Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, October 17, 2017

அவர்கள் புளுகுகள்


அவர்கள் புளுகுகள்

ஒருவர் மீது துவேஷம் வந்துவிட்டால், நாம் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும், அது சரியா, தவறா என்று சரிபார்க்காமல் அதை ஆமோதிக்கவும், சிலாகிக்கவும் ஒரு ஜால்ராக்கூட்டமும் இருந்துவிட்டால், கோயபல்ஸுகளின் கொள்ளுப்பேரர்கள் கூட, அரிச்சந்திரர்களின் அவதாரமாகக் கருதப்படுவார்கள். இதற்கு உதாரணமாக ஒரு பதிவர் இருக்கிறார். அவர்கள் உண்மைகள்!

கசாப்புக்கடைக்கு புத்தர் ஸ்டால் என்று பெயரிடுவதுபோல, பொய்யும் புரட்டுமாக எழுதித்தள்ளுகிற ’மதுரைத்தமிழன்’ என்ற இந்த ஆசாமியின் வலைப்பதிவுக்குப் பெயர் ‘அவர்கள் உண்மைகள்.’

இவரது சமீபத்திய பொய்களின் சில சாம்பிள்களை நான் வாசித்து, அவரது பதிவுகளிலிருந்த சில கருத்துக்களுக்கு எதிராக சில கேள்விகளை வைத்தேன். ஆனால், புளுகர் சாமர்த்தியசாலி; ஒரு விஷயம் குறித்து கேள்வி எழுப்பினால், இன்னொரு விஷயத்தைப் பற்றி நம்மிடமே கேள்வி எழுப்புவார். சரி, அதற்கும் பதில் சொன்னால், இன்னொரு கேள்வி!

இவர்களைப் போன்ற அதிபுத்திசாலிகள் வலையுலகத்தில் மட்டுமல்ல; முகநூலிலும் இருக்கிறார்கள். நக்கலடிப்பது, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியின்றி, உண்மையை எதிர்கொள்ளவோ செரிமானம் செய்யவோ வலுவின்றி, வேண்டுமென்றே எழுதுகிறவனுக்கு எரிச்சலூட்டுவதுபோல எதையாவது எழுதி, மிகவும் புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொள்வதில் படுசமர்த்தர்கள். சரி, இவர்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால், இவர்களைப் போன்ற பொய்யர்களின் இடுகைகளைப் படித்துவிட்டு, அதை ஆமோதிக்கிற தொனியில் கருத்திடுகிற எனது நட்புகளாவது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்த இடுகை.

ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். அதைப்போலவே, மதச்சார்பின்மை என்ற பவுடரை மூஞ்சியில் அப்பிக்கொண்டு திரிகிற சில ஆஷாடபூதிகள்தான் தற்போது மோடியைக் குறித்து அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நம்ம புளுகுமாஸ்டரும் அப்படித்தான். தினமும் மோடியைப் பழித்து, அவரது அபிமானிகளைக் கலாய்த்து ஒரு பதிவாவது எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யமாகாததுபோல ஒரு பீதி இவருக்கு.

மோடியைப் பற்றி எழுதினால் உனக்கென்ன?

நீ என்ன ஆர்.எஸ்.எஸ்.ஆசாமியா? பதில்- ‘ஆமாம்’

இந்துத்வா வாதியா? பதில் -’ஆமாம்’

பாஜக-வில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாயா? பதில் -’ஆமாம்’

இவை ஏதும் இல்லையென்றாலும், எனக்கு சரியென்று பட்டால் அதுபற்றி எழுதுவேன். மன்மோகன்சிங் ஆட்சிக்கு ஆட்டம் காண்பித்த அண்ணா ஹஜாரேயையும் நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  நினைவிருக்கிறதா?

இது மதுரைத்தமிழன் என்ற ஒரு தனி ஆசாமிக்கு எதிரான பதிவு மட்டுமல்ல; அவரைப்போலவே, போகிற போக்கில் புரளி கிளப்பிவிட்டு, தரவுகளைக் கேட்டால் பம்முகிற, விபரங்களைக் கொடுத்தால் விழிபிதுங்குகிற, பரபரப்புக்கென்று பதிவுகளை எழுதிவிட்டு பதிலளிக்கவும் திராணியில்லாத ஆர்வக்கோளாறு அப்புசாமிகளுக்கு எதிரான ஒரு பதிவு.

சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல், இந்தியா ஒவ்வொரு துறையிலும் எத்தனை வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடனும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நமது ’அவர்கள் புளுகுகள்’ அந்த விபரங்களையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, ‘வளர்ச்சி குறைந்தது என்று மோடியே சொல்லிவிட்டார்’ என்று ஒற்றைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு தன் வலையில் ஒரு பதிவு போட்டு கம்பு சுற்றிக் கொண்டிருந்தார்.

எனது பின்னூட்டங்களில் நான் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், ஏதேதோ கேள்விகளைக் கேட்டு திசைதிருப்ப முயன்றார். ‘சரி, மோடி பொய் சொல்கிறார். உண்மை என்னவென்று நீங்களாவது சொல்லுங்களேன். அவர் கொடுத்த புள்ளிவிபரங்களில் ஒன்றிரெண்டையாவது தவறு என்று நிரூபியுங்களேன்,’ என்று ஏறக்குறைய சவாலே விடுத்திருந்தேன். ஊஹும், மனிதர் இன்றளவிலும் அதற்கு பதிலளித்த பாடில்லை. மாறாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் நிறுவனம் குறித்து ‘தி வயர்’ என்ற வலைத்தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப்போட்டு, ‘இதற்கு பதில் சொல்லுங்க,’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இறுதியாக அளித்த பதிலுக்கு அவரது எதிர்வினை இல்லை. சோலி முடிஞ்சுது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

மதுரைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்ற ஒரு புளுகரின் முகத்திரையையாவது கிழித்தால்தான், இத்தனை ஆண்டுகள் நானும் பதிவராக இருந்ததற்கு ஒரு பொருள் இருக்குமென்று நினைக்கிறேன்.

அமித்ஷா மகன் குறித்துக் கட்டுரை வெளியிட்ட அந்த வலைத்தளத்தின் மீது 100கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதும், அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட பல தகவல்கள் தவறானவை என்பதை பல நிதிமேலாளர்களும், நிபுணர்களும் வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார்கள் என்பதும் அமெரிக்க்க்காவில் இருக்கிற மதுரைத்தமிழனுக்குத் தெரியுமோ தெரியாதோ? அந்தச் சுட்டிகளை இங்கு போடாலாம்தான்; ஆனால், அவை ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பத்திரிகைகள்; அப்படித்தான் போடுவார்கள் என்று சாதிப்பீர்கள். அப்படியானால், இடதுசாரி சார்புடைய ‘தி வயர்’ கட்டுரையை மட்டும் வேதவாக்காக எடுத்துக்கொள்வீர்களா என்று நான் திருப்பிக் கேட்க நேரிடும்.

இப்போதாவது, அமித்ஷா மகன் விஷயத்தில் என்ன ஊழல் நடந்தது என்று விளக்கி ஒரு பதிவு போடத்தயாரா? அதற்கு பதில்போட நான் தயார்! Come on NRI, show some guts.

உண்மையில் மதுரைத்தமிழனுக்கும், அவரைப் போல பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது சேற்றை வாரி இறைக்கிற வேறு சில பதிவர்களுக்கும் பொருளாதாரம், நிதிமேலாண்மை குறித்து நிறையத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதற்கான சான்றுகளை அவர்களது பதிவுகளில் காண முடியவில்லை. எனது அனுமானம் தவறோ?

ஒரு இஸ்திரிக்கடைக்காரர் ரூ.5000/- முதலீடு செய்து தொழிலைத் தொடங்குகிறார். அவரிடம் தினமும் 100 பேர் சட்டையை இஸ்திரி செய்யக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சட்டைக்கும் தலா ரூ.5/- வாங்குகிறார் என்றால் ஒரு நாளைக்கு அவரது Turnover ரூ.500-, ஒரு மாதத்துக்கு ரூ.15000/-, ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000/-. அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்த லாபமல்ல. அவருக்கு அவரது தொழில் செய்வதற்கான செலவினங்கள் போக மீதமாவதுதான் லாபம். இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு, அந்தக் கட்டுரையைப் படித்தால், அதை எழுதிய அம்மணி ஒரு அரைக்கிறுக்கு என்பது புரிந்திருக்கும். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொண்டு, பெரிய சுயம்புபோல பதிவிடுகிறவர்கள் அரையா, முழுசா என்பதை அறிவுள்ளவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இதுவரை அடுத்தவர்கள் பரப்பிய பொய்யுரைகளைப் பதிவிட்டு வந்தவர், இப்போது புதிதாக ஒரு பொய்யை மிகவும் மெனக்கெட்டுக் கண்டுபிடித்து அதையும் ஒரு பதிவாகப் போட்டிருக்கிறார். அதையும் வாசித்துவிட்டு,  நிறைய நண்பர்கள் வியந்து விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்ன கண்டுபிடிப்பு என்று கேட்கிறீர்களா?

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் ரயில் நிலையமே கட்டப்பட்டது. 1950-ம் ஆண்டுதான் மோடி பிறந்தார். 6-வது வயதில், அதாவது 1956-ல் அவர் அங்கு எப்படி டீ விற்றிருக்க முடியும்?

இதுகுறித்து நான் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி சில மணி நேரங்களாகியும் பிரசுரமாகவில்லை. அதனால்தான், ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். அவனவன் பொய்யை வைத்தே பதிவு போடுகிறபோது, உண்மையை எழுதினால் என்னவாம்?

இவரது புளுகுமூட்டையை அவிழ்ப்போமா?

நான் சீரியஸ் பதிவுகள் எழுதுவதற்கு முன்னர், நிறைய தகவல் சேகரிப்பது வழக்கம். எடுத்தோமோ கவிழ்த்தோமோ என்று கிள்ளிவிட்டுத் துள்ளி ஓடுகிற பழக்கம் எனக்கில்லை.

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் என்ற ரயில் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் அங்கு ரயில் தடமே இல்லையா? அல்லது அப்படியொரு தடமிருந்திருந்தால், அங்கு ரயில் போக்குவரத்தே நடைபெறவில்லையா? அப்படியே நடைபெற்றாலும், அந்த ரயில்கள் வாட்நகரில் நின்றுபோனதா இல்லையா?

மேற்படிக் கேள்விகள் குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி, வேறென்ன, கூகிள் ஸர்ச்சாவது பண்ணிவிட்டுப் பதிவிட்டுத் தொலைத்திருக்கலாம் புளுகு மாஸ்டர்! மோடி மீது உங்களுக்கு இருக்கிற துவேஷம், புளுகுவதில் உங்களுக்கு இருக்கிற அளப்பரிய ஆர்வம், நீங்கள் எது எழுதினாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதற்கென்று நீங்கள் வைத்திருக்கிற ஒரு கூட்டம் - இவையெல்லாம் சேர்ந்து உங்களது அறிவுக்கண்ணை மறைத்து விட்டன.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்நகர் குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டதில் இருக்கிறது. 1887-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அகமதாபாத்- பாலன்பூர் இடையிலான தடத்தில்தான் வாட்நகர் அமைந்திருக்கிறது. இது ராஜ்புடானா ரயில்வே என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. வாட்நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றிருக்கின்றன; பயணிகளை ஏற்றுச் சென்றிருக்கின்றன.

அப்போது பிரிட்டிஷ் அரசு ஆண்டுகொண்டிருந்தது என்பதையாவது புளுகர்கள் அறிந்துவைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வர்த்தகத்துக்காக அவர்கள் சிறிய ஊர்களில் வெறும் நிறுத்தங்களை(Halt) மாத்திரமே வைத்திருந்தார்களே தவிர, கட்டிடம்(Station) எதுவும் எழுப்பவில்லை. முறையான கட்டிடம் 1973-ல் வந்தது என்பது உண்மைதான்.


2005-ல் பிரபல நூல்பதிப்பாளர்களான ‘பென்குயின்’ வெளியிட்டுள்ள, திரு.அச்யுத் யாக்நிக் எழுதியுள்ள ‘Shaping of Modern Gujarat’ என்ற ஆங்கில நூலில் மேற்படித் தகவல்களுக்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட அந்தப் பகுதியின் குறிப்பிட்ட அந்தப் பத்தி உங்களைப் போன்ற புளுகர்களின் பார்வைக்குத் தந்திருக்கிறேன். (பக்கம்.119)

இன்று காழ்ப்புணர்வோடு கரித்துக்கொட்டுகிற ஆங்கில ஊடகங்களில்கூட வாட்நகர் வாசிகள் மோடி தேநீர் விற்றதுகுறித்துப் பேசிய காட்சிகள், அவர் பதவியேற்றபோது ஒளிபரப்பப்பட்டன. இதெல்லாம் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூசாமல் பொய் பேசுகிற உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், ‘தொலைஞ்சு போவுது’ என்று இக்கிக்கி என்று இளித்துக்கொண்டு, தங்களையும் மோடிவிரோதிகள் போலக் காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.

உங்களுக்கு உறுதுணையாக இன்னும் ஓரிரெண்டு பேர் இருக்கிறார்கள். பரிவை.சே.குமார் என்ற இன்னொரு புளுகர். புளுகர் மட்டுமா? தாஜ்மஹாலை தஞ்சை கோவிலுடன் ஒப்பிடுகிறார் இவர். ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டிய பெரியகோவிலைப் புகழாமல் தாஜ்மஹாலை ‘காதல்சின்னம்’ என்று புகழ்கிறோமாம். புளுகர் நம்பர் டூ-வின் கண்டுபிடிப்பு. தாஜ்மஹாலை உலக வரலாற்று ஆசிரியர்கள் எத்தனைபேர் காறி உமிழ்கிறார்கள் என்பதை விரைவில் எழுதப்போகிறேன். காத்திருங்கள்.

நம் தமிழகத்தின் பெருமையாய் இருக்கிற ஒரு பிரம்மாண்டமான அழகை, அது ஒரு கோவில் என்பதற்காக, ஒரு சமாதியுடனா ஒப்பிடுவது? இதை ஆட்சேபிக்காமல் அங்குபோய் ‘ஆமாம் சாமி’ போட்ட பதிவர்களை நேரில் சந்திக்கும்போது அவசியம் கேட்பேன். ’இது உங்களுக்கே நல்லாயிருக்கா?’ - தயாராக இருங்கள்.

புளுகர்களே! மோடி டீ விற்றதை மணிசங்கர் ஐயர் என்ற மறைகழண்ட காங்கிரஸ்காரன் கிண்டல் செய்ததன் பலன் என்ன தெரியுமா? காங்கிரஸ் மொத்தம் ஜெயித்தது 44 இடங்கள். இன்று மக்களவையில் பெரும்பான்மை; மாநிலங்களவையிலும் பெரிய கட்சி பாஜக தான். இன்று இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் எத்தனையென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். இல்லையென்றால், கேட்கிற கேள்விக்குப் பதிலளிக்கிற துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் செய்ய முடியாது என்றால், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். என்னவென்று?

ஒன்று நீங்கள் புளுகர்கள் அல்லது அடிமுட்டாள்கள்.

Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.

Saturday, June 25, 2016

சுவாதி! நான்தான் சாமானியன் பேசுகிறேன்!

photo: indianexpress.com 

ஒரு துர்மரணம்; அதுவும் ஒரு இளம்பெண்ணின் கோரமான படுகொலை என்றால், அதனால் விளையும் பின்விளைவு என்பது இயல்பானது. ஆகையினால், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உனக்கு நிகழ்ந்த பயங்கரம், குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனின் இதயத்திலும் இடியைவிடக் கொடிதாக இறங்குவது. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கொடூர நிகழ்வு நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகாமையில் வசிக்கிறவன் என்பதனால், இந்த நிகழ்வு முகம்தெரியாத ஒரு உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத இழப்பு என்பதையும், இது சராசரி மனிதனின் இயலாமைக்கு இன்னோர் உதாரணம் என்பதனையும், எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டு, ஒரு தனிமனிதனாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பழியையும் ஏற்று, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோரசம்பவத்தால் உயிரிழந்த உனது ஆத்மா அமைதியுற வேண்டுகிறேன். துடைக்கவியலாத உனது குடும்பத்தாரின் துயரத்தில் ஒரு சாமானியனாய் பங்கும் கொள்கிறேன். உனக்கு ஏற்பட்ட இந்த நிலை, பிறிதொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்றும் உளமார வேண்டுகிறேன்.
      ஆனால், ஒவ்வொரு அசாதாரணமான நிகழ்வுக்குப் பிறகும், கையில் சாட்டையுடன் வீறுகொண்டு எழுகிற சில அறிவுஜீவிகள், தாம் சார்ந்திருக்கும் சமூகத்தை வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டு, தத்தம் தலைகளில் ’போலி சமூகப்பொறுப்புடைமை’ என்ற அட்டைக்கிரீடத்தைப் பொருத்திக்கொண்டு அழகுபார்க்கின்றனர். இத்தகைய எரிச்சலூட்டுகிற போலித்தனம் உனது படுகொலைக்குப் பிறகும், தலைதூக்கியிருப்பது சற்றே வேதனையாய் இருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய ஒரு தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தெய்வமாகிவிட்ட நீ இதையும் பொறுப்பாயாக!
      உனது படுகொலை நிகழ்ந்த தினத்தன்று, சென்னையில் மேலும் நான்கு பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினசரிகளை வாசித்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காகப் படுகொலைகள் நிகழ்ந்து வந்திருப்பதும் தெரிந்தே இருக்கும். அவற்றிலும் பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். வீடுபுகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தி மூதாட்டிகளை ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு, பணம், நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து சிலபல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. வேதனை என்னெவென்றால், உனது படுகொலையைத் தொடர்ந்து ‘நான்தான் ஸ்வாதி பேசுகிறேன்’ என்று கட்டுரை எழுதி, சமூகத்துக்குச் சாட்டையடி கொடுக்கிறவர்கள், பிற கொலைகள் நிகழ்ந்தபோது, திரைப்பட விமர்சனங்களை எழுதி, தேசத்தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். 
இறந்தது இளம்பெண்ணோ, மூதாட்டியோ – இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் பிடி தளர்ந்து வருவதன் அறிகுறி என்பதையோ, குற்றவாளிகளின் துணிச்சல் அதிகரித்து வருகிறது என்பதன் அளபீடு என்பதையோ, ஒவ்வொரு சட்டவிரோதமான செயலும் ஏதோ ஒரு குடும்பத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிறது என்பதையோ, ஏதோ ஒரு விதத்தில் பெருகிவருகிற அலட்சியத்தின் பின்விளைவு என்பதனையோ, சில அறிவுஜீவிகளின் ஞானக்கண்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் உறுமீன் வருமளவும் காத்துக்குக் கொண்டிருந்தார்கள் போலும், வாடி நின்று சமூகத்தை வசைபாடுவதற்கு!
      உனக்கு நினைவிருக்கிறதா ஸ்வாதி? புது தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, உலகமே ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்தது. அதே தினத்தன்று தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி கிட்டத்தட்ட அதே மிருகத்தனத்துக்கு ஆளானபோது, அதை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து நாமெல்லாம் ஆதங்கப்பட்டோம். “தில்லி மட்டும்தான் இந்தியாவா? தமிழகத்தில் ஒரு நிர்பயா பலியானால் கேட்க நாதியில்லையா?
      இன்று, தமிழகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “சென்னை மட்டும்தான் தமிழகமா? தென்கோடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் அதுகுறித்துக் கொதித்தெழ எவரும் இல்லையா? ஒரு படித்த இளம் பொறியாளரின் உயிருக்கு அளிக்கிற மதிப்பு, எங்கோ ஒரு பொட்டல் காட்டில் கொலைசெய்யப்படுகிற ஒரு பெண்ணின் உயிருக்கு இல்லையா?
      ’நான்தான் ஸ்வாதி பேசுகிறேன் என்று கட்டுரை எழுதியவர், உனது கனவுகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன்.
 கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் கொலை செய்யப்பட்ட பெண்களுக்கும் கனவுகள் இருந்திருக்கும். அது குறித்து அவருக்குப் பெரிய அக்கறையில்லை; உண்மையில் உனது மரணம் குறித்தும் அவருக்குப் பெரிய அக்கறையில்லை என்பதுதான், என்னை எழுதவைக்கிற தூண்டுகோலாக அமைந்தது. அவரது கட்டுரையிலிருந்து சில துளிகள் உன் பார்வைக்காக….!
உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.
கட்டுரையாளரைப் பொறுத்தவரை ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
ஸ்வாதி! நீ ஒரு படித்த பொறியாளர்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகத்திலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாய்; அந்தப் பணிக்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில்தான் ஒரு கொலைகாரனின் மிருகத்தனத்துக்கு இரையானாய். ஒரு வகையில் நீ பெண்கள் முன்னேற்றத்தின் ஒரு குறியீடு. ஆகையால், உனது படுகொலை பெண்கள் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட களங்கம்; அதுவே ஏதோ ஒரு கிராமத்தில், படிப்பறியாத ஒரு பெண் கொலைசெய்யப்பட்டால், அது குறித்து பெண்கள் முன்னேற்ற ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதை நீ ஏற்றுக் கொள்வாயா?
உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்?
சமூகத்தின் மீது போலியாகக் கோபப்படுகிறவர்கள், சந்தடி சாக்கில் மூன்றாம்தரமான விமர்சனங்களை வைத்து, வாசிப்பவர்களை உசுப்பேற்றுவது வாடிக்கையல்லவா? அந்த உத்தியைத்தான் கட்டுரையாளரும் பயன்படுத்தியிருக்கிறார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அப்போது அந்தப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருந்த எந்த ஆண்மகனுக்கும் ஆண்மையில்லை; அதேபோல, எந்தப் பெண்ணுக்கும் பெண்மையுமில்லை என்று எழுதியிருந்தால், மகளிர் சங்கங்கள் கொடிதூக்கிக்கொண்டு அவரது அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்திருக்கும் என்பதனால், சவுகரியமாக அதைச் சொல்லவில்லை. அனேகமாக, அவர் ஆண்மையில்லை என்று தன்னையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டிருப்பார். (கட்டுரையாளர் கவனிக்க: அது வரிஜினிட்டி அல்ல; விரிலிட்டி.)
சென்னை மட்டுமின்றி, தமிழகமே உனது படுகொலை செய்திகேட்டு பதைபதைத்துக் கொண்டிருக்கையில், உனது பிரேதத்தின் தோளில் துப்பாக்கி வைத்து அவர் நடத்தியிருக்கிற தாக்குதல், உனக்குக் கொச்சையாகப் பட்டிருந்தால், அவர் சார்பாக நானே வருத்தம் தெரிவிக்கிறேன். ஆணல்லவா, உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாவம்!
அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?
 நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் அறிவுஜீவி! உண்மையில், நுங்கம்பாக்கம் உட்பட சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லையென்பதோ, பல பறக்கும் ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதோ, பயணிகளின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்பதோ கட்டுரையாளருக்கு நீ கொலைசெய்யப்படும் வரைக்கும் தெரியாது. தொடர்வண்டிகளில் பயணிக்கிறவர்கள் அன்றாடம் படுகிற அல்லல்கள், பெண்களுக்கு நிகழ்கிற அவலங்கள் இவையெல்லாம் கட்டுரையாளரின் மேலான பார்வைக்குக் கொண்டுசெல்லாத இந்த சமூகம் உண்மையிலேயே ஆண்மையற்ற சமூகம்தான். முன்கூட்டியே அறிந்திருந்தால், கட்டுரையாளர் மேற்கூறிய தவறுகளுக்குப் பொறுப்பானவர்களை அறம்பாடியே அழித்திருப்பார். காரணம், அவரது சமூக அக்கறையானது அவ்வளவு உறுதியானது. மேலொரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.
உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
கட்டுரையாளர் அனேகமாகக் கடவுளாக இருந்தாலும் இருக்கலாம். இறந்தபின்னும் உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை மட்டுமல்ல, உன்னைக் கொலை செய்தவனின் மனம் என்ன நினைக்கக்கூடும் என்பதுகுறித்தும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் அவளது ஒழுக்கத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்ற மிக முற்போக்கான சிந்தனையை அவர் கோடிட்டுக் காட்டியிருப்பதை என்னவென்று வியப்பது?
ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.
இல்லை! ஒரு கொலையைத் தடுக்கிற மன உரமும், உடல் வலுவும் பெறுவதற்கு முன்னர், கட்டுரையாளர் உட்பட அனைவரும் செய்யத்தக்கவை நிரம்ப இருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகளை இழைக்கிறவர்களைக் கண்டும் காணாமலும் போகிற மனப்போக்கை விட்டுவிட்டு, உடனுக்குடன் தட்டிக் கேளுங்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் தொடங்கி அன்றாடம் நம் கண்முன்னே சமூக அலட்சியத்துடன் புழங்குபவர்களைக் கண்டிக்கிற துணிச்சலை வரவழைத்துக் கொள்ளுங்கள். கட்டுரைகள் எழுதுவதோடு நிறுத்தாமல், செயலில் இறங்குங்கள். சமூகத்தைத் திட்டுவதோடு பொறுப்பு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், களத்தில் இறங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு தனிமனிதன் செய்கிற ஒரு சிறிய தவறையாவது சுட்டிக்காட்டி, அவனைத் தடுத்து நிறுத்துங்கள். தவறு செய்தால், பார்ப்பவர்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தை சிறுதுளி பெருவெள்ளமாக்க முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் அளவில் ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஈடுபடுத்துங்கள். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும்; காவல்துறை செய்ய வேண்டும்; நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று பழிபோட்டுவிட்டு ‘என்னால் முடிந்தது புலம்புவதும் சாபமிடுவதும் மட்டும்தான்’ என்று உட்காராமல், முடிந்ததைச் செய்யுங்கள். – இது தானே நீ சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஸ்வாதி?  
      கட்டுரையாளர் மட்டுமல்ல. ‘கொலையைக் கண்டும் கொலையாளியைத் தடுக்காதவர்களும் குற்றவாளிகள்தான்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் இன்னொரு முன்னாள் நடிகை; இன்னாள் அரசியல்வாதி. பெண்களைக் கேவலமாக நடத்துகிறார் என்று கட்சியின் எம்.எல்.ஏக்களே புகார் கொடுக்குமளவுக்கு யோக்கியமான தலைவர் உள்ள கட்சியிலிருந்து கொண்டு, இவர்களெல்லாம் இப்படிப் பேசுவது உன் ஆன்மாவைக் காயப்படுத்துவதன்றி வேறேன்ன ஸ்வாதி?
      கட்டுரையாளரின் முடிவுரையையே முத்தாய்ப்பாய் வைக்கிறேன்.
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.
அப்படி வீழ்ந்து கிடக்கிற சமூகத்தில் ஸ்வாதியும், அவளது மரணத்தை வேடிக்கை பார்த்தவர்களும் மட்டுமல்ல; அதை மையப்படுத்தி சமூகத்தை மட்டும் குற்றம்சாட்டி, அவரவர் கடமைகளைத் தட்டிக்கழிக்கிற கட்டுரையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதை மாற்ற ஒரு சிறு அடியை முன்வைத்து, முனைவதே ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, பெண்களுடன் சகோதரனாய் வளர்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண்ணுக்குத் தகப்பனாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு ஆண்மகனின் கண்ணியத்துக்குப் பெருமை சேர்ப்பதாய் இருக்கும்.

ஸ்வாதி! உன் படுகொலை உறங்கிக்கொண்டிருக்கிற மனசாட்சிகளை உலுக்கி எழுப்புகிற அழைப்புமணியாவதாக!