியே!”

“சரியாப் பாரு! இதை அம்பது பேர் ரீ-ட்வீட் பண்ணியிருக்கான்!”

கிட்டாமணி அரண்டு போனான்.

“அட ஆமாண்டா! இதை எதுக்குடா ரீ-ட்வீட் பண்ணியிருக்கானுங்க? உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே?”

“கீழே கமெண்ட் படிடா!” வரதாமணி சிரித்தான்.

“என்ன கமெண்ட்?” கிட்டாமணி வாசித்தான். “பஞ்சாபில் கத்திரிக்காய் கொத்சு; தமிழ்நாட்டில் பொங்கலுக்கே வழியில்லை!”

“பார்த்தியா? ஒரு கொத்சு மேட்டரை எப்படி அரசியலாக்கி ட்வீட் பண்ணுறான் நம்மாளு!”

”இதுக்குத்தான் ஆளாளும் டிவிட்டருக்குப் போறானுங்களா?”

“இரு!” என்று வரதாமணி புதிதாக ஒரு ட்வீட்டை டைப் அடித்தான்.

“மான்ஷன் ஹவுஸ்!”

“இதென்னடா கண்றாவி?”

“பொறு! இப்ப இதையும் ரீ-ட்வீட் பண்ணி கமெண்ட் போடுவான் பாரு நம்மாளு!”

சில நிமிடங்கள் கழித்து.....

“இதோ பாரு முத கமெண்ட்....!”

கிட்டாமணி வாசித்தான்.

“இப்படியே போனால் தமிழர்களெல்லாம் குடும்பத்தை விட்டுவிட்டு மான்ஷனில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா தலைவா? பலே!”

வரதாமணி வாய்விட்டுச் சிரித்தான்.

“பார்த்தியா மக்களோட ரியாக்‌ஷனை? இப்ப சொல்லு! நாம அரசியலுக்குப் போயிடலாமா?”

”டேய்! நீ வரதாமணி இல்லேடா; வாராது வந்த மாமணி! என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா?”

“அதான் பொட்டிக்கடை ஆரம்பிக்கிறா மாதிரி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு போஸ்டர் ஒட்டறானுங்க. என்ன சொல்றே? அரசியலுக்குப் போலாமா?”

“அதுக்கு முன்னாடி அர்ஜெண்டா பாத்ரூம் போயிட்டு வர்றேன்,” என்று கிளம்பினான் கிட்டாமணி.

வரதாமணி ட்விட்டரில் அடுத்த ட்வீட் போட்டான்.

”நம்பர் ஒன்!”

*****************

Saturday, October 21, 2017

த்ரீ-இன்-ஒன்:04


01. மெர்சலாயிட்டேன்

பிரதமர் மோடியின் ‘ஸ்வச் பாரத் திட்டம்’ பேசப்பட்ட நிலையில், தமிழகத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற படம் ‘ஜோக்கர்’ (எனக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்). அந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது அளித்தது. காரணம், இன்று இந்தியாவில் அப்படத்தில் சித்தரிக்கப்பட்டதுபோல பல்லாயிரம் கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, அரசு குறித்த நேரடியானதும் மறைமுகமானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அந்தப் படத்துக்கு ‘சிறந்த படம்’ என்ற மகுடத்தைச் சூட்டுவதில் யாதொரு தயக்கமும் அரசு காட்டியதாகத் தெரியவில்லை.

மெர்சல்’- சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற சிலர் பரப்புகிற புரளிகளைக் கையாண்டு வசனங்கள் எழுதுவது எவ்வளவு அபத்தமான அணுகுமுறை என்பதை நடைமுறையில் நிரூபித்த ஒரு படமாகத் திகழப்போகிறது. எதையும் சரிபார்க்காமல், மிக அலட்சியமாக வசனம் எழுதுகிற தமிழ்த் திரைப்படவுலகத்தின் சில இயக்குனர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், இந்தப் படம் எதிர்கொண்ட கண்டனங்களும், இறுதியில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டிய அளவுக்கு ஏற்பட்ட சூழல்களும் ஒரு படிப்பினையாகத் திகழும்.

அரசாங்கங்கள் குறித்த விமர்சனங்கள் என்பதுதான் கருத்துச் சுதந்திரமே தவிர, விபரீதமான கருத்துக்களைப் பரப்புவது அல்ல. அந்த விதத்தில் வெறும் கண்டனங்களின் மூலம், படத்தயாரிப்பாளர்களுக்கு தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளித்திருப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

வலைப்பதிவுகளிலும் சரி, முகநூலிலும் சரி, எதையாவது பிதற்றிவிட்டு, கேள்விகேட்டால் பதிலுமளிக்காமல் பதுங்கிறவர்கள் நிரம்பவே இருக்கிறார்கள். இவர்களின் பொறுப்பின்மையை திரைப்படத்துறையும் பின்பற்றாமல், முக்கியமான பிரச்சினைகள் குறித்து வசனங்களோ காட்சிகளோ அமைக்கும்போது, ஒரு சுய கட்டுப்பாட்டுடன், பாரபட்சமின்றி முயற்சி செய்தால் அது அவர்களது படத்துக்கு நிச்சயம் அதிகப்படியான சிறப்பைச் சேர்க்கும்.

தமிழக பாஜக ‘கருத்துச் சுதந்திரத்தை அடக்குகிறது’ என்று பல அரசியல் கட்சிகள் கூச்சலிடுவது வேடிக்கை. ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரை தினகரன் அலுவலகத்துக்குள்ளே அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த சில ஊழியர்களை அடித்தும் எரித்தும் கொன்ற தி.மு.க; இந்திய ஜனநாயகத்தில் எமர்ஜென்ஸி என்ற அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தி, பத்திரிகை ஆசிரியர்களைச் சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கிய காங்கிரஸ்; மே.வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற பத்திரிகையாளர்களைக் கொன்ற கம்யூனிஸ்டுகள் - என கிளம்பியிருக்கிற இவர்களின் கடந்தகாலம் வரலாற்றின் கருப்புப்பக்கங்களாய் இன்னும் நிலைத்திருக்கிறது.

02. பாத்ஷாநாமா

தாஜ்மஹால் இடுகையின் முதல் மூன்று பகுதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு முன்னாள் வரலாற்று ஆசிரியரிடம் கொண்டுபோனேன். வாசித்துவிட்டு சற்றே புருவம் சுருக்கியவர், ’இது ரொம்ப ஸாஃப்ட்! ஷாஜஹானின் நிஜமுகம் தெரிய வேண்டுமென்றால் பாத்ஷா நாமா படிக்கணும். ரத்தம் கொதிக்கும்’ என்று அறிவுரைத்தார். அவரிடமிருந்ததோ உருதுவில் என்பதால் எனக்குப் பயனில்லை. ஒரு வழியாக ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்து முதல் பத்துப் பக்கங்கள் வாசித்து முடிப்பதற்குள் ஒரு பக்கம் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்கள் முன்பு அலைபேசி அழைப்பு....

‘இதை ஏன் ப்ளாகில் போடணும்? இதே நடையில் முழுமையாக எழுதியதும் ஒரு புத்தகமாகப் போடலாமே? தமிழில் புது முயற்சியாக இருக்குமே?’ என்றார்.

ஒரு நிமிடம் ‘தந்தன தந்தன தந்தன தந்தன....’ என்று பின்னணி கேட்க, வெள்ளையுடை தேவதைகள் ஆடுவதுபோல ஒரு கனா! ஆனால்....

‘முதலில் பிளாகில் எழுதுகிறேன் சார். அப்புறம் பார்க்கலாமே?”

‘உங்க விருப்பம்!’

ஆகவே, விரைவில் முதல் பகுதியை இங்கு காணலாம்.

ஒரு வேகத்தில் எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கூகிள், சில ஆங்கிலப்புத்தகங்கள் ஆகியவற்றை வாசிக்கத்தொடங்கியபோது சில ஆச்சரியமான தகவல்களை அறிய நேர்ந்தது. அதில் ஒரு சில துளிகளை மட்டும் இங்கே பதிவிட விருப்பம்.

சில வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜீப்பை விடவும் ஷா ஹானை கொடுங்கோலன் என்று கருதுகிறார்கள். இது முதல் ஆச்சரியம்.

மஹால் என்பது பொதுவாக அரண்மனையையே குறிக்கும் என்பதால், இது கையகப்படுத்தபட்ட ஒரு அரண்மனையாகவும் இருக்கலாம் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

இது தேஜோ லிங்கம் எனப்படுகிற சிவன் தலமாக இருந்ததாக சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே சில தரவுகளுடன் வாதிடுவது மூன்றாவது ஆச்சரியம்.

மேம்போக்காக, கேட்டறிந்த தகவல்களை சற்றே அகழ்ந்து பார்த்தால், தோண்டத் தோண்ட பல உண்மைகள் வெளிவரும் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.

03.  நகைச்சுவை

கிட்டாமணி- பாலாமணி வரிசையில் ‘வாராது வந்த வரதாமணி’ என்ற அடுத்த நகைச்சுவைக் கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. 

‘இப்போதெல்லாம் நீங்கள் எழுதுகிற பொருளாதாரப் பதிவுகளே மிகவும் நகைச்சுவையாக இருக்கிறதே,’ என்று கலாய்த்தார் நான் சந்தித்த சகபதிவர். :-) 

இந்த வலை எனக்கு அளித்திருக்கிற மிகப்பெரிய வரம், நான் அவர்களிடமிருந்து முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கிறேன்; அதற்காக களத்தில் இறங்கிப் பணியும் ஆற்றுகிறேன் என்று தெரிந்தும் என்னுடன் தொடர்ந்து நட்புடன் பழகுகிற பல நல்ல நண்பர்கள்.

சிலர், பாவம், என்ன செய்வதென்பது என்று தெரியாமல், எனது  ஃபேஸ்புக் பக்கத்தில் வந்து வசைபாடுகிறார்கள்.

அவரவர்க்குத் தெரிந்ததை, முடிந்ததைத்தானே அவரவர்கள் செய்வார்கள்? வாழ்த்துகள்.

Tuesday, October 17, 2017

அவர்கள் புளுகுகள்


அவர்கள் புளுகுகள்

ஒருவர் மீது துவேஷம் வந்துவிட்டால், நாம் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும், அது சரியா, தவறா என்று சரிபார்க்காமல் அதை ஆமோதிக்கவும், சிலாகிக்கவும் ஒரு ஜால்ராக்கூட்டமும் இருந்துவிட்டால், கோயபல்ஸுகளின் கொள்ளுப்பேரர்கள் கூட, அரிச்சந்திரர்களின் அவதாரமாகக் கருதப்படுவார்கள். இதற்கு உதாரணமாக ஒரு பதிவர் இருக்கிறார். அவர்கள் உண்மைகள்!

கசாப்புக்கடைக்கு புத்தர் ஸ்டால் என்று பெயரிடுவதுபோல, பொய்யும் புரட்டுமாக எழுதித்தள்ளுகிற ’மதுரைத்தமிழன்’ என்ற இந்த ஆசாமியின் வலைப்பதிவுக்குப் பெயர் ‘அவர்கள் உண்மைகள்.’

இவரது சமீபத்திய பொய்களின் சில சாம்பிள்களை நான் வாசித்து, அவரது பதிவுகளிலிருந்த சில கருத்துக்களுக்கு எதிராக சில கேள்விகளை வைத்தேன். ஆனால், புளுகர் சாமர்த்தியசாலி; ஒரு விஷயம் குறித்து கேள்வி எழுப்பினால், இன்னொரு விஷயத்தைப் பற்றி நம்மிடமே கேள்வி எழுப்புவார். சரி, அதற்கும் பதில் சொன்னால், இன்னொரு கேள்வி!

இவர்களைப் போன்ற அதிபுத்திசாலிகள் வலையுலகத்தில் மட்டுமல்ல; முகநூலிலும் இருக்கிறார்கள். நக்கலடிப்பது, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியின்றி, உண்மையை எதிர்கொள்ளவோ செரிமானம் செய்யவோ வலுவின்றி, வேண்டுமென்றே எழுதுகிறவனுக்கு எரிச்சலூட்டுவதுபோல எதையாவது எழுதி, மிகவும் புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொள்வதில் படுசமர்த்தர்கள். சரி, இவர்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால், இவர்களைப் போன்ற பொய்யர்களின் இடுகைகளைப் படித்துவிட்டு, அதை ஆமோதிக்கிற தொனியில் கருத்திடுகிற எனது நட்புகளாவது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்த இடுகை.

ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். அதைப்போலவே, மதச்சார்பின்மை என்ற பவுடரை மூஞ்சியில் அப்பிக்கொண்டு திரிகிற சில ஆஷாடபூதிகள்தான் தற்போது மோடியைக் குறித்து அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நம்ம புளுகுமாஸ்டரும் அப்படித்தான். தினமும் மோடியைப் பழித்து, அவரது அபிமானிகளைக் கலாய்த்து ஒரு பதிவாவது எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யமாகாததுபோல ஒரு பீதி இவருக்கு.

மோடியைப் பற்றி எழுதினால் உனக்கென்ன?

நீ என்ன ஆர்.எஸ்.எஸ்.ஆசாமியா? பதில்- ‘ஆமாம்’

இந்துத்வா வாதியா? பதில் -’ஆமாம்’

பாஜக-வில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாயா? பதில் -’ஆமாம்’

இவை ஏதும் இல்லையென்றாலும், எனக்கு சரியென்று பட்டால் அதுபற்றி எழுதுவேன். மன்மோகன்சிங் ஆட்சிக்கு ஆட்டம் காண்பித்த அண்ணா ஹஜாரேயையும் நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  நினைவிருக்கிறதா?

இது மதுரைத்தமிழன் என்ற ஒரு தனி ஆசாமிக்கு எதிரான பதிவு மட்டுமல்ல; அவரைப்போலவே, போகிற போக்கில் புரளி கிளப்பிவிட்டு, தரவுகளைக் கேட்டால் பம்முகிற, விபரங்களைக் கொடுத்தால் விழிபிதுங்குகிற, பரபரப்புக்கென்று பதிவுகளை எழுதிவிட்டு பதிலளிக்கவும் திராணியில்லாத ஆர்வக்கோளாறு அப்புசாமிகளுக்கு எதிரான ஒரு பதிவு.

சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல், இந்தியா ஒவ்வொரு துறையிலும் எத்தனை வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடனும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நமது ’அவர்கள் புளுகுகள்’ அந்த விபரங்களையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, ‘வளர்ச்சி குறைந்தது என்று மோடியே சொல்லிவிட்டார்’ என்று ஒற்றைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு தன் வலையில் ஒரு பதிவு போட்டு கம்பு சுற்றிக் கொண்டிருந்தார்.

எனது பின்னூட்டங்களில் நான் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், ஏதேதோ கேள்விகளைக் கேட்டு திசைதிருப்ப முயன்றார். ‘சரி, மோடி பொய் சொல்கிறார். உண்மை என்னவென்று நீங்களாவது சொல்லுங்களேன். அவர் கொடுத்த புள்ளிவிபரங்களில் ஒன்றிரெண்டையாவது தவறு என்று நிரூபியுங்களேன்,’ என்று ஏறக்குறைய சவாலே விடுத்திருந்தேன். ஊஹும், மனிதர் இன்றளவிலும் அதற்கு பதிலளித்த பாடில்லை. மாறாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் நிறுவனம் குறித்து ‘தி வயர்’ என்ற வலைத்தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப்போட்டு, ‘இதற்கு பதில் சொல்லுங்க,’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இறுதியாக அளித்த பதிலுக்கு அவரது எதிர்வினை இல்லை. சோலி முடிஞ்சுது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

மதுரைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்ற ஒரு புளுகரின் முகத்திரையையாவது கிழித்தால்தான், இத்தனை ஆண்டுகள் நானும் பதிவராக இருந்ததற்கு ஒரு பொருள் இருக்குமென்று நினைக்கிறேன்.

அமித்ஷா மகன் குறித்துக் கட்டுரை வெளியிட்ட அந்த வலைத்தளத்தின் மீது 100கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதும், அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட பல தகவல்கள் தவறானவை என்பதை பல நிதிமேலாளர்களும், நிபுணர்களும் வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார்கள் என்பதும் அமெரிக்க்க்காவில் இருக்கிற மதுரைத்தமிழனுக்குத் தெரியுமோ தெரியாதோ? அந்தச் சுட்டிகளை இங்கு போடாலாம்தான்; ஆனால், அவை ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பத்திரிகைகள்; அப்படித்தான் போடுவார்கள் என்று சாதிப்பீர்கள். அப்படியானால், இடதுசாரி சார்புடைய ‘தி வயர்’ கட்டுரையை மட்டும் வேதவாக்காக எடுத்துக்கொள்வீர்களா என்று நான் திருப்பிக் கேட்க நேரிடும்.

இப்போதாவது, அமித்ஷா மகன் விஷயத்தில் என்ன ஊழல் நடந்தது என்று விளக்கி ஒரு பதிவு போடத்தயாரா? அதற்கு பதில்போட நான் தயார்! Come on NRI, show some guts.

உண்மையில் மதுரைத்தமிழனுக்கும், அவரைப் போல பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது சேற்றை வாரி இறைக்கிற வேறு சில பதிவர்களுக்கும் பொருளாதாரம், நிதிமேலாண்மை குறித்து நிறையத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதற்கான சான்றுகளை அவர்களது பதிவுகளில் காண முடியவில்லை. எனது அனுமானம் தவறோ?

ஒரு இஸ்திரிக்கடைக்காரர் ரூ.5000/- முதலீடு செய்து தொழிலைத் தொடங்குகிறார். அவரிடம் தினமும் 100 பேர் சட்டையை இஸ்திரி செய்யக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சட்டைக்கும் தலா ரூ.5/- வாங்குகிறார் என்றால் ஒரு நாளைக்கு அவரது Turnover ரூ.500-, ஒரு மாதத்துக்கு ரூ.15000/-, ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000/-. அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்த லாபமல்ல. அவருக்கு அவரது தொழில் செய்வதற்கான செலவினங்கள் போக மீதமாவதுதான் லாபம். இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு, அந்தக் கட்டுரையைப் படித்தால், அதை எழுதிய அம்மணி ஒரு அரைக்கிறுக்கு என்பது புரிந்திருக்கும். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொண்டு, பெரிய சுயம்புபோல பதிவிடுகிறவர்கள் அரையா, முழுசா என்பதை அறிவுள்ளவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இதுவரை அடுத்தவர்கள் பரப்பிய பொய்யுரைகளைப் பதிவிட்டு வந்தவர், இப்போது புதிதாக ஒரு பொய்யை மிகவும் மெனக்கெட்டுக் கண்டுபிடித்து அதையும் ஒரு பதிவாகப் போட்டிருக்கிறார். அதையும் வாசித்துவிட்டு,  நிறைய நண்பர்கள் வியந்து விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்ன கண்டுபிடிப்பு என்று கேட்கிறீர்களா?

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் ரயில் நிலையமே கட்டப்பட்டது. 1950-ம் ஆண்டுதான் மோடி பிறந்தார். 6-வது வயதில், அதாவது 1956-ல் அவர் அங்கு எப்படி டீ விற்றிருக்க முடியும்?

இதுகுறித்து நான் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி சில மணி நேரங்களாகியும் பிரசுரமாகவில்லை. அதனால்தான், ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். அவனவன் பொய்யை வைத்தே பதிவு போடுகிறபோது, உண்மையை எழுதினால் என்னவாம்?

இவரது புளுகுமூட்டையை அவிழ்ப்போமா?

நான் சீரியஸ் பதிவுகள் எழுதுவதற்கு முன்னர், நிறைய தகவல் சேகரிப்பது வழக்கம். எடுத்தோமோ கவிழ்த்தோமோ என்று கிள்ளிவிட்டுத் துள்ளி ஓடுகிற பழக்கம் எனக்கில்லை.

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் என்ற ரயில் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் அங்கு ரயில் தடமே இல்லையா? அல்லது அப்படியொரு தடமிருந்திருந்தால், அங்கு ரயில் போக்குவரத்தே நடைபெறவில்லையா? அப்படியே நடைபெற்றாலும், அந்த ரயில்கள் வாட்நகரில் நின்றுபோனதா இல்லையா?

மேற்படிக் கேள்விகள் குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி, வேறென்ன, கூகிள் ஸர்ச்சாவது பண்ணிவிட்டுப் பதிவிட்டுத் தொலைத்திருக்கலாம் புளுகு மாஸ்டர்! மோடி மீது உங்களுக்கு இருக்கிற துவேஷம், புளுகுவதில் உங்களுக்கு இருக்கிற அளப்பரிய ஆர்வம், நீங்கள் எது எழுதினாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதற்கென்று நீங்கள் வைத்திருக்கிற ஒரு கூட்டம் - இவையெல்லாம் சேர்ந்து உங்களது அறிவுக்கண்ணை மறைத்து விட்டன.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்நகர் குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டதில் இருக்கிறது. 1887-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அகமதாபாத்- பாலன்பூர் இடையிலான தடத்தில்தான் வாட்நகர் அமைந்திருக்கிறது. இது ராஜ்புடானா ரயில்வே என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. வாட்நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றிருக்கின்றன; பயணிகளை ஏற்றுச் சென்றிருக்கின்றன.

அப்போது பிரிட்டிஷ் அரசு ஆண்டுகொண்டிருந்தது என்பதையாவது புளுகர்கள் அறிந்துவைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வர்த்தகத்துக்காக அவர்கள் சிறிய ஊர்களில் வெறும் நிறுத்தங்களை(Halt) மாத்திரமே வைத்திருந்தார்களே தவிர, கட்டிடம்(Station) எதுவும் எழுப்பவில்லை. முறையான கட்டிடம் 1973-ல் வந்தது என்பது உண்மைதான்.


2005-ல் பிரபல நூல்பதிப்பாளர்களான ‘பென்குயின்’ வெளியிட்டுள்ள, திரு.அச்யுத் யாக்நிக் எழுதியுள்ள ‘Shaping of Modern Gujarat’ என்ற ஆங்கில நூலில் மேற்படித் தகவல்களுக்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட அந்தப் பகுதியின் குறிப்பிட்ட அந்தப் பத்தி உங்களைப் போன்ற புளுகர்களின் பார்வைக்குத் தந்திருக்கிறேன். (பக்கம்.119)

இன்று காழ்ப்புணர்வோடு கரித்துக்கொட்டுகிற ஆங்கில ஊடகங்களில்கூட வாட்நகர் வாசிகள் மோடி தேநீர் விற்றதுகுறித்துப் பேசிய காட்சிகள், அவர் பதவியேற்றபோது ஒளிபரப்பப்பட்டன. இதெல்லாம் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூசாமல் பொய் பேசுகிற உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், ‘தொலைஞ்சு போவுது’ என்று இக்கிக்கி என்று இளித்துக்கொண்டு, தங்களையும் மோடிவிரோதிகள் போலக் காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.

உங்களுக்கு உறுதுணையாக இன்னும் ஓரிரெண்டு பேர் இருக்கிறார்கள். பரிவை.சே.குமார் என்ற இன்னொரு புளுகர். புளுகர் மட்டுமா? தாஜ்மஹாலை தஞ்சை கோவிலுடன் ஒப்பிடுகிறார் இவர். ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டிய பெரியகோவிலைப் புகழாமல் தாஜ்மஹாலை ‘காதல்சின்னம்’ என்று புகழ்கிறோமாம். புளுகர் நம்பர் டூ-வின் கண்டுபிடிப்பு. தாஜ்மஹாலை உலக வரலாற்று ஆசிரியர்கள் எத்தனைபேர் காறி உமிழ்கிறார்கள் என்பதை விரைவில் எழுதப்போகிறேன். காத்திருங்கள்.

நம் தமிழகத்தின் பெருமையாய் இருக்கிற ஒரு பிரம்மாண்டமான அழகை, அது ஒரு கோவில் என்பதற்காக, ஒரு சமாதியுடனா ஒப்பிடுவது? இதை ஆட்சேபிக்காமல் அங்குபோய் ‘ஆமாம் சாமி’ போட்ட பதிவர்களை நேரில் சந்திக்கும்போது அவசியம் கேட்பேன். ’இது உங்களுக்கே நல்லாயிருக்கா?’ - தயாராக இருங்கள்.

புளுகர்களே! மோடி டீ விற்றதை மணிசங்கர் ஐயர் என்ற மறைகழண்ட காங்கிரஸ்காரன் கிண்டல் செய்ததன் பலன் என்ன தெரியுமா? காங்கிரஸ் மொத்தம் ஜெயித்தது 44 இடங்கள். இன்று மக்களவையில் பெரும்பான்மை; மாநிலங்களவையிலும் பெரிய கட்சி பாஜக தான். இன்று இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் எத்தனையென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். இல்லையென்றால், கேட்கிற கேள்விக்குப் பதிலளிக்கிற துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் செய்ய முடியாது என்றால், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். என்னவென்று?

ஒன்று நீங்கள் புளுகர்கள் அல்லது அடிமுட்டாள்கள்.

Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.

Wednesday, January 27, 2016

சவுக்கடி சன்னி லியோனி



 Television Rating Point (TRP) எனப்படுவது, சில/பல ஆயிரம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி, எந்தெந்த நிகழ்ச்சிகள் எத்தனை பிரபலமாயிருக்கின்றன என்பனைக் கண்டறிந்து சொல்கிற ஒரு மின்னணு உட்டாலக்கிடி. அவ்வப்போது, சில ஊடகங்கள் / கல்லூரிகள் (பொழுதுபோகாமல்), அடுத்த ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்று வெளியிடுகிற அபத்தங்களைப் போலவே, இதுவும் இன்னொரு நகைப்புக்குரிய சங்கதி. பிச்சைக்காரனுக்குகுபேரன்என்ற பெயரிருப்பதுபோல, இந்த சாதனத்துக்குபீப்பிள்ஸ் மீட்டர்என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘நான் தான் டாப்பு; மீதியெல்லாம் டூப்புஎன்று ஏறக்குறைய எல்லா ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அடித்துக் கொள்கிற அவலத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்தடி.ஆர்.பிஎன்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது புரிந்திருக்கும். இருப்பினும், இதற்குத்தான், பல தொலைக்காட்சிகள் வலுக்கட்டாயமாக, அவர்களுக்குத் தோதான விஷயங்களை நமது தொண்டைக்குழிக்குள் குச்சியால் குத்தி இறக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பு மிகையாகத் தாளித்து, சிக்கிச் சின்னாபின்னமாகிற வழக்கம் அண்மைக்காலமாக ஆங்கில செய்தி காட்சி ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. பீஹார் தேர்தல் குறித்து எசகுபிசகாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு, பிறகு பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு, சில தொலைக்காட்சிகள் இறங்கியிருக்கின்றன என்பதுதான், கருத்துச் சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியாய் தென்படுகிறது.

அப்படியாகத்தானே, சமீபத்தில் சி.என்.என்.பி.என் தொலைக்காட்சியில், பூபேன் சௌபே என்கிற நெறியாளர், நடிகை சன்னி லியோனியைக் கண்ட பேட்டியின் ஓளிபரப்புக்குப் பிறகு, பாலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் சாமானியர்களும் காறித் துப்பாத குறையாக தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டியதை ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் பெறாத பூபேன் சௌபே, மழுப்பலாக தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்த விளக்கம், அசல் சௌபெ மார்க் விளக்கெண்ணை.

சன்னி லியோனியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும்......

2011-ல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இந்தியத் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, தொடர்ந்து மகேஷ் பட் தயாரிப்பில் வெளியான ‘ஜிஸ்ம்-2’ மூலமாக பாலிவுட்டில் கால்பதித்து, ’அவ்வகை’யிலான ஓரிரு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிற கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோனி, இவிடம் வருவதற்கு முன்னால் முழுநீள நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். (’வடகறிதமிழ்ப்படத்திலும் ஒரு குத்து டான்ஸ் ஆடியிருக்கிறாராம்!). பூர்வீக இந்தியரான இவருக்கும் இந்தியாவுக்கும் ஏனோ ஒத்துப்போகவில்லை.

ஜிஸ்ம்-2’, ’ராகினி எம்.எம்.எஸ்-2போன்ற படங்கள் வெளியானபோது, ஆங்காங்கே போராட்டங்களும், ஓரிரு இடங்களில் கொடும்பாவி எரிப்புகளும் நிகழ்ந்தேறின. ’நீலப்படங்களில் நடிப்பது விபசாரமல்லஎன்று சொல்லப்போக, அதற்கும் ஜன்னி கண்டதுபோல பலர் பின்னியெடுத்தனர். அப்புறம், ’பாலியல் வன்முறைஎன்பதுஎதிர்பாராக் கூடல்என்று அவர் சொன்னதாக ஒரு ட்வீட் வெளிவர, அதை ஆதரித்தும் எதிர்த்தும் டிவிக்களில் கூப்பாடு போட்டு, கடைசியில் அவர் பெயரில் யாரோ புரளியைக் கிளப்பியிருக்கிறார்கள் என்று அறிந்ததும், அசடுவழிந்தபடி அமைதியானது விந்தியத்துக்கு அப்பாலிருக்கும் விந்தை ஊடகங்கள். எல்லாவற்றிற்கு மேலாக, அவர் நடித்தஒருவிளம்பரம் படுபரபரப்பாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் அதுல் அஞ்சன் என்பவர்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க சன்னி லியோனியே காரணம்என்று போட்டாரே ஒரு போடு!

ஆனாலும், சன்னி லியோனி அசரவில்லை. கூகிளில் 2015-ம் ஆண்டு, இந்தியர்களால் மிக அதிகமாக தேடப்பட்டவராக, நரேந்திர மோடியையும், சல்மான் கானையும் பின்னுக்குத் தள்ளி, சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்து முந்திக் கொண்டிருக்கிறார். உலகிலேயேஅந்த மாதிரிப் படங்களைப் பார்ப்பதில் மூன்றாவது இடத்திலிருக்கிற இந்தியாவில் இது நிகழ்ந்திருப்பதில் பெரிய வியப்பொன்றுமில்லை. மேலும், ‘இதெல்லாம் மோசம்; தடை பண்ணுகிறோம் என்று சில மாதங்களுக்கு முன்னால் அரசாங்கம் வீராவேசமாகக் கிளம்பி, சில காமெடிகள் செய்தபோது, ‘ஆஹா, இதெல்லாம் அடுக்குமா? மக்கள் எதைப் பார்க்க வேண்டும்; பார்க்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?என்று கூக்குரலிட்டு, தனிமனித சுதந்திரத்துக்காகப் போராடி, இணையத்தில் ஆபாசப்படங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு தடுத்தாட்கொண்ட ஆபத்பாந்தவர்கள்தான் இந்த ஆங்கில ஊடகங்கள். ஆகவே, அவர்களதுபரந்த மனப்பான்மையைப் பறைசாற்றுகிற வேண்டாதவேலை நமக்கு வேண்டாம்.

ஆதலால், இந்த உலகத்தை உய்விக்க வந்த ஊடகவியலாளர்கள், ஒரு நடிகையைப் பேட்டி காணும்போது, அவர்களது விசாலமான பார்வையும், நேர்மறை சிந்தனையும், பாலியல் சமத்துவக் கருத்துக்களும் பஞ்சமின்றிக் காணப்படுமென்றுதானே எதிர்பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது? ஆனால், சி.என்.என்..பி.என் பூபேன் சௌபேயும் சரி; என்.டி.டிவியின் ஷேகர் குப்தாவும் சரி, சிந்தனையாளர்கள் என்ற கோட்டை அவிழ்த்துப்போட்டுவிட்டு, வெறும் கோவணாண்டிகளாய்க் காட்சியளித்தனர். கேள்விகளில் அத்தனை வன்மம்; அத்தனை வக்கிரம்; அத்துடன், சர்வசாதாரணமாக அவர்கள் அன்றாடம் கண்டித்துப் பேசுகிறஆணாதிக்க மனோபாவம்’. இருவரும் கிட்டத்தட்ட, தங்களது பேட்டிகளை ஒரே மாதிரியான கேள்விகளுடன் துவக்குகிறார்கள்.

ஷேகர் குப்தா: உங்கள் கதையைச் சொல்லுங்கள். எல்லாரும் கேட்பதுதான். உங்கள் கதையைச் சொல்லுங்கள்.

பூபேன் சௌபே: தற்சமயம் உங்கள் வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கையில், உங்கள் கடந்தகாலம் குறித்து நீங்கள் வருந்துகிற ஒரு விஷயம் உண்டென்றால் அது எது?

பூபேன் சௌபேயின் கேள்விகள், சன்னி லியோனியின் கடந்தகாலத்தை இலக்காகவே குறிவைத்துச் செலுத்தப்படுகின்றன. இந்தியாவின் பிரபல நடிகர்களுக்கு, சன்னி லியோனியுடன் நடிப்பதில் உள்ள தயக்கம்; அதுல் அஞ்சன் போன்ற சில அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள்; இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு அதிகரித்துவரும் வரவேற்புக்கான பழி; குடும்பப் பெண்கள் பார்க்க விரும்புகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சன்னி லியோனி வருவதை விரும்பாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். ஒருவிதத்தில், இது கண்ணியவான்கள் அவிழ்த்துவிடும் கள்ளத்தனமான அடக்குமுறை என்பதை எப்படி இல்லையென்பது?

இயல்பாக நிகழ்ந்திருக்க வேண்டியதுஇந்தக் கேள்விகளால் தாக்குண்டு, அந்த நடிகை நிலைகுலைந்து போயிருக்க வேண்டியது. ஆனால், அது நடக்கவில்லை. அபத்தமும் குதர்க்கமும் நிறைந்த கேள்விகளுக்கு அமைதியாக, ஒரு புன்னகையுடன் பதிலளித்துக் கொண்டிருந்தார் சன்னி லியோனி.

’எந்த வருத்தமுமில்லை; எல்லா மனிதர்களைப் போலவும், முடிவெடுப்பதில் சில தவறுகள் செய்ததுண்டு. செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றதுமுண்டு.”

’திகில் கதைகள் எதுவும் சொல்வதற்கில்லை. நான் வற்புறுத்தப்படவில்லை; பலாத்காரம் செய்யப்படவில்லை.’

’இது ஆபாசம்; இது தவறு என்றெல்லாம் நினைக்கவில்லை. அழகாயிருந்தது.’

’அரசியல்வாதிகளின் பேச்சில் இடம்பெறுவது பிடித்திருக்கிறது. என்னைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், எல்லாப் பேச்சிலும் என்னையும் சேர்த்து, எல்லாப் பழியையும் என்மீதே போடலாம்.”

ஒரு கட்டத்தில், பூபேன் சௌபே மறமுகமாக, ஒரு ஊடகவியலாளராகத் தான் தோற்றுவிட்டதை கேள்வியாக வெளிப்படுத்துகிறார்.

“உங்களோடு பேசிக் கொண்டிருப்பதே எனது ஒழுக்கத்தைக் கெடுக்கிற காரியமோ என்று யோசிக்கிறேன்.( I’m wondering whether I’m being morally corrupted because I’m interviewing you.)

இந்தப் பேட்டியிலேயே மிகவும் வக்கிரமான, அக்கிரமமான பேச்சு இதுதான். (இந்த இடுகைக்கும் இதுவே தூண்டுகோலாக அமைந்தது). ஒருவரை மெனக்கெட்டு பேட்டியெடுக்கப் போய், ‘உன்னோடு சகவாசம் வைத்துக்கொண்டால் நான் கெட்டுப்போய்விடுவேன்’ என்று ஒருவர் சொல்வது, அதுவும் ஒரு பெண்ணிடம் சொல்வது, எந்த ஊடக தர்மம் ஐயா?

“அப்படியா?” சன்னி லியோனி சற்றும் பதறாமல் பதிலளித்தார். “நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்(Well, I can leave if you want me to!)”

ஆனால், பேட்டியிலிருந்து பாதியில் எழுந்து போகவில்லை; மைக்கை வீசிக் கடாசவில்லை; கண்ணீர் விட்டு அனுதாபத்தை சம்பாதிக்க முற்படவில்லை. பேட்டி முழுமையும், சமூகத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக சுயபிரகடனம் செய்துகொண்ட ஒருவரின் தரங்கெட்ட கேள்விகளுக்கு, சமூகத்தின் இகழ்ச்சிக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிவரும் ஒரு பெண் கண்ணியமான பதில்களை அளித்துவிட்டு முடித்துக் கொண்டார்.

’மஸ்திஜாதே’ என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியாக அமைந்திருக்க வேண்டிய இந்த பேட்டி, எல்லைதாண்டி, தனிமனிதக்கீறலில் போய் முடிந்தது.

”இதை நான் எதிர்பார்க்கவில்லை,” பின்னர் ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் சன்னி லியோனி ஒப்புக்கொண்டார். “பல கேள்விகளுக்கான விடையளிக்க எனக்குத் தெரியவில்லை. ஆனால், எழுந்து செல்ல விரும்பவில்லை. அந்தப் பேட்டியின்போது உணர்ந்ததுபோல, எப்போதும் நான் தனிமையை உணர்ந்ததில்லை. துணைக்கு யாருமில்லாமல், இக்கட்டில் சிக்கியிருப்பதுபோல எப்போதும் கவலைப்பட்டதில்லை.”


ஒரு பேட்டி எவ்வாறெல்லாம் நடத்தப்படக் கூடாது என்பதற்கு, ஊடகவியல் படிப்பில் இந்தப் பேட்டியை ஒரு பாடமாகக் கூட வைக்கலாம். சற்றே, இயல்புக்கு மாறான இறந்தகாலத்திலிருந்து வருகிறவர்களை, அருவருப்புடன் அணுகுகிற உயர்வு மனப்பான்மைக்கு இந்தப் பேட்டி ஒரு சிறந்த ஆவணம். பேட்டி காண்கிறவர் தான் விரும்புவதை மட்டும் வெளிக்கொணர்வதற்கென்று கையாளுகிற இந்த மூர்க்கத்தனம் அநாகரீகத்தின் உச்சகட்டம்.

ஷேகர் குப்தாவும், பூபேன் சௌபேயும் ஒரு விஷயத்தை சவுகரியமாக மறந்ததுபோல பாசாங்கு செய்திருக்கிறார்கள். அது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல தொழில்கள், பிற நாடுகளில் அரசின் அனுமதி, அங்கீகாரத்துடன் ஜாம் ஜாமென்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை. தான் பிறந்த நாட்டில், தான் செய்த சட்டபூர்வமான தொழிலை, இன்னொரு நாட்டிற்கு வந்து ஏன் ஒருவர் குறைவாகப் பேச வேண்டும்? இந்த அடிப்படை முரணைக் கூட அறியாமலா, குளிரூட்டப்பட்ட செய்தியரங்கங்களிலிருந்து கொண்டு தினமும் குய்யோ முறையோவென்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? முடிவில், இந்தப் பேட்டிகளால் இவர்கள் சாதித்ததென்ன?

பொதுப்படையான பார்வை சாமானியர்களுக்கு இருக்கும் அளவிலேதான் ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றது. இவர்கள் அணிந்திருக்கிற கோட்டுசூட்டும், இவர்கள் பேசுகிற சரளமான ஆங்கிலமும், பிரபலங்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து கேள்விகேட்க உதவுகிற இவர்களது படிப்பும் ஒரு சாமானியனுக்கு வாய்த்தால், நிச்சயம் இவர்களைக் காட்டிலும் கண்ணியத்தை வெளிப்படுத்துவான் என்றுதான் எண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அரசியல்வாதிகளிடமும், தொழிலதிபர்களிடமும், மதகுருமார்களிடமும் கேட்க முடியாத கேள்விகளை, திரைப்படத்துறையச் சார்ந்தவர்களிடம், குறிப்பாக நடிகையரிடம் கேட்டு, பரபரப்பைக் கூறுபோட்டு விற்கிற இந்தப் பிழைப்பைவிடவா, சன்னி லியோனின் கடந்தகாலம் கேவலமானது? நிச்சயம் இல்லை.

இவர்களின் சாயத்தை வெளுக்கச் செய்ய, இன்னொரு வாய்ப்பளித்த காரணத்துக்காகவேனும், ‘மஸ்திஜாதே’ வெளியானால், ஒரு படைதிரட்டிக்கொண்டு போய்ப் பார்த்துவிட்டு வரலாம் போலிருக்கிறது.